“அத்தான்” பாவாடை சட்டையில் ஓடி வர, அவள் குரல் கேட்டதுமே தனது அறைக்கு சென்று திரும்ப வந்தவன் கைகளில் இப்போது அவளுக்கான திண்பண்டங்கள் இருந்தன.
“என்ன பாப்பு? எதுக்கு ஓடி வந்த?” எனக் கேட்டான்.
“நேத்துல இருந்தே உங்களை தேடுறேன் தெரியுமா? இப்ப உங்க குரல் கேட்கவும் பார்க்க ஓடோடி வந்துட்டேன்.”
“ம்ம் உட்காரு” அந்த திண்டில் இருவரும் அமர்ந்தனர்.
அங்கே வந்த சாம்பவி இருவருக்கும் சோற்று வடி நீர் கொடுத்தார். அதை சப்புக் கொட்டிக் கொண்டு குடித்தவளை பார்த்தவாறே ஆனந்தும் குடித்தான். பசிக்கின்ற நேரம் கிடைக்கும் சோற்று வடிநீர் அமிர்தம் தான். அதில் துளி அளவு உப்பு போட்டு கலக்கி குடித்தாலே போதுமானதல்லவா?
குடித்து முடிக்கவும் வெள்ளையாய் சின்ன மீசை மேலுதட்டில் உருவாகி விட, தனது உதடுகளை பாவாடையால் துடைத்து புறங்கையால் தடவி சரிபார்த்துக் கொண்டாள்.
“அத்தான் எனக்கு சின்ன பாப்பாவோ, தம்பியோ வரப் போறாங்க” என்றதும் ஆனந்த் புன்னகைத்தான்.
“இனி நீங்க ஹாஸ்டல் லீவில் வரும் போதெல்லாம் நாம இரண்டு பேரும் குட்டி பாப்பா வச்சு விளையாடுவோம் அத்தான்.”
அவள் சொன்னதை கேட்டதும் சாம்பவி சிரித்தார்.
“உங்க அத்தான் வெளியூர்ல ஹாஸ்டல் படிக்க போனவன் இனி வேற வெளி இடம்லாம் போய் படிக்க போறானாமாம் பாப்பு, அவனுக்கு பாப்பா வச்சு விளைடாட நேரம் இருக்கான்னு கேளு?”
“நீங்களும் கூட ஒரு பாப்பா வாங்கலாம்ல அத்த, பாவம் அத்தானுக்கு தனியா போரடிச்சுருக்கும்.”
“முதலுக்கே மோசம் போ” சிரித்தவாறு எழுந்தார் சாம்பவி.
“எனக்கு பத்து வயசு இருக்கப்ப விளையாட ஒரு பாப்பா கிடைச்சது?” என்ற ஆனந்திடம்,
“இப்ப அந்த பாப்பா எங்கே அத்தான்?” சம்பூர்ணா இரகசியமாக கேட்டாள்.
“அது நீதான்” என்றவராக சாம்பவி அங்கிருந்து நகர்ந்தார்.
“ஹி ஹி” என அசடு வழிந்தவளாக அமர்ந்தவள் அவன் தந்த இனிப்புகளை உண்ண ஆரம்பித்தாள்.


Leave a Reply