பெற்றோர்கள் அவளை அவளின் வாழ்வின் அடுத்த கட்டத்திற்க்கு அழைத்துச் செல்ல முயல, முதலில் அந்த பையனோடு பேசிக் கொள்ளம்மா, உனக்கு பிடித்திருந்தால் மேற்கொண்டு பார்க்கலாம், ஒண்ணும் கட்டாயமில்லை என்றவரின் வார்த்தைக்கு மறுப்பேது சொல்ல?
புகைப்படமொன்றும் தரவில்லை, பிரவீர் என்று பெயர் சொன்னதோடு சரி, மற்ற எல்லா விபரங்களையும் அவளேக் கேட்டுக் கொள்ள வேண்டுமாம், எல்லாமும் முதலிலேயே பெரியவர்கள் சொல்லி விட்டால் அவர்களுக்கு நேரில் பேசுவதில் எதுவும் சுவாரசியம் இருக்காதாம். அதிலும் துணைக்கு தான் அவளோடு கூட வராமல் தனியாக போய் சந்திக்க சொல்லவும் அவளுக்கு திடீரென்று அப்பா ரொம்பவே முற்போகாகக ஆகி விட்டது போலத் தோன்றியது.
ஆஃபீஸிலிருந்து வரும் வழியில் அந்த குறிப்பிட்ட ரெஸ்டாரெண்டில் சந்திப்பதாக ஏற்பாடு. வேறு விபரம் தராவிட்டாலும் நல்லவேளை போன் நம்பராவது தந்திருக்கிறார்…என்று அப்பா குறித்து சலிப்பாக எண்ணியவளாய் போனை அழுத்துமுன் பிரவீரின் நம்பரிலிருந்து கால் வந்தது
.
“சரண்யா உள்ளே வந்து லெஃப்ட் கார்னர்ல பாரு, லாஸ்ட் டேபிள்ல இருக்கேன் வா” என்றது ஆளுமையான குரல். சினிமாவில் ஹீரோ என்ட்ரிக்காக காத்திருப்பது போல இருந்தது அவள் நிலை.
முதலில் பேர், இப்போ குரல், இனிமேல்தான் ஆளைப் பர்க்க வேண்டும் என்று தயங்கிக் கொண்டு முன்னேற, கண்ணில் நட்பு பாவனை மிளிர அவளை வரவேற்பதற்காய் எழுந்து நின்று, “சரண்யா இதோ இங்கேதான்” என்றான் பிரவீர்.
ஹேய் இது காட்டானாச்சே, ட்மால் டுமீல் காதுக்குள் பிஜிஎம் ஒலித்தது. கச்சிதமான முடிவெட்டு, வெகு நாகரீகமான தோற்றம், ஜீன்ஸ் டி ஷர்ட்டில் முறுக்கு தெரித்த புஜங்களுடன் வெகு வசீகரமாய் இருந்தான். மொத்தத்தில் அன்றைக்கும் இன்றைக்கும் அவனிடம் மாறாத விஷயமாக இருந்த அந்த பெரிய மீசையைத் தவிர வேறெல்லாம் மாறிப் போயிருந்தது, அவனை அடையாளம் கண்டுக் கொள்ள அதுவே உதவியாகவும் இருந்தது.
வா சரண்யா, உட்கார் என்றவன் வெகு இயல்பாக அவளோடு உரையாடிக் கொண்டிருந்தான்.
பேச்சு வாக்கில் தானும் அவன் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பதை எண்ணி சரன்யாவிற்கு உள்ளூர அச்சமாகவே இருந்தது.
:என்ன இவன் ரொம்ப தெரிந்தமாதிரி பேசிக் கொண்டு இருக்கின்றான், நானும் பதில் கொடுத்துக் கொண்டு இருக்கின்றேனே? என்று சிந்திக்கையிலேயே பேச்சு அவர்கள் முதல் சந்திப்பை பற்றி திரும்பியது. அச்சச்சோ அவன் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றானோ? தானாகவே அவள் தலைத் தாழ்ந்தது.
“அன்னிக்கு உன்னோட ப்ரெசென்ஸ் ஆஃப் மைண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சது சரண்யா” என்றவனின் குரலில் நம்பிக்கையில்லாமல் தலையை உயர்த்தினாள்.
அன்னிக்கு நான் சட்டவிரோதமான ஒரு கும்பலை வளைச்சுப் பிடிக்கிறதுக்காக தான் போயிட்டு இருந்தேன் அதுக்கு தான் கொஞ்சம் தோற்றத்தை மாற்றிக் கிட்டேன். அவர்களைப் பற்றி கிடைத்த தகவல் படி கொஞ்சம் தூரமாக பயணம் செய்கிற திட்டம் தான் இருந்தது. இப்படி பாதிவழியிலெயே பிரச்சினை வரும்னு தெரிஞ்சிருந்தா, அன்னிக்கு உன்னை காரில் ஏற்றியிருந்திருக்க மாட்டேன்.
அப்போ சாயங்காலம் ரொம்ப நேரமாகிட்டு நீயும் மிரண்டு போய் நின்னே, உங்க பெரியம்மா கேட்டுக் கொண்டதை என்னால அப்போ மறுக்க முடியலை.
சில மாதங்கள் முன்னே மறைந்து விட்டிருந்த பெரியம்மா நினைவில் அவள் முகம் தாழ்த்த,
“நான் அவங்களை ஏற்கெனவே பார்த்து பேசினேன், உன்னைக் கட்டிக்க விருப்ப படறதா சொன்னதும் ரொம்ப சந்தோஷப் பட்டாங்க” என்றவனை வியப்பாய் பார்த்தாள்.
“என்ன நம்ப முடியலையா அன்றைக்கே உங்க அப்பாக் கிட்ட விபரம் கேட்டுட்டே தானே போனேன் என்றவனை நம்ப முடியாமல் விழித்தாள். என்ன இவனோடு ஒரு அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம் பிரயாணம் செய்திருப்போமா? அதற்குள்ளாக எப்படி இவன் என்னை திருமணம் செய்ய முடிவெடுத்தான். என்ற கேள்வி அவளில் தொக்கி நிற்க, அவள் முகபாவனையைக் கண்டுக் கொண்டவனாய் தொடர்ந்தான்.


Leave a Reply