Epi 2_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi

சந்திக்க வந்திருந்தவர் அவளுக்கு பெரியம்மா உறவு முறை கொண்டவர். பேச்சிற்கு பேச்சு அவரது கேள்விகள் இவளது வருமானத்தை குறித்ததாகவே இருந்தது.

“எத்தனை பவுன் சேர்த்திருக்க ஆலிஸ்?” என்றார் அவளிடம்.

கழுத்திற்கும், காதிற்குமாய் குட்டி குட்டியாக சில நகைகளை அவள் வாங்கி அணிந்திருந்தாள். ஹாஸ்டல் கட்டணம், சாப்பாட்டு மற்றும் போக்கு வரத்து செலவுகள் போக கொஞ்சம் தொகை அவளது வங்கிக்கணக்கில் சேர்ந்தும் இருந்தது.

அவள் பணி புரிவது சமீபத்தில் உடனடி வேலை இழப்புகள் அதிகமாக அச்சம் கொள்ளப் படும் ஐ டி துறை என்பதால் அப்படி ஏதேனும் நிலை ஏற்படின் நான்கைந்து மாதங்கள் மற்றொரு வேலை கிடைக்கும் வரையிலும் தனது செலவுகளை சமாளிக்கவென அவள் எறும்பைப் போல சிறுக, சிறுக சேமித்து வைத்திருக்கும் தொகை அது. ஹாஸ்டலில் தங்குகின்ற சூழ்நிலையில், அறையை பிற பெண்களோடு பகிரும் தற்போதைய நிலையில் நகையாக அதனை மாற்றினாலும் கூட அதனை பாதுகாப்பது பெரும் கஷ்டம் என்பதால் நகையாக வாங்காமல் தவிர்த்திருந்தாள்.

‘இப்போது திடீரென எதற்காக இந்த நகைக் கேள்வி?’ என்று எண்ணினாலும் கூட, “இதோ நான் போட்டிருக்கிற நகைகள் தான் பெரியம்மா?” என்றாள். அதனை கேட்டவர் முகமோ அஷ்டகோணலாகியது.

“ஐ டி ல வேலை, நிறைய சம்பாதிப்பன்னு சொல்லிக்கிட்டாங்க… நீ என்னன்னா இப்படி இருக்கியே? ம்ஹீம் அவ்வளவு திறமை காணாது உனக்கு”

………

“எஞ்சினியர் மாப்பிள்ளை ஒருத்தன்…………..” என்று தனது ஏதோ ஒரு உறவு முறை சொன்னவர்… “ஊர்ல அவனுக்கு ஐந்து ஏக்கர் நிலமும், காரும் எண்பது பவுன் நகையும், பத்து இலட்சம் ரொக்கமும் கொடுக்கிறதுக்கு தயாரா பொண்ணு வீடெல்லாம் வந்துகிட்டு இருக்கு. அவனுக்கு பொண்ணு வெள்ளையா இருக்கணும் என்று ஆசை. அதனால் தான் உன் ஞாபகம் எனக்கு வந்தது, வந்து விசாரிச்சுட்டு போகலாமேன்னு வந்தேன்.”

………

“சரி இப்ப உன்னால எத்தனை பவுன் நகை செய்ய முடியும்? எவ்வளவு ரொக்கம் கொடுக்க முடியும் என்று சொல்லு, நான் உனக்காக பேசி பார்க்கிறேன்” என்றார் பெருந்தன்மையாய்.

ஆலிஸிற்கு யாரோ தன்னை பெரும் மலையினின்று உருட்டி பாதாளத்தில் கொண்டு வந்து நிறுத்திய உணர்வெழுந்தது. தான் தனது பெற்றவர்களது துணையில்லாமல் இத்தனை கொடுமையான நாட்களை கடந்து வந்து, அடைந்து இருக்கும் தூரமே தனக்கு பெரும் சாதனையாக இருக்க, தன்னை ஒன்றுக்கும் உதவாதவள் போல கீழிறக்கி பெரியம்மா பேசியது அவள் மனதை குடைந்தது.

“எனக்கு அதிக சம்பளமெல்லாம் கிடையாது பெரியம்மா, நான் இப்ப கல்யாணம் செய்துக்கிறதாகவும் எதுவும் நினைக்கவில்லை. நகை எல்லாம் சேர்த்துட்டு உங்களுக்கு சொல்லுறேன். உங்க சொந்தக்கார பையனுக்கு வேற ஒரு பொண்ணு நல்ல வெள்ளையா கிடைப்பாங்க பாருங்க” என்று இலகுவாக கூறியவள் மரியாதை குறையாமல் உபசரித்து அனுப்பினாள்.

அந்த பெரியம்மா அவரது பேச்சு வெகுவாக மனதை புண்படுத்தினாலும் கூட பெரும்பாலும் இத்தகைய மனிதர்கள் காரணமாகவே பல நேரங்களில் நமது வாழ்க்கையின் நிலையை உணர்த்தப்படுகின்றது என்பதனை உணர்ந்துக் கொண்டாள். இப்படிப்பட்ட நபர்களால் சில பல நல்ல எண்ணங்கள் எழவும் செய்கின்றது. வாழ்வின் இத்தகைய நிலையில் கசப்பை தவிர்த்து அது கூற விழையும் பாடத்தை மட்டும் கைக்கொள்ளுகின்றவர்க்கு தோல்விகள் இல்லையாமாம்?

அது நாள் வரையிலும் கண்கள் கட்டிய குதிரையாக ஓடிக் கொண்டிருந்த ஆலிஸ் தனது வாழ்க்கையைக் குறித்து அதன் பின்னர் சிந்திக்கலானாள். அவர்களது சமுதாயத்தில், குடும்பங்களில் இருக்கும் வரதட்சணை எதிர்பார்ப்புகள் அவள் ஏற்கெனவே அறிந்த ஒன்றுதான் என்ற போதிலும் பெரியம்மாவின் வருகை அவளுக்கு தன் வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்திச் சென்று விட்டிருந்தது. 

அவளைப் பொருத்தவரையிலும் திருமணம் என்பது எட்டாக்கனி என புரிந்துக் கொண்டாள். இன்னும் சில வருடங்கள் கடினமாக உழைத்து பொன்னும், பொருளும் சேர்த்து மணவாளனை அவள் வாங்கி விடலாம்தான். அவளிடம் பொருள் வசதிகள் இருப்பின் அவளது உறவினர்களும் முன் வந்து எல்லாவற்றையும் செய்து கொடுப்பார்கள்தான் இல்லையென்று சொல்வதற்கில்லை.ஆனால், திருமண சந்தையில் தனக்கீடான மணமகனை வாங்க அவள் வருடக்கணக்காக கண்மண் தெரியாமல் உழைக்க ஓட வேண்டி இருக்கும். பொருளீட்டிய பின்னரோ பின்னிருபது அல்லது முப்பது வயதை அவள் தாண்டி விட்டிருப்பாள்.

அதன் பின்னர் திருமணம், குழந்தைப் பேறு இவையெல்லாம் எப்படிப்பட்டதாக அமையும்? தனது வாழ்நாள் சம்பாத்தியம் அனைத்தையும் அள்ளிக் கொடுத்து விட்டு அவர்கள் சொல்வதைப் போல அவள் வாழ வேண்டி இருக்கும். ‘ஒரு திருமண அமைப்பிற்குள்ளாக செல்வதற்காக நான் இவ்வளவு சிரமப்பட வேண்டுமா?’ என அவளது மனம் கேட்டது.

வழக்கமாக தனித்து சுயமாக வாழ பழகி விட்ட பெண்களுக்கே எழும் சிந்தனைகள் தான் இவை. சுயசார்பு அந்த வகையில் மென் உணர்வுகளை கொன்று விடும் ஒன்று. அதனால் தான் எப்போதுமே நமது சமுதாய அமைப்புக்களில் ஆணோ பெண்ணோ இருவருக்கும் சுய சிந்தனை எழும் முன்பே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

மாம்பூவில் அமரும் வண்டு தற்செயலாக அதற்குள்ளாக அகப்பட்டு விட்டாலும் கூட வெளியுலக தொடர்பற்று, அந்த பூ காய்த்து, பழுக்கும் நாள் வரையிலும் அதனுள்ளே உண்டு, உறங்கி, திளைத்து, தனக்கென உலகம் ஒன்றை சிருஷ்டித்துக் கொள்வதைப் போல, இளம் வயதில் ஒரு விதமான மயக்கத்தில் துவங்குகின்ற இல்வாழ்க்கை பின்னர் இதுதான் என் வாழ்க்கை என்று பழகிப் போய் அதன் இன்ப துன்பத்தில் திளைத்து என நிறைவுற்று விடுகின்றது.

எனவே ஆலிஸ் தனது வாழ்வில் திருமணம் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்கின்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டாள். ‘தனது வாழ்வில் திருமணம் என்கின்ற நிகழ்வு ஒன்று இல்லை என்றானால் தாம் வாழும் விதம் எப்படியாக இருக்க வேண்டும்?’

சிந்தனையின் முடிவில் தான் இது நாள் வரையில் வாழ்ந்தது போலல்லாமல் தனது ஆசைக்கேற்ப வாழ முடிவெடுத்தாள்.அதில் முதலாவதாக ஹாஸ்டலில் அறையை பகிர்ந்து கொண்டு பிறருக்காக பல்வேறு விஷயங்களில் சமரசம் செய்யும் படி இருக்கும் தனது வாழ்க்கையை மாற்ற விழைந்தவள் சென்றதோ ஒற்றை ஃப்ளாட்டிற்கு.

கொஞ்சம் வாடகை அதிகம் என்றாலும் கூட அங்கே பாதுகாப்பு இருந்தது, எதிர்பார்த்த சுதந்திர உணர்வு கிடைத்தது. சுவையாக இருக்கின்றதோ இல்லையோ எதையாவது பசிக்கும் நேரம் சமைத்து உண்டுக் கொண்டாள். ஆனால், இத்தனையோடு கூட இலவச இணைப்பாக தவிர்க்க இயலாத தனிமை உணர்வும் எழவே திண்டாடிப் போனாள்.

‘இது நமக்கு சரி வராது’ என எண்ணியவள் ஆறே மாதங்களில் ப்ளாட்டிலிருந்து மாறி சின்னதொரு தனி வீட்டிற்கு குடி பெயர்ந்தாள். அக்கம் பக்கம் குடும்பங்கள் இருக்க, பேச பழக ஆரம்பத்தில் அது மிக நன்றாக இருந்தாலும் நாளாக நாளாக ‘தனித்து தங்கியிருக்கும் பெண்தானே?’ என இரவில் அவளை துங்க விடாமல் ஆண்களின் தொல்லைகள் அதிகரித்தன.

‘இதென்னடா வம்பாகப் போச்சு? எதற்காக நாம் சாதாரணமாக மற்றவர்கள் போல ஆசைப் பட்டோம்? தேவைதானா? மறுபடியும் ஹாஸ்டலுக்கே திரும்பி விடலாமா? என்றெண்ணிய போதுதான் ஆலிஸ் தற்போது தங்கியிருக்கும் பத்து குடும்பத்தினர் சேர்ந்து வசிக்கும்படியான அமைப்புக் கொண்ட இடத்தில் வீடொன்று காலியாக இருப்பது தெரிய வந்தது.உடனே அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

இப்போது அவள் தங்கியிருக்கும் வீடு வெளியிடத்தினர் உள்ளே வர முடியாத அளவிற்கு பாதுகாப்பு இருந்தது. வீட்டின் சொந்தக்காரர் மிகுந்த கண்டிப்பு கொண்ட கறார் பேர்வழியாக இருந்தார். தரைத்தளத்தில் ஒரு வீட்டில் அவரும் குடியிருக்க முன்பு சந்தித்த எந்த பிரச்சனைகளும் இல்லாமல் அவளது வாழ்க்கை தெள்ளிய நீரோடையாக சென்றுக் கொண்டிருந்தது.

இப்போது அவள் அலுவலகத்தில் மிக நல்ல சம்பளத்தோடு டீம் லீடராக பதவி உயர்வு பெற்றிருந்தாள்.அவளுக்கு கீழே 20 பேர் வேலை செய்தனர். தன் துன்பங்களை வெளிப்படுத்தாத கலகலப்பாகவே இருக்கும் குணம் என்பதால் அவளை அங்கு அனைவருக்கும் வெகுவாக பிடிக்கும்.

அவளைப் பொருத்தவரை தூங்க மட்டும் வரும் வீட்டை விட வாழ்வின் பெரும்பான்மையான நேரத்தை செலவிடும் அலுவலகமே அவள் உண்மையான வீடாயிற்று. அவள் மேல் பாசத்தை பொழியும் தன்னை விடவும் வயதில் இளைய டீம் மெம்பர்ஸ் அவள் உறவினர் போலாகினர். எல்லாரோடும் உணர்வு பூர்வமான உறவுகள் வளர்த்திருந்தாள்.

வார இறுதிகளில் அவர்களுள் யாரேனும் அழைத்தால் கூட சேர்ந்து, ஊர் சுற்றவும் பழகி இருந்தாள். மோசமான எண்ணத்தோடு இருப்பவர்களை தன் அருகிலும் வரவிடுவதில்லை. ஆண்கள் பலரையும் வேலைக்கு தேவையானது மட்டும் பேச அனுமதிப்பாள்.மற்ற நேரம் புன்னகையோடு கடந்து விடுவாள்.

அவளது கடந்த வருடங்கள் அலுவலகத்திலும், வாடகை வீட்டிலும் மிக பாதுகாப்பாக கடந்திருக்க ஒரு வருடம் முன்பு குடிவந்தது குமரேஷ் குடும்பம்.

சில மாதங்களில் அவளைக் குறித்து அறிந்துக் கொண்ட குமரேஷிற்கு அவள் அழகு மட்டுமல்லாது சம்பாத்தியமும் கண்ணை கவரவே தனியாக இருப்பவளுக்கு உடல் தேவை இருக்கும் தானே? எனும் பொது சேவை உணர்வோடு பலமுறை அணுகியும் அவளிடமிருந்து எதிர்ப்பையே பதிலாகப் பெற்றான்.

ஆனாலும் கூட அவளை பின் தொடர்வதையும், அசிங்கமாக பேசுவதையும், வருணிப்பதையும் அவன் விடவில்லை. ‘பெண்கள் இல்லையென்று சொன்னால் ஆமென்று புரிந்துக் கொள்ள வேண்டும்’ எவனோ ஒரு வடிக்கட்டிய முட்டாள் சொன்னதை உண்மை என நினைத்து கொண்டிருந்தான் போலும்.

ஆலிஸோ ‘இவன் ஒருவனுக்காக பாதுகாப்பான இந்த வீட்டை விட்டு செல்வதா?’ எனும் வைராக்கியத்தில் அவனை தவிர்த்துக் கொண்டிருந்தாள். இதற்கு முடிவு எப்போது வருமோ?

ஆலிஸ் வேலைக்கு புறப்படும் நேரம், குமரேஷ் தன் பின்னால் வந்து அசிங்கமாக பேசிக் கொண்டே வர மனம் கூசி குறுகியவள் அதனை தவிர்க்க அவன் மனைவி மஞ்சுவை அழைத்தாள்.

குமரேஷிற்கு ஆலிஸின் செயல் பயத்தை வரவழைக்க, தன் மனைவி ஆலிசின் குரலுக்கு வெளியே வருவதை கண்டதும் அங்கிருந்து விரைவாய் மறைந்தான்.

தன் பின்னால் வந்துக் கொண்டிருந்த குமரேசை இப்போது காணவில்லை என்றதும் அவசர அவசரமாக மஞ்சுவிடம் விடைப்பெற்று அலுவலகம் சென்று நிற்க உடனே மேனேஜரிடம் இருந்து அழைப்பு வந்தது.

இன்றைக்கு எத்தனை பேச்சு கேட்க வேண்டுமோ? என்றெண்ணியவள் மேனேஜர் பேசிய விதத்தில் அதிர்ந்தாள்.

தொடரும்

Pages: 1 2 3


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!