அந்த வினோத்தையும் அவன் மனைவியையும் அந்த குட்டிப் பையனையும் காணோம். பரிசை கையில் கொடுத்து விட்டு புறப்பட்டு விடலாமென எண்ணி அவர்களைத் தேடினாள்.
அறையினுள் இருந்து வெளியே வந்த மனோஜ் அம்மா சுற்றி முற்றி வேறு யாரும் இல்லை என்பதை கண்களை சுழற்றி பார்த்துக் கொண்ட வண்ணம், குரலை நன்கு உயர்த்தி பேசலானார்.
“ ம்ம் ..அது கெடக்குது மானங்கெட்ட கழுத…”
…
“கொஞ்சமாவது தகுதி தராதரம் பார்க்க வேணா?”
…
“சும்மா ரோட்டில இருக்கிறத எல்லாம் கழுவி நடு வீட்டில் வைக்கிறதா?”
…
“அப்படியே வேணாங்கவும் மூத்தவன் தானே உழச்சு சம்பாதிச்சு பொழச்சுக்குவோன்னு வெளியே போனான்.
அப்புறம் என்னாச்சு?
அப்பா காப்பாத்துங்கன்னு எங்க கால்ல வந்து விழல?”
….
“போனா போகுதுனு ஏத்துக்கிட்டோம்.”
…
“ஆனாலும், அவரவர் தராதரத்துல நிக்கிறதுதான் அவரவருக்கு மரியாதை.”
…
“அவன் சம்பாத்தியத்தில அவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் துணிமணி வாங்க சொல்லிட்டேன்.”
…
“ராசாக்குட்டிய அப்படி விட முடியுமா?”
…
“அவர் எங்க வாரிசாச்சே? அவனுக்கு நாங்க எல்லாம் வாங்கி போட்டோம்.”
…
“இவ்வளவு சொத்து பத்தெல்லாம் உடனே எந்த ஊர்பட்ட நாய்க்கெல்லாம் அனுபவினு கொடுக்க முடியாது.”
…
“எல்லாம் எம் புருசன் ராப்பகலா சம்பாதிச்சு உருவாக்குனது.”
…
“எனக்கு அடங்கி இருந்தா இந்த வீட்ல இருக்கலாம். இல்லன்னா மறுபடி ஓடிப் போய் கஷ்டப்படுங்கனு என் மருமவக் காரிக்கு சொல்லிட்டேன்.”
….
“எதுக்கு படிச்சு முடிக்கிறதுக்குள்ள இந்த ஆட்டம்?”
…
“பணக்கார பையனை கண்டதும் இளிச்சுக்கிட்டு எப்படிதான் கூட போக வர முடியுதோ?”
…
“என்ன மாதிரி இவங்க வீட்ல எல்லாம் வளர்த்துருப்பாங்க சொல்லு?”
…
“கேடுகெட்ட ஜென்மங்கள்…த்தூ”
நுவலியை சுற்றி வலமும் இடமுமாய் நடந்தபடி மனோஜின் அம்மா போனில் சொற்பொழிவாற்றி முடித்திருக்க…
நுவலிக்கு நிறையவே புரிந்தது.
அவளது இருதயத் தளைகள் பலவும் தானே அறுந்து விழுந்தன.
ஒரு வழியாக விடுதலை அடைந்தோம் என மனதில் ஒரு ஆசுவாசம்.
எதிரில் நின்ற மனோஜ் இவளை ஆராய்ந்த படியே நின்று இருந்தான்.
தெளிவான முகத்தோடு அவனை ஏறிட்டவள் மறுபடி குழந்தையை ஏந்திய வண்ணம் அங்கே வந்து நின்ற பெண்ணிடம் சென்றாள்.
“அண்ணி, இது குட்டிப் பையனுக்கு என்னோட கிப்ட்” என கொடுத்தாள்.
“வாங்க கேக் சாப்பிடலாம்” என அழைத்தவளிடம்,
மனோஜ் அவளை பார்த்திருக்க…
“என் அண்ணா எனக்காக கீழே வெயிட் செய்திட்டு இருக்காங்க அண்ணி. வரேன்”
என்றவளாய் சாதாரணமாக அவ்விடத்தை கடந்து மின் தூக்கியில் ஏறி தரைத் தளத்திற்குச் சென்றாள் நுவலி.
தொடரும்


Leave a Reply