“வா பிரபா நாம வீட்டுக்கு போகலாம்” அவளோ ஒன்றும் நிகழாதது போல அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
“என்ன போகலாமா? கையில் ஒன்னும் இல்லை வீட்டுக்கு புறப்பட்டுட்டயே? உன் பை எங்க?” கேட்டான்.
“பை… இன்னிக்கு நான் ஆஃபீஸ்கு பை கொண்டு வரலையே… இதோ என் வாலட், என் ஐடி கார்ட்…இது வண்டி சாவி” காற்சட்டை பையில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து நீட்டி அவனிடம் காட்டியவள் தொடர்ந்தாள்.
“நான் இன்றைக்கு வீட்டிலிருந்து டிஃபன் கொண்டு வரவில்லை பிரபா… மதியம் ஆஃபீஸ்ல வாங்கி சாப்பிட்டுட்டேன்.அதான் பை இல்லை”
“…”
“இந்த ரோமித் செய்தது ஒரு மாதிரி அருவருப்பா இருந்தது…காலையில் இருந்தே ஒரு மாதிரி தோணிட்டே இருந்தது அவனை அடிச்சதுக்கு அப்புறம் இப்பதான் மனம் சமாதானமாச்சு.”
“அவனை நீயே சமாளிச்சுக்குவன்னு எனக்கு தெரியும். அப்புறம் என்னை எதுக்கு மெனக்கெட்டு அழைச்ச? கேமரா பிடிக்கவா? இந்த வேலைக்கெல்லாம் என் வேலையை ஏன் கெடுக்குற? என் ஆஃபீஸ் வேலை… என் பிராஜக்ட் அதெல்லாம் நீயா செய்வ?” அவளிடம் சலிக்காமல் சலித்தான்.
“நீங்க கூட இருந்தா எனக்கு ரொம்ப தைரியமா இருக்கும் அதுக்காகத்தான். நீங்க கூட இருந்தா ஐ ஃபீல் குட் யூ க்னோ?” அவள் சொன்ன விதத்தில் அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.
“ரௌடி ராக்கம்மா?” வாய் விட்டே சொல்லி இருந்தான்.
“ம்ம் உங்களுக்கு தைரியம் கூடிப் போச்சு போலிருக்கே…ஒரு வழியா ரௌடி ராக்கம்மான்னு சொல்லிட்டீங்க…”
இரண்டாவது முறையும் ங்க சொல்லி மரியாதையாக அவனை அவள் அழைத்திருக்க அவன் ஆச்சரியமாக,
“அதிசயமா என் கிட்ட மரியாதையாவெல்லாம் பேசுற? மழை பெய்ய போகுது போ…” என்றான்.
இருவரும் பேசிக் கொண்டே நடந்து வந்திருக்க அவளது இரு சக்கர வாகனத்தின் அருகில் அழைத்து வந்திருந்தாள்.
“ஆமா, அம்மாதான் சொன்னாங்க”
“என்னன்னு?”
“இனி மரியாதையா பேசணுமாம்”
“ஏனோ?”
“இரண்டு வீட்டுக்கும் நடுவில் பாலம் கட்ட போறாங்களாம்”
அவள் அதிசயமாக வெட்கி சிரித்ததை பார்த்தவனுக்கும் முறுவல் ததும்பியது.
அவள் தன் பைக்கை எடுத்து ஸ்டார்ட் செய்ய, அவள் பின்னால் அவன் அமர வண்டி வேகம் பிடித்தது… மழைத் தூறல்கள் சாரலாக தூவ முகங்கள் இரண்டும் மலர்ந்திருந்தன.
நிறைவு

