அதற்காக நான் இரயில் நிலையம் வந்த போது தான் அந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. அந்த துப்பாக்கிச் சூடு உன் உயிரை போக்குறதுக்காக உனக்கெதிராக நடந்ததுன்னு இப்பதான் எனக்குப் புரியுது, ஆனால் அப்ப எனக்கு இருந்த பயத்தில நான் ஓடிட்டு இருக்கிற பாதையில நீ நடுவில வர்றேன்னு எரிச்சலா தோணுச்சு அதான் உன்னை இழுத்திட்டு கூடவே கொண்டு போயிட்டேன்.”
“…..”
“அப்போது எனக்கு வந்த ஆபத்தில் நீ மாட்டிக்க கூடாதுன்னு தோணுச்சு. ஆனால், இப்போ புரிந்த உண்மை என்னன்னா உன்னோட ஆபத்தில் நானே வாண்டடா தலையைக் கொடுத்திருந்து இருக்கிறேன்.”
“…..”
“சரி அது என்னவாகவும் இருந்து விட்டு போகட்டும். கண் முன்னாடி ஒருத்தருக்கு ஆபத்துன்னு தெரிந்தும் உன்னை விட்டு விட்டு போக எனக்கு மனதில்லை.”
“…..”
“என்னச் செய்யறது? தமிழச்சியா வேற போயிட்ட” அவளை இலகுவாக்க கிண்டலாய் பேசியவனின் குரலில் நட்பு பாவனை இருந்தது. மேலும் தொடர்ந்தான்.
“நான் சில வருடங்களாதான் மும்பையில் இருக்கிறேன். என் குடும்பம் இருப்பது தமிழகத்தில். என்னைப் பற்றி நான் ஏறத்தாழ எல்லாமுமே சொல்லி விட்டேன். என் மேல் நம்பிக்கை இருந்தால் உன்னைப் பற்றி விபரங்களை இனியாவது சொல்வியா ரிஷா?”
“ம்ம்க்கும்… “
தன் குரலை சரிப்படுத்திக் கொண்டாள் ரிஷா.
“இப்பத்தான்.. ம்க்கும்… இப்பதான் என்னைச் சுற்றி ஆபத்து இருக்குன்னு நான் முழுமையா புரிந்துக் கொண்டேன்னு சொல்லணும்.”
“…..”
“இத்தனை நேரமும் நடந்தது எல்லாம் என்னைக் கொல்வதற்கான முயற்சியாக இருக்க அதை உணராமல் நான் இருந்தது குறித்து ரொம்பவே அவமானமாக உணர்கிறேன் இந்தர்.”
“…..”
“முதல்ல உனக்கு நன்றி சொல்லிக்கிறேன் இந்தர், கூடவே ஸாரியும்.”
“…..”
“யார் எவருன்னே தெரியாத போதும் என் உயிரை ரெண்டு தடவை காப்பாத்திருக்க அதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அப்பப்போ விளையாட்டுக்கு பேசியிருந்தாலும் அனாவசியமா நிறைய நேரம் உன்னை கிண்டலடிச்சிருக்கிறேன் மன்னிச்சுக்கோ… ப்ளீஸ்.”
“ம்ப்ச்ச்… இப்ப இதெல்லாம் எதுக்கு? நீ முதல்ல என்னப் பிரச்சனைன்னு சொல்லு? அதற்கு என்னச் செய்யலாம்னு பார்க்கலாம்?”
“உனக்கே இத்தனை பிரச்சனை இருக்கிற போது நீ என்னைப் பற்றி யோசிக்கிற பார்த்தியா? ரொம்ப நன்றி…” துளிர்த்த கண்ணீரை துடைத்தெடுத்தாள்.
இந்தர் அவளது வார்த்தைகளுக்காக காத்திருப்பதை உணர்ந்து பேச தொடங்கினாள்.
“என்ன விஷயம்னு நீ என் கிட்டே கேட்கிற? ஆனா என்ன விஷயம்னு எனக்கே தெரியாதுன்னு சொன்னா நீ நம்புவியா?”
“ம்ம்…” இந்தரின் நெற்றிச் சுருங்கி மறுபடி சீரானது.
“எதுக்குன்னே தெரியாம என்னை எங்க ஊர் விட்டு தூரமா தனியாகவே வச்சிருந்தாங்க என் பெற்றோர்கள். 13 வயதிலிருந்து இப்ப வரைக்கும் நான் ஷாரதான்னு ஒரு லேடியோடு கூட தனியா டார்ஜிலிங்கில் படித்து வந்தேன்.”
“…..”
“எப்பவாச்சும் அம்மா இல்லன்னா அப்பா என்னை பார்க்க வந்துட்டு போவாங்க, அதுவும் அவங்க ரெண்டு பேரும் என்னை ஒன்னு போல பார்க்க வந்ததே கிடையாது. தனி தனியேதான் வருவாங்க. என்னப் பிரச்சனை? நான் எதுக்கு தனியா இருக்கிறேன்னு நான் கேட்காத நாளில்லை. ஆனா, சத்தியமா சொல்றேன் இந்தர் இன்னிக்கு தேதி வரைக்கும் எனக்கு காரணமே தெரியாது.”
“…..”
தன் மன வருத்தத்தை பகிர்ந்துக் கொள்ள அனுசரணையானதொரு உள்ளம் கிடைத்து விட்டது என்று எண்ணியதாலோ என்னமோ அவளைக் கேளாமலே கண்களினின்று சுரந்து, அவள் மடியில் இருந்த பையில் விழுந்து பட்டுத் தெரித்தது கண்ணீர் .


Leave a Reply