தன் மீது தன் இயலாமை மீது முதன் முதலாக எழுந்த கழிவிரக்கத்தின் காரணமாய் அது வரையிலும் சுரக்காத கண்ணீர் சுரப்பிகள் சட்டென்று தங்கள் வேலையை துரிதப் படுத்தி சுரந்தன.
தொடர்ந்து அவள் மூக்கும் வடிய புறங்கையால் அதனை துடைத்து தள்ளினாள். மறுபடியும் உறங்கிப் போனாள்.
மூன்றாம் நாள் அவளைச் சுற்றி ஏதேதோ சப்தங்கள் எழுந்தன. அன்று அந்த பெண் மிகவும் பரபரப்பாய் இருந்தாள்.
முன்னறையில் எட்டிப் பார்க்க, ஏதோ ஹோமம் வளர்க்கப் பட்டுக் கொண்டு இருந்தது. புரோகிதர் ஒருவர் காணப் பட்டார். பூக்களும், பழங்களும் இன்னும் சிலப் பொருட்களும் அந்த இடத்தை வித்தியாசப்படுத்திக் காட்டின.
அவசரமாய் அவளை அங்கிருந்த மறைவான பகுதிக்கு கொண்டு சென்ற அந்த பெண், கடந்த மூன்று நாளாய் அவள் அணிந்திருந்த உடையை கழற்றவும், அவள் கையில் இருந்த உடையை அணியும் படியும் அவளிடம் பேசியும், சைகை மொழியாலும் சொன்னாள்.
அவளது நாட்டுப்புற மராத்தி மொழி ரிஷாவுக்கு புரியவில்லை.
அவள் கையிலிருந்த உடையை வாங்கிப் பார்த்தாள் ரிஷா. அது பட்டுப் புடவை சற்று விலை அதிகமான புடவை, நெற்றிச் சுருங்கியது. பட்டுப்புடவையா எனக்கா? ஏனாம்? யாராக இருக்கும்? எதற்காக?
மூளை மறத்தவள் போல இருந்தவளை, அந்தப் பெண் அவளை நடுவில் நிற்க விட்டு தனக்கு தெரிந்த வகையில், அவளை சுற்றி சுற்றி வந்து, அரை குறையாகச் சுற்றி அந்த உடை உடுக்க வைத்தாள்.
ரிஷாவிற்கு குழப்பத்திற்கு மேலாக குழப்பம். உடலிலும் மனதிலும் வலுவற்றவளாய், ‘எதிர்த்துப் போராடி எங்குச் செல்வது?’ என்ற நிலையில் இருந்தாள்.
‘அம்மா, அப்பா உயிரோடு தான் இருக்கிறீங்களா? உங்களை நான் எப்போதாவது உயிரோடு பார்ப்பேனா? என்னோடு இங்கு என்ன நடக்கப் போகின்றதோ தெரியவில்லையே?’
துப்பாக்கிகள், தோட்டாக்கள் எனும் போது உயிர் மட்டும் போகும் என்றவரை அவளுக்கு மற்ற கலக்கங்கள் ஏதுமில்லை. அப்போது கூட இந்தரோடு அவளால் சிரித்துப் பேச முடிந்ததே? நல்ல உடை உடுக்கச் செய்ததும் கரகரவென்று நீர் சுரந்து முகம் நனைத்தது.
தன்னந்தனியளாய் என்னை எந்த கொடுமைக்கு ஆளாக்க கொண்டு வந்திருக்கிறார்களோ? பெருமூச்செழுந்தது. என் உயிரை அதற்குள் நான் போக்கிக் கொள்ளவும் வழியில்லையே. அந்தப் பெண்மணி இழுத்த இழுப்பில் அவள் சென்றுக் கொண்டிருந்தாள்.
முன்னறைக்கு வந்தனர், அவளை புரோகிதர் முன்பு அமர வைத்ததும் திகைத்து அமர்ந்தாள். அக்கம் பக்கம் பார்த்தாள் வேறு யாரும் இல்லையே?
ஏன்னடா தம்பி உனக்கு வெக்கமா? கல்யாணம்னாலே இந்த பசங்களுக்கு எப்படித்தான் வெக்கம் வந்திடுதோ? ஏற்கெனவே, அறிந்த குரல்கள் இரண்டும் அருகில் வரவும், அவள் கண்கள் தெரிக்கும் வண்ணம் விரிந்தன. அவளருகில் மணமகன் இருக்க வேண்டிய இடத்தில் வைக்கப் பட்ட அதுகளைக் கண்டதும் வீலென அலறிச் சரிந்தாள். அவள் நினைவுத் தப்பியது…
‘அப்படின்னா? அது…’ ரிஷா எதையோ தன் நினைவில்… பல வருடங்களுக்கு முந்தைய தன் நினைவில் தேடிக் கொண்டிருந்தாள் சுய நினைவின்றி.
தொடரும்


Leave a Reply