அத்தியாயம் 11_உயிர் ஓவியம் நீ _ நிறைவு

பகுதி 11
இப்போதெல்லாம் நுவலியின் வீட்டில் தேவையற்று யாரும் நுழைந்து வம்பு பேசுகிறது இல்லை.
இப்போதெல்லாம் அவர்கள் வீட்டில் வைத்த பொருட்கள் வைத்த இடத்தில் நன்றாக இருக்கின்றன. அவற்றை தட்டி விடவோ, திருடவோ , உடைக்கவோ யாரும் வருகிறதில்லை.
இப்போதெல்லாம் அவர்கள் வீட்டின் வருமானம் எவ்வளவென்று வீட்டில் இருக்கின்றவர் தவிர மற்றவர் அலசி ஆராய்வதில்லை.
இப்போதெல்லாம், வீட்டின் முடிவுகளை அகிலன் தன் மனைவியுடன் கலந்தாலோசித்து எடுக்கின்றார்.
இப்போதெல்லாம் அகிலன் தன் மனைவியின் முகம் பார்த்து புன்னகைக்கின்றார். காலையிலும் இரவிலும் வாக்கிங் செல்லவும், நிறைய பேசவும் அவர்களிடத்தில் நேரங்கள் உள்ளன.
இப்போதெல்லாம் தினமும் வீட்டு உறுப்பினர்கள் தங்கள் உணவு மேஜையில் அமர்ந்து அமைதியாக உண்டு எழுகிறார்கள்.
இப்போதெல்லாம் அவர்கள் வீட்டில் யாரும் இரகசியமாக பேச வேண்டிய தேவைகள் இல்லை. பிறர் கேட்கும் படி சத்தமாக பேசிக் கொள்கின்றனர்.
இப்போதெல்லாம் சின்னச் சின்ன சிரிப்பு சப்தங்கள் அவ்வீட்டை மென்மேலும் அழகாக்குகின்றன.
இப்போதெல்லாம் அவர்கள் வீட்டில் எவர் முகத்திலும் கலவரமோ, பயமோ இருப்பதில்லை.
கடந்த நாட்களை குறித்த எண்ணங்கள் மனதில் ஓட, தனது குடும்பத்தில் ஒரு வெளியாளின் தலையீடு எத்தனை வருடங்களாக தங்களது மகிழ்ச்சியை குலைத்து விட்டிருந்தது என நுவலி எண்ணிக் கொண்டாள்.
பெரும்பாலும் பலரும் தங்கள் பெற்றோரை பின்பற்றி எவையெல்லாம் செய்ய வேண்டும் எனக் கற்றுக் கொள்வார்கள் என்றால், நுவலியும் அகத்தியனுமோவெனில் தமது பெற்றோர்களைப் போல எவையெல்லாம் செய்யக் கூடாதென கற்றுக் கொண்டனர் எனலாம்.
நுவலி தனது பட்டப் படிப்பின் இறுதி பரீட்சைகளை நல்ல முறையில் எழுதி தேர்ச்சி பெற்றாள்.
கல்லூரியின் காம்பஸ் இண்டர்வியூவில் அவள் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றிருக்க, உடனே அதே நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைக்குச் செல்லவும் ஆரம்பித்தாள்.
அகத்தியன் தன் படிப்பு நிறைவுற்றதும், புதியதொரு அலுவலகத்தில் மேல்பதவிக்கு தெரிவானான்.


Leave a Reply