மீராவிற்கு தன்னை யாரும் அவசரப்படுத்துவது, ஆதிக்கம் செய்வது இவையெல்லாம் பிடிக்காதது. அதனால் எதிர்த்து சண்டையிடுவாள் என்றல்ல மனதிற்குள் வைத்து குமைவாள் அதுதான் அவளது பழக்கம்.
கடைசி நேர இந்த பயணம் பிடிக்காவிடினும், தன்னோடுச் சேர்ந்து அம்மா, அப்பா, தங்கைகள் என அனைவரும் அவளுக்கு உதவியதில் அவள் ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டரை மணிக்கு தனது பயண மூட்டைகளோடு புறப்பட்டு விட்டாள்.
தங்கைகள் நீளமான லிஸ்டை அவள் கையில் கொடுத்து, அவைகளில் இருந்தவற்றை ஹைதராபாதில் இருந்து வாங்கி வரச் சொல்லி கையில் திணித்திருந்தனர்.
ஆயிரம் பத்திரம் சொல்லி அம்மா வழியனுப்பினார். அப்பா விமான நிலையம் வரையிலும் அவளுக்குத் துணையாக வந்தார்.
இரவு மூன்றே முக்காலுக்கெல்லாம் மீரா ஏர்போர்ட் வந்திருக்க அப்பாவிடம் விடைப்பெற்று உள்ளே வந்தாள். செக் இன் செய்து விமானத்திற்காக காத்திருந்தாள்.
கொட்டாவியோடு தூக்கத்தை விழுங்கி பயணித்து, ஃபளைட்டில் டிக்கெட்டோடு முன்பதிவு செய்யப் பட்டிருந்த காலை உணவையும், சுடு தண்ணீர் காஃபியையும் குடித்து அவள் ஹைதராபாத் வந்துச் சேர மணி ஏழரை ஆயிற்று. புரியாத ஊரில் ஒவ்வொன்றாய் அங்கங்கே நின்று பார்த்து, லக்கேஜ் எடுத்து வெளியே வர இன்னும் அரை ஒரு மணி நேரம் கடந்திருந்தது.
இரண்டு பெரிய பெட்டிகளோடு தான் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முன்பணம் செலுத்தி டாக்ஸி பிடித்துச் சென்றாள். கம்பெனியில் அந்த பணத்தை வசூலிக்க (Reimbursement) வேண்டி இருந்ததால் தனக்கு கொடுக்கப்பட்ட அந்த இரசீதை பத்திரப்படுத்தினாள்.


Leave a Reply