அத்தியாயம் 5_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி

அத்தியாயம் 5
அடுத்த நாள் புது ப்ரொஜெக்டின் புது குழுவை தலைமை ஏற்கப் போகும் நாள். அவளது புது டீம் மெம்பர்களுடன் அறிமுகம் செய்து, வேலை குறித்த விபரங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்தாள். ப்ரொஜெக்ட் குறித்த எதிர்பார்ப்புகள், பொதுவான நடைமுறைகள் எல்லாம் அனைவரோடும் ஆலிஸ் பகிர்ந்த பின் அன்றைய வேலையை ஆரம்பித்தனர். அவர்கள் டீமின் மேனேஜர் மணிவண்ணனும் அன்று வேலையின் முதல் நாள் ஆதலின் காலையிலேயே வந்து இருக்க, அன்றைய தின வேலையானது திட்டமிட்டாற் போல அக்குழுவிற்கு ஒரு சோதனை ஓட்டம் போலவே நடைப்பெற்றது.
கிளையன்டின் எதிர்பார்ப்புகள் எவை? தேவையானவை என்னென்ன? தடைகள் என்ன? அவற்றை நீக்க செய்ய வேண்டியவைகள் என்ன? என்பதைக் குறித்து அறிய உதவும் வண்ணம் அன்றைய தினம் வேலை அமைந்தது.
மெது மெதுவாக அவளை வேலை உள்ளே இழுக்க ஆரம்பித்தது. காலை உணவிற்கான நேரம் அவளுடைய புது டீம் மெம்பர்கள் அனைவரும் சாப்பிட புறப்பட்டுச் சென்று இருக்க, ஆலிஸ் தன்னுடைய வேலை காரணமாக அங்கிருந்து நகர முடியாதவளாக இருந்தாள்.
சட்டென்று யோசனை வரவும் இந்நேரம் அவர்களும் காஃபேடேரியாவில் இருக்க வேண்டும் என்று எண்ணியவளாகத் தன்னுடைய முந்தைய டீமின் வாட்ஸ் அப் குழுவிற்குச் செய்தியை தட்டிவிட்டாள்.
“டேய் யாராவது அக்காவுக்கு ஒரு டீயும், ரிசப்ஷன்லருந்து ஒரு தலைவலி மாத்திரையும் வாங்கிட்டு வாங்கடா”
கதிர் கலாய்த்தான், “யார்டா யார் இந்த அக்கா? டீ ஆர்டர் எல்லாம் கொடுக்குது. நாம ஏதாச்சும் டீ பிஸினஸ் ஆரம்பிச்சிருக்கோமா என்ன?”
ஆலிஸ், “இதோ வரேண்டா” எனத் துப்பாக்கி ஸ்மைலிகளாக அனுப்பி முறைக்க,
எதிரில் இருந்து வெடிகுண்டுகள் பறந்து வர,
கத்தி, கடப்பாரை, வாள், அம்பு எனத் தீவிரமாகச் சண்டை போட்டுக் கொண்டிருக்க,
அவள் நெற்றியை இதமாய் நீவி விட்டதொரு கரம். மற்றொரு நபர் அவள் டெஸ்கில் டீயையும், சாண்ட்விச்சையும், வலி மாத்திரையையும் வைக்க ஆலிஸோ வெகு தீவிரமாய் வாட்சப் சண்டையில் இறங்கி இருந்தாள்.
“அக்கா போதும்” தலையை நீவி விட்ட வருணா மொபைலை பிடுங்கி தன் கையில் வைத்துக் கொண்டாள்.
“சாப்பிடுக்கா …” டீ கொண்டு வந்த சுதிர் ஆலிஸை கண்டித்தான். அவளோ தன் பசி புரிய, வழக்கமான அதே கள்ளத்தனத்தோடு டெஸ்கில் அவசரமாய்ச் சாப்பிட்டு முடித்தாள்.


Leave a Reply