அத்தியாயம் 5_மனதோரம் உந்தன் நினைவுகள்

அத்தியாயம் 5
அழகானவை
முகத்தை கல்லென வைத்துக் கொண்டு,
நீ காட்டும் பிரியங்கள் எவ்வளவு அழகானவை!
கேலியான பேச்சுகளுக்குள் வெளிப்படும்
உந்தன் அக்கறைகள் எவ்வளவு அழகானவை!
நீ சொல்லா விட்டாலும் உனை புரிந்து
புன்னகைக்க வைக்கும்
சொல்லப்படாத உந்தன்
அன்புகள் தான் எத்தனை அழகானவை!
அலுவலகத்திற்கு தினம் தோறும் செல்வதும் தான் எந்த வேலைக்காக சென்றாளோ அந்த வேலையை திறம்படச் செய்வதுவும், கார்த்திக் வந்து அழைத்ததும் சென்று அவனருகே அமர்ந்து அவன் சொல்லும் திருத்தங்களை டாகுமெண்டில் செய்வதும் எனக் கழிய நான்கு நாட்கள் கடந்த பின்னர்தான் மீராவிற்கு,‘தான் என்ன செய்துக் கொண்டிருக்கின்றோம்?’ எனும் விழிப்பு நிலை வந்தது.
‘அடப்பாவி, இவன் சும்மா சும்மா என்னை அழைத்து, அருகில் அமர வைத்து எதையாவது பேசிக் கொண்டு விளையாடிக் கொண்டு இருக்கிறான். நான் அந்த அளவிற்கு இவனுக்கு இளப்பமாய் போய் விட்டேனா?’ கோபத்தில் மீராவிற்கு சுறுசுறுவென வந்தது.
அதிலும் பாஸ்கரது சமீபத்திய செயல்களும் அவளை கடுப்பேற்றி இருந்தன. அவன் மிகவும் நல்ல மனிதன்தான் இல்லையென்றுச் சொல்வதற்கில்லை. ஆனால், தன்னிடம் விபரங்கள் கேட்டு அவன் கார்த்திக்கிற்கு சொல்வதாக இவளுக்கு உள்ளுணர்வு சொல்லியது.
அதென்னமோ தெரியவில்லை? கார்த்திக் மேல் அவர்கள் அனைவருக்கும் அப்படி ஒரு பிரமிப்பு? மதிப்பு? ஏன் அப்படி? இவனென்ன அத்தனை பெரிய இவனா? அவன்?
கார்த்திக்குக்கும் பாஸ்கரது டீமிற்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. மீரா கார்த்திக்கின் டீமில் இருந்து அவர்களுக்கு உதவி செய்ய வந்திருப்பதால் அவள் சார்ந்த எல்லா வேலைகளும் சரிவர நடக்கின்றனவா? என பார்க்க வருவது போலத்தான் அவனது வருகைகள் இருக்கும்.
அதனூடே அந்த பெரிய ஃப்ளோரின் மற்றொரு ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு, “மீரா இங்கே வாயேன்… ஒரு வேலை…” என இவளை நான்கு நாட்களாக அலைக்கழித்துக் கொண்டு இருந்தான்.
இதற்கு நடுவில் பாஸ்கரது தகவல் சேகரித்துக் கொடுக்கும் சேவை. குறிப்பாக அவளுக்கு திருமணம் இதுவரை ஆகவில்லை என பாஸ்கர் நான்கு முறைகள் சோதித்து விட்டிருந்தான். அன்றைய தினம் மீராவை கார்த்திக் பார்த்த பார்வையில் இன்னும் அதிகமான வித்தியாசங்கள் இருந்தன.
என்னதான் ஆரம்பத்தில் தன்னைச் சுற்றி நடப்பவைகள் புரியாமல் இருந்தாலும் இப்போது தெளிவாகி இருந்தாளல்லவா? அத்தனையும் மீரா கிரகிக்க ஆரம்பித்தாள்.

Leave a Reply