“அந்த சக்ஸேனா கேஸை எடுத்ததிலிருந்து என்ன ஆகுமோன்னு திக்கு திக்குன்னு இருக்கேன். எதைப் பார்த்தாலும் , யாரைப் பார்த்தாலும் சினிமா வில்லன் போலவே இருக்குது.”
அவன் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல்
“யார் சக்ஸேனா?” என்றாள் ரிஷா.
முறைத்தான் இந்தர்
“அடுத்தவங்க கதையை தெரிஞ்சுக்கிறதில இந்த பொண்ணுங்களுக்கு இருக்கிற அக்கறை இருக்கே? இப்ப அந்த சக்ஸேனா யார்னு உனக்கு தெரிஞ்சு என்ன செய்யணும் சொல்லு.”
“சரி சரி நீ எதுக்கு என் பின்னாடி வர? இதையே நான் உன் கிட்ட செஞ்சிருந்தா ஈவ் டீசிங்க்னு சொல்லி போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் செஞ்சிருக்க மாட்ட? இப்ப நான் உன் மேல ஆடம் டீசிங்க்னு நான் கம்ப்ளெயிண்ட் செஞ்ச்சா என்ன ஆகும்னு பாரு. நானா இருக்கப் போய் பொறுமையா இருக்கேன்.”
“டேய் நீ ரொம்ப பேசறே, சரி இல்ல சொல்லிட்டேன். எனக்கு அங்கே ஒருத்தரைப் பார்த்து பயமா இருந்துச்சு, அதான் நீ ஏறின பஸ்லயே ஏறிட்டேன். எனக்கு இப்ப இந்த மும்பைலயே உன்னை மட்டும் தான் தெரியும் அதனாலத்தான் அப்படி செஞ்சுட்டேன்.”
“நான்… ஈவ் டீசிங்க்? … அதுவும் உன்னைய?” வாந்தி எடுப்பவள் போல முகத்தை வைத்திருந்தவளைப் பார்த்து கடுப்பானது இந்தருக்கு.
தன் உடைகளை ஸ்டைலாக சரிப் படுத்திக் கொண்டு, தலையைக் கோதிக் கொண்டான். அதில் நான் யாருக்கும் குறைந்தவன் இல்லை என்ற சுதாரிப்பு இருந்தது
அவனைக் கவனிக்காமல் ரிஷா தொடர்ந்து பேசினாள்,
“எனக்கு உன்னை மாதிரியே எனக்கும் மனப் பிராந்தி தான் போல இருக்கு. போக வேண்டிய இடத்துக்கு போகாம ரெண்டு பையையும் தூக்கி கிட்டு அலையுறேன் பாரு. பேசாம டாக்ஸி எடுத்தோமா? போனோமான்னு இல்லாம மும்பை டூர் வந்த மாதிரி சுத்திட்டு இருக்கிறேன்” சலிப்பே மிஞ்சி இருந்தது அவளது குரலில்.
அவளது சலிப்பில் மனம் அசைந்ததோ என்னவோ? தமிழ் தாய்மொழி செய்த மாயமோ என்னவோ அவனால் அவளை அப்படி விட்டு விட்டு செல்ல முடியவில்லை.
“சரி சரி விடு இன்னும் நேரமாகலை. நானே உன் அட்ரஸ் பார்த்து உன்னை டாக்ஸி பார்த்து ஏத்தி விட்டுடறேன் டோண்ட் வொர்ரி” என்றவன்
“நீ முதல் முறை இங்கே வந்திருக்கல்ல?”
ஆம் என்று தலையசைத்தாள் ரிஷா.
“ஜீஹீ பீச் ஸ்பெஷல் சாட் ஐட்டம் ஏதாச்சும் சாப்பிடேன், அப்புறமா உன்னை உன் அட்ரஸ்க்கு விட்டுடறேன்“
முற்றிலுமாய் குழப்பமும், எரிச்சலுமான எண்ணங்களில் இருந்தவள் பதிலே பேசாமல் அவன் பின்னாலேயே சென்றாள்.
ஏனோ இந்தரிடம் அவளால் இயல்பாக பேச முடிந்தது. அவள் வீட்டிலே 13 வயது வரை பெரும்பாலும் அவள் வளர்ந்தது ஆண் உறவுகள் கூடவே தான், பள்ளியில் அவளுக்கு அதிகமாய் இருந்ததும் ஆண் தோழர்கள்.
பல வருட தனிமைச் சிறையிலிருந்து விடுபட்ட சுதந்திர உணர்வு அவளின் கட்டுக்களிலிருந்து விடுவித்து மனம் திறந்து பேச வைத்திருந்தது. சீக்கிரம் தான் செல்ல வேண்டிய இடம் சென்று பெற்றோரை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்து விட்டிருந்தது.
பானி பூரி சாப்பிட்டு ஐம்புலன்களும் விழித்து விட்டிருந்தன. காரம் காது வரை எட்டி திகைக்க வைத்தது. உஸ் உஸ் என்றவளாய் தண்ணீரைக் குடித்தாள்.
இன்னும் ஒரு தஹி பூரியையும் சாப்பிட்டவள் வயிறு டொம்மென்றாகவே கோலா (gola) சாப்பிட்டவள் இந்தருக்கும் சேர்த்து அவளே பில் பணத்தைக் கொடுத்தாள்.
சாப்பாடு எல்லா பிரச்சனைகளையும் சிறியதாக்க வல்லது. சுடச் சுட சாட் ஐட்டம்ஸ் மற்றும் குளிர குளிர கோலா சாப்பிட்டதும் மனமே புத்துணர்ச்சி அடைந்து விட்டது.
“இப்போ என்ன அந்த அட்ரஸீக்கு போகணும் அவ்வளவு தானே ப்ராப்ளம் சால்வ்ட்” என மனம் ஆசுவாசமாயிற்று.
‘இதுக்கா இவ்வளவு கவலைப் பட்டேன்?’ என்று யோசித்தாள்?
“சரி வா, டாக்ஸி ஸ்டேண்ட் செல்லலாம்” என அவளை அழைத்துச் சென்றவன்.
“எங்கே போகணும் சொல்லு? என அவளிடம் கேட்கவும், அந்த விசிட்டிங்க் கார்ட் எடுத்து நீட்டினாள்.
அதில் இருந்த அட்ரெஸைப் பார்த்தவன் , “அந்தேரி சாத் பங்களா…ம்ம்” இங்கே இருந்து கொஞ்சம் தூரம் தான்.
“இதில் போன் நம்பர் இருக்கே, நீ போன் செஞ்ச்சு கேட்டயா இல்லையா?” என்றான்.
“என் கிட்டே போன் இல்ல இந்தர், அதான் நேர்லயே போய் பார்த்துக்கலாம்னு…”
என்று இழுத்தவளை விசித்திர ஜந்துப் போலப் பார்த்தவன்.
“போன் இல்லையா?”
“இல்லை.”
“ம்ம்… சரி என் மொபைல்ல கால் செஞ்சு பார்க்கிறேன். ஒரு வேளை நீ எங்கே இருக்கேன்னு அவங்க உன்னை தேடிட்டு இருந்தா என்ன செய்வ?”
அவன் கேட்டதும் தான் யோசித்தாள்.


Leave a Reply