“என்னதான் சொல்லு… முன்பக்கம் மட்டுமா? பின்பக்கமும் அடி தூளு. நாளுக்கு நாள் …” என தன் எதையோ வாய்க்குள்ளாக அசிங்கமாக முனகினான். “முன்னே விட்டு பின்னே நடக்குறது கூட பார்க்க குஜாலா தான் இருக்கு…” இன்னும் என்னென்ன சொல்லியிருப்பானோ?
“மஞ்சு அக்கா” … தன் கணீர் குரலில் அழைத்தாள் ஆலிஸ்.
“என்ன ஆலிஸ் பாப்பா” என்றவாறு உருண்டு திரண்ட ஒரு உருவம் கீழ் வரிசை வீடுகளில் ஒன்றிலிருந்து வெளி வந்தது. அவள் வேறு யாரும் அல்ல, குமரேஷின் மனைவிதான்.தங்கள் குலத்தை செழிக்க வைக்க வாரிசுகளைப் பெற்று, தானும் உயிர் பிழைத்து வர தான் பட்ட உடல் சிரமங்களால் இரண்டு சிசேரியன்களால் கொடி இடையாளாக இருந்தவள் கொடி படரும் மர இடையாளாகிப் பருத்துப் போயிருந்தாள்.
காலை எழுந்து தினம் மஞ்சள் தேய்த்து குளித்து, வீட்டு வேலைகளை அரக்கப் பரக்க செய்து, பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கும், அலுவல் செல்லும் கணவனுக்கும் நாக்குக்கு ருசியாக சமைத்துப் போட்டு, மிச்சம் மீதிகளை வயிற்றுக்குப் போட்டு வாழ்கின்ற இந்திய நாட்டு தெய்வீக தியாகப் பெண்களுள் அவளும் ஒருவள்.
மஞ்சு அடுத்தவருக்கு ஒரு துன்பம் என்றால் முன்னால் வந்து உதவுகின்ற குணம் கொண்டவள். அக்கம் பக்கம் நட்பு பேணும் குணம் திருவிழா நாட்களில் எல்லாம் சமைத்து ஆலிஸீக்கு பிள்ளைகளிடம் சாப்பாடு அனுப்பி வைப்பாள்.
மஞ்சு அளவிற்கு மிக ருசியாக சமைக்கத் தெரியாத ஆலிஸ் பதிலுக்கு சமைத்துக் கொடுத்து கொடுமை செய்யாத நல்ல பிள்ளையாய் குளு குளு கூழ் (ஐஸ்க்ரீம் தானன்றோ) ஃபேமிலி பேக் வாங்கி கொடுத்து விடுவாள். இந்த குளு குளு கூழ் விஷயத்தாலேயே மஞ்சுவின் பிள்ளைகளுக்கு ஆலிஸ் மிகவும் பிடித்தமானவள்.
மஞ்சு வெளியே வந்து, “என்ன ஆலிஸ் பாப்பா?” என வந்து கேட்கவும் ஆலிஸ் திரும்பி பார்த்தாள். அங்கே அது நேரம் வரையில் ஆலிஸின் பின்னழகை வர்ணித்துக் கொண்டிருந்த மஞ்சுவின் கணவன் குமரேஷை காணவில்லை.
குமரேஷிடம் தப்பிப்பதற்காக அழைத்தாளெனினும் வந்து நின்றவளிடம், ‘கால்வலி பரவால்லியா மஞ்சுக்கா?” என விசாரித்தாள்.
எதிரில் நிற்கின்றவளின் அன்பான விசாரிப்பில் மஞ்சுவின் முகம் மலர்ந்து விட்டது. இரண்டு நிமிடங்கள் தொடர்ச்சியாக மஞ்சுவின் பிரச்சனைகளை காது கொடுத்துக் கேட்டவள் அங்கிருந்து புறப்பட்டு அவசரமாக பயணித்த போதும் கூட அலுவலகத்திற்கு பத்து நிமிடங்கள் தாமதமாகவே போய் சேர்ந்தாள்.
தொடரும்


Leave a Reply