அத்தியாயம் 10_உயிர் ஓவியம் நீ

பகுதி 10
அகத்தியன் அப்பாவை, அம்மாவை சமாதானப்படுத்தி ஓய்வெடுக்க அனுப்பினான்.
நுவலி வேடிக்கை பார்த்து நின்றவர்களின் கேள்விகளுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் இவர்கள் பார்த்து பார்த்து அலங்கரித்த வீட்டில் பரவி கிடந்த தெரு மண்ணை கூட்டி வெளியே தள்ளினாள்.
ஒரு வாளித் தண்ணீரை கப்பில் ஊற்றி ஊற்றி தென்னை மாறால் கழுவி விட்டாள்.
கழுவிய இடங்கள் காய வேண்டி மாப் போட்டு துடைத்து விட்டு கதவை உள்பக்கம் சாற்றி இறுக்கப் பூட்டினாள்.
அங்கங்கே நின்று வேடிக்கை பார்த்தவர்கள் கலைந்துச் சென்றனர்.
அவர்கள் வீட்டின் அன்றைய மகிழ்ச்சி சூழ்நிலை பதட்டமான, சங்கடமான, வருத்தமான சூழ்நிலைக்கு மாறியதில் வீட்டினர் உள்ளமோ களைத்துப் போயிருந்தது.
அகத்தியன் ஒரு பக்கம் தரையில் பாய் விரித்து தலையணை போட்டு படுத்து தூங்க, நுவலி சோபாவில் சரிந்து படுத்தவள் அயர்ந்து தூங்கிப் போனாள்.
வெண்ணிலாவோ காலை முதலாக அதிகப்படியாக செய்த வேலைகளினால் ஏற்கனவே இருந்த உடல் அயர்வில் இருந்தவர். சோலையின் சத்தம் கேட்டு தூக்கக் கலக்கத்தில் எழுந்து பார்க்கவும் சோலை அவரை தூற்றவும் அவமானப்படுத்தவும் அவர்கள் வம்சம் விளங்காது என மண்ணள்ளிப் போடவும் ‘ஐயோ என் பிள்ளைகளுக்காகத்தானே உயிர் வாழறேன்’ என்பவராக அவரது உள்ளம் நைந்து துடிக்க…யாரிடம் ஆறுதல் தேட என புரியாமல் அமைதியாக கண்ணீர் வழிய படுத்திருந்தார்.
மனைவியின் மெல்லிய விசும்பல் சப்தம் கேட்கவும் அகிலன் மனைவியை நெருங்கி அணைத்து முதுகை தட்டிக் கொடுத்தார்.
“அவ சாபம் கொடுத்தாவெல்லாம் பலிக்காது” எனச் சொல்லவும் வெண்ணிலா சத்தமெழுப்பாமல் குலுங்கிக் குலுங்கி அழலானார்.


Leave a Reply