அத்தியாயம் 13_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி

அத்தியாயம் 13
சுந்தர் தன் கைகளில் மாற்றி மாற்றி கரண்ட் ஷாக் கொடுத்துக் கொண்டு இருந்ததும், அப்போது அவளை பார்த்த பார்வையும் கண்ட ரிஷாவுக்கு அதுவரையிலும் அவள் அறிந்திராத சுந்தரின் மற்றொரு ரூபம் நடு நடுக்கத்தையே ஏற்படுத்தியது.
“ஐயோ வேண்டாம் அத்தான் கரண்ட்லருந்து கையை எடுங்க எடுங்க?”
கரண்ட் அவனுக்கு பாய்ந்து விடும் என்கிற பயத்தில் அவள் குரல் கொடுத்துக் கொண்டிருக்க, அவனோ சிரிக்கிறான், அது ஒரு வகையான குரூரச் சிரிப்பு, கனவிலும் கூட அவளை அவன் சிரிப்பு மிரட்டியது.
சுந்தருக்கு வேண்டுமென்றால் அது அவன் காதலின் தீவிரம், அதனால் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம். ஆனால், தன்னுடைய நடவடிக்கைகள் எதிரில் இருப்பவருக்கு, அதுவும் காதலென்று வந்த பின்னரும் கூட தன்னை மட்டுமல்லாமல் தான் நேசிக்கும் நபர், அவரின் மனநிலை என்னவென்று அறிவதை அவன் முக்கியமாக எண்ணவில்லை.
இருபது வயதை தொடப் போகும் தன்னுடைய மன முதிர்ச்சிக்கு ஏற்ப சிந்தித்ததைப் போலவே, 12 வயது பெண் ரிஷாவும் சிந்திக்க வேண்டும் என அவன் எதிர்பார்த்ததை தான் என்னவென்றுச் சொல்வது?
சுந்தர் மற்றும் ரிஷா தனித்திருந்த நேரத்தில் அந்த கரண்ட் ஷாக் விஷயம் நிகழ்ந்தது என்றதாலோ என்னமோ இது குறித்து செல்வி அறியாமல் போனார். ரிஷாவும் தனக்குள்ளே குழம்பிப் போய் அதனை யாரிடமும் சொல்லவில்லை. வீட்டில் கூடிய விரைவில் ஒரு சுனாமி வருவதற்கான முன்னோட்டங்கள் செல்விக்கு புரியாமலேயே போயின.
நாட்கள் கடந்தன, தனக்கு ஒன்று என்றால் மாமன் மகளுக்கு துடிக்கின்றதே? இந்த துடிப்பிற்கு பெயர் காதல் தான் என சுந்தர் ரிஷாவின் மன நிலையை வரித்துக் கொண்டான். ஆனால், ரிஷாவின் துடிப்பு மிகவும் சாதாரணமானது என்பதையும், இவன் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் அவர்களுக்கும் கூட ஷாக் அடித்து விடக் கூடாதென அவள் இப்படியே துடித்திருப்பாள் என்பதையும் உணராமல் போனான்.
அவன் வளர்ந்த கிராமத்தின் பார்வையில் அவனைப் பொறுத்தவரையில் திருமணமாவதற்கு பெண்களுக்கான தகுதி வயதுக்கு வருவது அந்த தகுதியை ரிஷா அடைந்து விட்டாள். திருமணமாவதற்காக ஆண்களுக்கான தகுதி வேலைக்கு செல்வது அதன் தகுதியை தானும் ஏற்கெனவே அடைந்துக் கொண்டாயிற்று.
சுந்தரைப் பொருத்த மட்டில் அவனும் ரிஷாவும் ஒருவரை ஒருவர் விரும்பவும் செய்கிறார்கள், இனி அவர்கள் திருமணத்திற்கு தடையாய் எதுவுமே இருக்க வாய்ப்பில்லையே?
எனவே, ஊருக்கு செல்லும்போது அம்மா அப்பாவிடம் பேசி, மாமாவிடம் பெண் கேட்டு, ரிஷாவை உடனே திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனதிற்குள்ளாக தீர்மானித்தான்.


Leave a Reply