அத்தியாயம் 17_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ! நிறைவுப் பகுதி _ஜான்சி

அத்தியாயம் 17
ஹோட்டலுக்கு முன்பாக வந்து கார் நிற்க அதிலிருந்து இறங்கினர். அன்றைய நாளின் கணக்கை முடித்து அனுப்பினான். தேவைப்பட்டால் அழைக்கச் சொல்லி டிரைவர் தனது எண்ணைக் கொடுக்க சேமித்துக் கொண்டான்.
இருவரும் காரிடாரில் நடந்துக் கொண்டிருக்க…
“ரொம்ப தப்புப் பண்ணிட்டேன்” எனவும் திரும்பிப் பார்த்தான்.
“ம்ம்” நெற்றிச் சுருங்கினானே ஒழிய பதில் சொன்னானில்லை. காலையிலிருந்து அவளுக்கு பதிலே சொல்லாமல் தண்ணிக் காட்டினான். இல்லையில்லை அவளுக்கு மாற்றி மாற்றி இன்ப அதிர்ச்சிகள் அல்லவா கொடுத்து வந்தான். இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் அவளுக்காக வைத்திருக்கின்றானோ? எனும் படபடப்பு ஆலிஸிக்கு.
“ஊமைக் கோட்டானை ஊமைக்கோட்டானாக இருந்ததுக்காகப் பிடிச்சுப் போய் கல்யாணம் செஞ்சது எத்தனை தப்பு?”
கையில் கிடந்த திருமண மோதிரத்தை ஆசையாக உருட்டியபடியே அவனை திட்டிக் கொண்டு இருந்தாள்.
அலங்காரங்கள் வியர்வையில் கலைந்திருக்க அத்தனை அழகு அவளிடம் கொட்டிக் கிடந்தது.அவளை எப்போதும் போல பாராமல் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான்.
அறை வந்ததும் திறந்து உள்ளே நுழைய அதுவரையில் கோபத்தில் படபடத்துக் கொண்டு இருந்தவள் அறையின் அலங்கரிப்பைப் பார்த்து திகைத்தாள். காலையிலிருந்து பேசாமல் தன்னைப் படுத்திக் கொண்டு இருந்தவன் தரும் அதிர்ச்சிகளில் இதுவும் ஒன்றாமா? திகைத்து நின்றாள்.
பூக்களால் அலங்கரிக்கப் பட்ட அவர்கள் படுக்கையறை பெரும் கூச்சத்தை அவளுள் விதைக்க, அவசரமாக முகம் கழுவி வந்தாள். அவனும் அவளின் ஊமைக் கோட்டானும் அவள் பின்னே வந்து நின்றான்.
“ஹாப்பி ஃபர்ஸ்ட் ஈவினிங்க் பொண்டாட்டி”
“ஓ மை காட்” சிவந்த முகத்தை அவள் கரங்களால் மறைத்துக் கொண்டாள்.அவளைப் பார்க்க அவனுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது,
“சந்தோஷமா இருக்கியா ஆலிஸ்”
“ரொம்ப ரொம்ப…”
“…”
“எனக்குச் சொல்லத் தெரியாத அளவுக்கு சந்தோஷமா இருக்கிறேன்… நீங்க நன்ன அப்பரஞ்சி” அவன் மொழியில் அவனைக் கொஞ்ச,
கொஞ்சல்கள் மிஞ்ச, நிறைவான இல்லறம் தொடங்கியது.


Leave a Reply