Author: Jansi

  • ரௌடி ராக்கம்மா _ சிறுகதை _ ஜான்சி

    Rowdy Rakkamma_Tamil Short Story_Jansi

    ஒரு நொடி அழுகின்றாய் 

    மறு நொடி சிரிக்கின்றாய்…

    உனக்கென்ன?

    நொடிக்கொரு முறை

    செத்து செத்து பிழைப்பவன்

    நானல்லவா?

    பிரபாகர் அவளை ஆழ பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் கூட இந்த சூழ் நிலையில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டுமென்று சுத்தமாக புரியவில்லை.

    அழுதுக் கொண்டிருந்தவள் குழலி, அவர்கள் இருவரின் குடும்பங்களும் அருகருகே வசிக்கின்றனர்.

    அவனை பொருத்த வரையில் ஒன்னா நம்பர் கிறுக்கி. எதற்கெடுத்தாலும் காச்சு மூச்சென்று கத்துவதும், ஓவென அழுகையை வைப்பதுமாக அவளிடம் எல்லாமும் அதிக பட்சம் தான்.

    அவள் முதன் முறை பள்ளிக்கு புறப்பட்ட போது “குழலி பாப்பாவை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என அவன் பெற்றோரும் அவள் பெற்றோரும் சொன்னதில் இருந்து விரும்பியோ விரும்பாமலோ அவளுக்கு அவன் தான் கார்டியன் ஆகிப் போனான்.

    அவன் துணைக்கு இருக்கும் தைரியத்தில் அவள் இழுத்து வைக்காத பிரச்சனைகள் என எதுவும் கிடையாது. பள்ளியின் உணவு இடைவேளையில் அவசர அவசரமாக உண்டு முடித்து அவளை அவன் பார்க்கப் போனால் அந்த ஐந்தாவது மாடியின் படிகளின் ஓரம் இருக்கும் பிடி சுவற்றில் இவள் சொய்ங்க் சொய்ங்க் என சறுக்கு மரம் விளையாடிக் கொண்டு இருப்பாள்.

    பள்ளியில் யாரோ யாரை அடித்தால் இவளுக்கு என்னவாம்? படை திரட்டிப் போய் அவனை ஒரு கை பார்த்து விட்டு வருவாள். இவளைக் கண்டால் அவளின் பெரிய வகுப்பு பையன்களுக்கே அல்லு விடும். அத்தனையாக அத்தனை பேரையும் மிரட்டி வைத்திருந்தாள்.

    “ரௌடி ராக்கம்மா” என அவளுக்கு பட்டப் பெயர் இருப்பது அவனுக்கும் தெரியும். இருந்த போதும் கண்டுக் கொள்ளாமல் நகர்ந்து விடுவான்.

    அவளிடம் என்னவென்று கேட்கப் போய் அவனுக்கு எதற்கு வம்பு? அவனை அவள் அடிக்காமல் இருந்தால் போதாதா?

    எப்படியாகினும் தனக்கு என்ன நடந்தாலும் அவளால் அவனிடம் சொல்லாமல் இருக்க முடியாது.எல்லாரையும் ஒரு கை பார்க்கின்றவள் சலீம் அவனிடம் செய்த சேட்டையில் மட்டும் அவனிடம் வந்து அழுதாள்.

    கேட்டவனுக்கு தலையை எங்கே கொண்டு சென்று முட்டிக்கொள்ளவென தெரியவில்லை. நான்காம் வகுப்பு மாணாக்கர்களாம் இவர்களுக்கு என்ன புரியுமாம்? 

    பள்ளியின் வகுப்பறையில் இவளுக்கு அடுத்த இடத்தில் அமர்ந்திருந்த சலீம் ஏதோ ஒரு இடைவேளையில் அவனது பென்சில் பாக்ஸில் ஒரு ரப்பரையும், ஷார்ப்பனரையும் அருகருகில் வைத்து மெதுவாக நகர்த்திக் கொண்டு,

    “இங்க பாருங்க இதுதான் என் கல்யாண கார், இது நான் என ரப்பரை காட்டியவன்  ஷார்ப்பனரை காட்டி இது குழலி என… எங்க இரண்டு பேருக்கும் கல்யாணமாகிருச்சு. நாங்க இப்ப பாராத் (ஊர்கோலம்) போறோம்” என சொல்லவும் இவனிடம் வந்து குறை படித்தாள்.

    ‘இதற்கு மட்டும் பிரபாகர் எதற்கு வேண்டுமாம்? அவளே சலீமை அடிக்க வேண்டியதுதானே?’ அவன் மனதில் தோன்றியதை அவள் கண்டுக் கொண்டாள் போலும்.

    “ஏ சலீம்… பொறு பிரபா வந்து உன்னை ஒரு கை பார்ப்பான்னு மிரட்டிட்டு வந்திருக்கேன், தயவு செய்து என் மானத்தை காப்பாத்து பிரபா” முட்டை விழிகளை சுழட்டி இவனிடம் அவள் பேசிய விதத்தில் அவனுக்கு சிரிப்பு வர பார்த்தது.

    “போயேன்டா பிரபா, என்னன்னு கேட்டுட்டு வா” அவன் அம்மாவும் சின்னவளுக்கு ஆதரவாக பேச பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டாள்.

    “ஆள் மயக்கி, மூஞ்ச எப்படி வச்சுக்கிறா பாரு” மனதிற்குள் எண்ணிக் கொண்டாலும்

    “அம்மா எனக்கு ஒன்பதாம் வகுப்பு பரீட்சை சீக்கிரமே இருக்கும். நான் இப்ப படிக்கவா? இல்லை இவளுக்காக சண்டை போடவா?”

    “சண்டை போட யார் சொன்னா? சும்மா என்னன்னு கேட்டுட்டு வாயேன்” அம்மா சொன்னது போலெல்லாம் நிகழவில்லை.

    “வாடா வாடா சண்டைக்கு வாடா… என் தலை வந்துட்டார்டா” என வடிவேல் சார் திரைப்படத்தில் வருவது போல,  குழலி அவனை வைத்து படம் காட்டியதில் அந்த சலீம் வெகுண்டெழுந்து வர அவனுக்கு துணைக்கு ஓரிரண்டு பேர் வர அந்த சின்ன பசங்களுடன் தேவையில்லாமல் சண்டையில் ஈடுபட்டு கை கால் சிராய்ப்புகளோடு தான் திரும்ப வந்தான்.

    உண்மை தெரியாமல் குழலியின் பெற்றோர்கள் அவன் நலம் விசாரித்து சென்றது தனிக்கதை.

    இப்படி பள்ளி, கல்லூரி என அவனை தொல்லையாக பின் தொடர்ந்து வந்தவள் அவன் எடுத்த துறைக்கு சம்பந்தமில்லாத வேறு துறைக்கு செல்லவும் விட்டது தொல்லை என நிம்மதியாக இருந்தான்.

    அதெப்படி விடுவேன்? என்பது போல இப்போது அவன் முன்பாக வந்து அழுதுக் கொண்டு இருக்கிறாள் குழலி எனும் கிறுக்கி.அவள் அவ்வப்போது அவன் பெற்றோரை பார்க்க வந்து செல்வாள் தான் ஆனால் இப்போது அவனை தேடி வந்திருந்தாள்.

    ‘தன் வால்த்தனத்தை அலுவலகத்திலும் காட்டி இருப்பாள் வேறென்ன?’ என எண்ணியவாறு அவன் அவளையே பார்த்திருந்தான்.

    “அவன் என் இடுப்பில் கை வச்சுட்டான்” என தான் அழுததற்கு காரணத்தை அவள் சொல்லவும் அந்த அவன் யாரென புரியாமலும் கூட, இவனுக்கு பக்கென சிரிப்புத்தான் வந்தது, சிரிப்பை தன் வாய்க்குள் அடக்கிக் கொண்டான். ‘அவன் சிரிப்பது தெரிந்தால் இந்த ராட்சசி அவனை கொன்றே விடுவாளே?’

    “பதிலுக்கு நீயும் அவன் இடுப்பில் கை வச்சுற வேண்டியதுதானே?” சிரிக்காமல் அவளிடம் கேட்டு வைத்தான். 

    “நானும் அப்படி யோசிச்சேன் தான்” அவன் ஆலோசனைக்கு வெகு தீவிரமாக பதில் சொன்னவளை பார்த்து அவள் யாருடைய இடுப்பையோ கிள்ளுவதாக கற்பனை செய்து பார்க்க அடக்க மாட்டாமல் சிரிப்பு வர அவசரமாக தனது இருக்கையினின்று எழுந்தவன்,

    “ஒரு நிமிசம் வரேன்” என தனது குளியலறைக்கு செல்ல முயல, அவனை முந்திக் கொண்டு அவள் சென்றாள்.

    “எல்லாத்திலயும் ஏட்டிக்கு போட்டி” என எண்ணியவனாக தங்கள் வீட்டின் முதல் தளத்தில் வெளியே நீட்டி கட்டி இருந்த பால்கனி அமைப்பில் சென்று நின்றவன் மறுபடி அந்த இடுப்பும் கிள்ளுதலான கற்பனை நினைவுக்கு வர, அவளை எண்ணி சிரித்துக் கொண்டான். 

    சுற்றியும் கூரையினின்று சிதறிய மழைத் தூரல் இதமாக இருக்க, தனது கை நீட்டி சில மழைத் துளிகளை கையில் ஏந்தி நின்றான். எதிரில் மாடியில் நின்று துணிகளை காய வைக்க மாற்றி போட்டுக் கொண்டிருந்த குழலியின் தாய் இவனை பார்த்து புன்னகைத்தார்.

    “பிரபா, குழலி வந்தால்ல?”

    “ஆமாத்த”

    “என்னமோ மூஞ்ச தூக்கிட்டே இருந்தா?”

    “பார்த்துக்கிறேன்த்த”

    “சரிம்மா” என உள்ளே செல்ல திரும்பும் முன்பாக குழலி அவன் அருகில் வந்து நின்று மழையில் விளையாடினாள்.

    “அம்மா” இங்கிருந்து அழைத்தவளிடம்,

    “என்னடா?” என்றார்.

    “நான் இங்க இருந்து அப்படியே குதிச்சு அந்த பக்கம் வரவா?”

    அவள் அன்னையோ இவளிடம் எப்படி பேசினால் சரிவரும் என எனக்குத் தெரியாதா?  என எண்ணியவராக அவளிடம் “சரி வா…எனக்கென்ன? உன் கால் தான் உடையும்” அலட்டாமல் சொல்லிவிட்டு போக, ஒரு நிமிடம் நின்று யோசித்தவள்.

    “சரி, இப்ப வேணாம், அப்பாட்ட சொல்லி பாலம் கட்ட சொல்லணும்” என இரு வீட்டிற்கும் நடுவில் பாலம் போட திட்டமிட்டவள் நாளை அவன் அலுவலகத்திற்கு அவன் வந்தே ஆக வேண்டுமென சட்ட திட்டமாக சொல்லி விட்டுத்தான் தன் வீட்டிற்கு சென்றாள்.

    அவன் அன்னையும் அவள் சொன்னதை வழிமொழியவும், ‘எல்லாம் விதி’ என எண்ணியவனாக அடுத்த நாள் சாயங்காலம் தனது வேலையை அரக்க பரக்க முடித்து விட்டு அவள் கூறிய வண்ணம் அலுவலக கட்டிடத்தின் கீழே பார்க்கிங்கில் காத்திருந்தான்.

    அப்போதுதான் அவளும் இன்னொருவனுடன் அங்கு வந்தாள்..

    முதன் முறை வேறு ஆண்மகனுடன் அவளை பார்க்கையில் இவனுக்கு ஏதோ ஒரு நெருடல் தோன்ற, அந்த புதிய பொறாமை உணர்வில் அவனது மனம் அவனுக்கே புரிந்தது என்னமொ உண்மைதான். தன்னை வெளிக்காட்டாமல் அமைதியாக அவன் அவளை கவனித்துக் கொண்டு இருந்தான்.

    வந்தவள் பிரபாவின் பக்கம் நின்றுக் கொண்டாள்.

    “ரோமித் இது பிரபா…” என அறிமுகப்படுத்த அவன் புரியாமலும் கூட கை நீட்டினான் வேறு வழியில்லாமல் பிரபாகரும் கை குலுக்கிக் கொண்டான்.

    “ரோமித் நீ வேலைக்கு வந்த புதுசில உங்க வீட்டு உறுப்பினர்கள் குறித்து சொன்ன போது உங்க வீடே உன் சம்பாத்தியத்தில் தான் நடப்பதாக சொன்ன இல்லை?”

    “…”

    “நீ செய்தது என் கிட்ட செய்தது ரொம்ப கேவலமான விசயம், அதை ஹெச் ஆர் கிட்ட சொன்னா உன் வேலையே போயிரும்.ஆனால், உன்னை நம்பி இருக்கிற உன் குடும்பம்… அந்த ஒரே ஒரு விசயத்துக்காகத்தான் இப்ப நான் உன்னை சும்மா விடறேன்.” என பேச்சை தொடர்ந்தவளை,

    ‘பிரபாகரை தன்னை அடிக்கத்தான் அழைத்து வந்திருக்கிறாளோ?’ என எண்ணி அவன் கலவரமாக பார்க்க,

    “இப்ப நீ என்ன செய்யற? நீ செய்ததை எல்லாம் ஒரு மெயிலில் எழுதி இனிமேல் இப்படிப்பட்ட எந்த தவறும் நான் செய்ய மாட்டேன் என குறிப்பிட்டு என் மெயில் ஐடிக்கு அனுப்புற…” 

    என அவனிடம் சொன்னவள் அதுவரை அவளது கையில் ரெக்கார்ட் ஆகிக் கொண்டு இருந்த அலைபேசி கேமராவை அவள் பிரபாவின் கையில் பிடிக்க கொடுத்தாள்.

    ரோமித் அவசரமாக கை நடுங்க அவள் சொன்னபடி எழுதி அவளது  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினான்.

    அவளின் அந்த நிதானமான அணுகுமுறை… முதிர்ச்சியான பேச்சு அந்த புது பரிமாணம் பிரபாகரின் கவனத்தை இன்னுமாய் ஈர்த்தது. 

    “ஓகே ரோமித் இதுவரையிலும் நான் எண்ணியதில் பாதி வேலைதான் ஆகி இருக்கு…” என்றவள் திரும்பி பிரபாவை பார்த்து,

    “ஒழுங்கா கேமராவை பிடி பிரபா… மூஞ்சே தெரியலை” என அவன் கையில் இருந்த கருவியை சரி செய்ய,

    ‘இவளுக்கு கேமரா பிடிக்கத்தான் நீ அவசர அவசரமா உன் அலுவலக வேலையை முடிச்சுட்டு வந்தியாடா?’ என பிரபாகரை அவன் மனசாட்சி படுகேவலமாக திட்டியது.

    ரோமித் முன் தினம் ஏதோ சபலத்தில்அவ்வாறு செய்து விட்ட போதும், அப்போதிருந்தே அவன் பயந்து நடுங்குவது அவனுக்கு மட்டும் தான் தெரியும். அவள் அவனிடம் சொன்னதை கேட்டதும் “பாதி வேலையா? இன்னும் என்ன செய்ய போகின்றாளோ?” பயந்திருந்தான்.

    “ரோமித், நீ செய்தது தப்பு என்று உனக்கு தெரிய வேணாமா? இப்போதைக்கு ஓரளவு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்… ஆனால், என்னிடம் அநாகரீகமாக நடந்துக் கொண்ட உன்னை எப்படி சும்மா விடறது? அது எனக்கு பழக்கமில்லையே?”

    என சொன்னவள் திடீரென ஜாக்கி சானாக மாறி அவனுக்கு முகத்தில் சில தடங்களை பதித்திருந்தாள்.

    அவன் அடித்த அடியில் அவன் உதடு கிழிந்து இரத்தம் கொட்ட, ரோமித் அவளை எதிர்க்கவியலாமல் பார்த்திருந்தான்.

    “இனி என் கிட்ட மட்டும் இல்லை யார் கிட்டயும் இந்த வேலையை வச்சுக்கிடாத புரிஞ்சுதா?” ஒற்றை விரலை ஆட்டி அவனை எச்சரித்தவள் பிரபாகர் கையில் இருந்த கேமராவில் இருந்த அந்த காணொளியை சேமித்துக் கொண்டாள். அதனை ரோமித்திற்குமே வாட்சப்பில் அனுப்பி வைத்தாள்.

    ‘இவ திருந்தவே மாட்டா?’ 

    என பிரபாகரின் மனம் சொன்ன போதும், 

    ‘இவள் எதற்காக அவள் திருந்த வேண்டும்?’

     என்றும் கூட அவன் மனம் கேட்டது.அது யாராயினும் எப்போதும் யாரோ ஒருவர் அவருக்கு துணையாக இருந்துக் கொண்டே இருக்க முடியுமா என்ன? தனது பாதுகாப்பிற்காக அவள் செய்தது சரிதான் என எண்ணிக் கொண்டான்.

    “வா பிரபா நாம வீட்டுக்கு போகலாம்” அவளோ ஒன்றும் நிகழாதது போல அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

    “என்ன போகலாமா? கையில் ஒன்னும் இல்லை வீட்டுக்கு புறப்பட்டுட்டயே? உன் பை எங்க?” கேட்டான்.

    “பை… இன்னிக்கு நான் ஆஃபீஸ்கு பை கொண்டு வரலையே… இதோ என் வாலட், என் ஐடி கார்ட்…இது வண்டி சாவி” காற்சட்டை பையில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து நீட்டி அவனிடம் காட்டியவள் தொடர்ந்தாள்.

    “நான் இன்றைக்கு வீட்டிலிருந்து டிஃபன் கொண்டு வரவில்லை பிரபா… மதியம் ஆஃபீஸ்ல வாங்கி சாப்பிட்டுட்டேன்.அதான் பை இல்லை”

    “…”

    “இந்த ரோமித் செய்தது ஒரு மாதிரி அருவருப்பா இருந்தது…காலையில் இருந்தே ஒரு மாதிரி தோணிட்டே இருந்தது அவனை அடிச்சதுக்கு அப்புறம் இப்பதான் மனம் சமாதானமாச்சு.”

    “அவனை நீயே சமாளிச்சுக்குவன்னு எனக்கு தெரியும். அப்புறம் என்னை எதுக்கு மெனக்கெட்டு அழைச்ச? கேமரா பிடிக்கவா? இந்த வேலைக்கெல்லாம் என் வேலையை ஏன் கெடுக்குற? என் ஆஃபீஸ் வேலை… என் பிராஜக்ட் அதெல்லாம் நீயா செய்வ?” அவளிடம் சலிக்காமல் சலித்தான்.

    “நீங்க கூட இருந்தா எனக்கு ரொம்ப தைரியமா இருக்கும் அதுக்காகத்தான். நீங்க கூட இருந்தா ஐ ஃபீல் குட் யூ க்னோ?” அவள் சொன்ன விதத்தில் அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

    “ரௌடி ராக்கம்மா?” வாய் விட்டே சொல்லி இருந்தான்.

    “ம்ம் உங்களுக்கு தைரியம் கூடிப் போச்சு போலிருக்கே…ஒரு வழியா ரௌடி ராக்கம்மான்னு சொல்லிட்டீங்க…”

    இரண்டாவது முறையும் ங்க சொல்லி மரியாதையாக அவனை அவள் அழைத்திருக்க அவன் ஆச்சரியமாக, 

    “அதிசயமா என் கிட்ட மரியாதையாவெல்லாம் பேசுற? மழை பெய்ய போகுது போ…” என்றான். 

    இருவரும் பேசிக் கொண்டே நடந்து வந்திருக்க அவளது இரு சக்கர வாகனத்தின் அருகில் அழைத்து வந்திருந்தாள்.

    “ஆமா, அம்மாதான் சொன்னாங்க”

    “என்னன்னு?”

    “இனி மரியாதையா பேசணுமாம்”

    “ஏனோ?”

    “இரண்டு வீட்டுக்கும் நடுவில் பாலம் கட்ட போறாங்களாம்”

    அவள் அதிசயமாக வெட்கி சிரித்ததை பார்த்தவனுக்கும் முறுவல் ததும்பியது.

    அவள் தன் பைக்கை எடுத்து ஸ்டார்ட் செய்ய, அவள் பின்னால் அவன் அமர வண்டி வேகம் பிடித்தது… மழைத் தூறல்கள் சாரலாக தூவ முகங்கள் இரண்டும் மலர்ந்திருந்தன.

    நிறைவு