6. Mudan muraiyaga paartha pothu…_ Short Story_Jansi

6. முதன் முறையாக பார்த்த போது…_சிறுகதை_ஜான்சி

முதன் முறையாக பார்த்த போது…

                தெரியாத்தனமா இந்த கார்ல ஏறிட்டோம் போலிருக்கே?!!, இப்போ என்னச் செய்யிறது என்று சரண்யா பதட்டத்தில் தன்னுடைய நகத்தைக் கடிப்பதா இல்லை வேண்டாமா? என்கிற முக்கிய ஆலோசனையில் விரல்களை வாய்க்கு கொண்டுச் செல்வதும், ச்சீ எச்சி என எண்ணியவளாக திருப்புவதுமாக இருந்தாள். பெற்றோர்கள் ஒரு மாதம் முன்னரே ஊருக்கு வந்திருக்க, தம்பியோடு கல்லூரியின் இறுதித் தேர்வை எழுதி முடித்து ஊருக்கு வந்தவளுக்கு வந்த ஒரு வாரத்தில் பெற்றோர்களுடன் திரும்ப செல்ல வேண்டியிருந்தது. வாரம் முழுவதும் செல்ல வேண்டியிருந்த எல்லாவிடமும் சென்று வந்திருக்க பெரியம்மாவை மட்டும் போய் சந்திக்க அவளுக்கு அன்று வரை நேரம் கிட்டியிருக்கவில்லை.

அதுதான் நாங்க அவங்களை பார்த்துட்டு வந்துட்டோமே? நீ எதுக்கு போகிற? பேக்கிங்க் செய்ய வேண்டியிருக்கு, அடுத்த தடவை பார்க்கலாம் என பெற்றோர்கள் சொல்ல, இவ்வளவு தூரம் பயணித்து வந்த பின்னர் தன்னுடைய அன்பு பெரியம்மாவை சந்திக்காமல் எப்படி? என்று அவர்களிடம் பிடிவாதம் பிடித்து தம்பி அவளுடன் வர சம்மதிக்காததால் முதல் முறையாக தனியாக பயணித்து, அரை மணி நேரத் தொலைவில் இருந்த பெரியம்மா ஊருக்கு அவள் வந்திருந்தாள்.

     பெரியப்பா இருக்கும் வரை அவர்கள் குடும்பங்கள் எல்லாம் அருகருகில் ஹைதராபாதில் இருந்தவர்கள் தானே? அவர் காலமானதன் பின்னால் மகனோடு இப்போது ஊரில் வந்து செட்டிலாகி விட்டிருந்தார். அவர்களுக்கு பெண்குழந்தை இல்லாத காரணத்தால் சரண்யாவே அவருக்கு செல்லம் எனலாம். சின்ன சின்னப் பரிசுகள், திண்பண்டம் என்று சிறுவயது முதலே அவ்வளவாக செல்லம் கொஞ்சியவரல்லவா?

    இரண்டு கிட்னியும் பழுதாகி விட்டது , அடுத்த முறை பார்க்க வரும் போது இருப்பாரோ மாட்டாரோ? என்கிற சூழ்நிலையில் அவளால் எப்படி அவரைப் பார்க்காமல் செல்ல முடியும்? அவ்வளவு உடல் நோயிலும் இன்னமும் படுக்கையில் கிடக்காமல் சின்னச் சின்ன வேலைகளைச் செய்துக் கொண்டு, தன்னுடைய வேலைகளை கவனித்துக் கொண்டு, யாருக்கும் சிரமம் கொடுக்காமல் வீட்டிற்குள் நடமாடிக் கொண்டிருந்தவரைப் பார்த்தபோது டாக்டர் அவர் குறித்து வியப்பாக சொன்னதில் வியப்பேதுமில்லை என்றே தோன்றியது.

   அவர் நோய் குறித்து எதையும் அதிகமாக குறிப்பிடாமல், அன்பாக அளவளாவிக் கொண்டு இருந்ததில் நேரம் கடந்ததே தெரியவில்லை. 7 மணி தானே என்று அலட்சியமாக ரோட்டிற்கு வந்தால், ஒரு மணி நேரமாக பஸ்ஸையோ, வேனையோ கண்ணில் காண இயலவில்லை. இவள் இங்கு வந்த நேரம் பெரியம்மா மகன் வெளியூர் சென்றிருக்க உடல் நலமில்லாதவர் தன்னோடு பஸ் ஸ்டாண்டில் இருப்பது வேறு அவளுக்கு சங்கடமாக இருந்தது.

     அவரை சந்திக்க வந்து விட்டு சிரமப் படுத்துகின்றோமோ என தவித்திருக்க, இந்த ஊரில் 8 மணிக்கே ஆளரவமில்லையே? பெரியம்மாவை வீட்டிற்கு போகச் சொல்லிவிட்டு தன்னந்தனியாக பஸ் ஸ்டாண்டில் நின்று பஸ் பிடித்து எப்படிச் செல்வது என்று திகைத்துக் கொண்டிருக்கையில் தான் அந்த கார் அங்கிருந்து கடந்துச் செல்லவிருந்தது.

     பெரியம்மா காரை நிறுத்தி அவளை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார்கள்.

“தம்பி போகிற வழியில் பக்கத்து ஊர்தான், கொண்டு விட்டுடுப்பா’ என என்னச் சொல்வது என்றேப் புரியாமல் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள். பெரியம்மாவிடம் விடைப் பெற்றுச் சென்றாள்.

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!