அத்தியாயம் 2_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி

அத்தியாயம் 2
ஆலிஸ் பணிபுரிவது ஐடி கம்பெனிகளுள் ஒன்றாகும். இப்போது தனியளாக இருந்தாலும் அவள் நல்லதொரு அன்பின் அரவணைப்பில் இனிமையானதொரு குடும்பத்தின் ஒற்றை வாரிசாக திகழ்ந்தவள்தான். அவர்கள் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள். அவர்களது கிராமம் மெது மெதுவாக கிராமிய அடையாளங்களை இழந்துக் கொண்டு நகரத்தின் மாற்றங்கள் தரிக்க ஆரம்பித்த நிலையில் இருந்தது.
ஆலிஸின் தந்தை பீட்டருக்கோ மிகச் சாதாரணமானதொரு வேலை, அதில் கிடைக்கும் சம்பளம் கைக்கும் வாய்க்கும் பற்றாது. அம்மா மெர்ஸியோ வீட்டில் இருந்தவாறே தையல் வேலை இன்னும் சிறு சிறு வேலைகள் பல செய்து பணம் ஈட்டுவார்.
பிற்காலத்தில் தங்கள் செல்ல மகளுக்கு தாங்கள் துணையிருப்போமோ இல்லையோ, படிப்பு நிச்சயம் துணை இருக்கும் என்று நினைத்திருப்பார்கள் போலும். தங்கள் குறைந்த வருமானத்திலும் சிக்கனமாக வாழ்ந்து, ஆலிஸூக்கு பெற்றோர்கள் படிப்பை கொடுத்தனர்.
படிப்பை நிறைவு செய்த பின்னர் சில மாதங்கள் கழித்து வேலைக்காக மற்றொரு முறை நேர்முகத் தேர்வு எதிர்கொள்ள சென்னைக்கு ஆலிஸ் சென்றிருந்தாள்.
முதலிரண்டு முறைகள் அப்பாவோடு அவள் சென்னைக்கு பயணித்து இருக்க, இம்முறை ஏனோ தனியாகவே வர நேர்ந்தது. அப்பாவோடு சென்னைக்கு வந்த இரு முறைகளும் தேர்வு தவிர்த்த மற்ற நேரங்களில் ஹாஸ்டல் விபரங்கள், போக்குவரத்து விபரங்கள், பயணம் எவ்வாறு செய்வது என எல்லாவற்றையும் பழகி இருந்தாலும் கூட அப்போது வேலை கிடைக்கவில்லை.
இந்த முறையோ எதிர்பாராமல் வேலை கிடைத்து விட்டிருந்தது, அலைபேசியில் தகவல் தெரிவிக்காமல் நேரில் பார்த்து சொல்லிக் கொள்ளலாம் என உடனே ஊர் திரும்பியவளுக்கு என்னவோ பெற்றோர்களின் கரிக்கட்டையான உடல்களைத்தான் பார்க்க கிடைத்தது.
மின் கசிவு என்றார்கள், சிலிண்டர் வெடித்து விட்டது என்றார்கள். தூக்க கலக்கத்தில் எவ்வளவாக போராடினார்களோ? இனிமையான கலகலப்பு கொண்ட அந்த தம்பதியர் ஒன்று போலவே உயிரை இழந்திருந்தார்கள்.
ஆலிஸ் விக்கித்து நின்றாள்… அவள் உலகம் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டிருந்தது. அந்த குடிசையில் எரியாத பொருளாக மிஞ்சியது ஒன்றும் இல்லை … ஒன்றுமே இல்லை.
அவளது உலகம் அவளிடம் இருக்கும் சான்றிதழ்கள், கொஞ்சம் பணம், சில செட் உடைகள் என பையளவில் சுருங்கிவிட்டிருந்தது. ஊரே கூடி “ஐயோ இப்படி ஆகிற்றே?” என உச்சுக் கொட்டினாலும் கூட, அடுத்து செய்ய வேண்டியவைகள் எல்லாவற்றையும் தான் மட்டுமே முன்னெடுத்து செய்ய வேண்டும் என்று ஆலிஸீக்கு புரிந்தது.


Leave a Reply