“சார், கீழே இருக்கிற ஏதாச்சும் அறை காலியானா எனக்கு மாத்திக்க தருவீங்களா?”
தயக்கத்துடன் கேட்டாள். அவர் ஏனென்று கேட்டிருக்கலாம், அல்லது இவளாவது காரணத்தை சொல்லியிருக்கலாம். தயக்கத்தில் ஆலிஸ் பிரச்சனையை சொல்லாமல் விட, தனது வணிக புத்தியில் வீட்டு ஓனர் அவளது கோரிக்கை எதற்கு என கேளாமலே முடியாதென்று சொல்ல சட்டென்று சிலிண்டர் குறித்த ஞாபகம் வரவும் பகலில் அவளுக்கு வரும் சிலிண்டரை வாங்கி வைக்க கேட்டுக் கொண்டு வந்த காரியம் நிகழாத தோல்வி மனப்பான்மையுடன் தன் அறைக்கு சென்றாள்.
‘இந்த பொறுக்கி தனது வாசல் வரை வந்துவிட்டானே? எதுவும் பெரிய பிரச்சனைகள் வந்துவிடுமோ?’ மனதிற்குள்ளாக கலக்கம் சூழ வேண்டாவெறுப்பாக உண்டு முடித்தாள்.
கண்ணாடி முன் நின்றவள் சிக்கு எடுத்து இரண்டு பின்னல்களாக பின்னி தோள்களில் போட்டு பார்த்துக் கொண்டாள். இரட்டை ஜடையில் பார்வைக்கு சில வயதுகள் குறைந்திருந்தாள்.
“ம்ம்… இந்த அங்கிள் வீடு மாத்தி தர மாட்டேன்னு சொல்லிட்டாரே?”
…. கண்ணாடியைப் பார்த்து தனக்குத்தானே பேச்சு தொடர்ந்தது.
“அந்த கீழ் ரூம் காலியாகப் பொகுதுன்னு தான் நான் கேட்டேன்”
……….
“ஆமா கீழ் ரூம்ல இருந்தா யாரும் சட்டுன்னு வர போக முடியாது, அந்த பொறுக்கி தொல்ல இருக்காதுன்னு நினைச்ச… நீ நினைச்சது சரிதான் பேபி”
……….
“ம்ம்ம்… என்ன செய்ய சொல்லு? குழந்த குட்டி இருக்கிறவங்க சின்னப்பிள்ளைங்க படியில விழுந்துடக் கூடாதுன்னு மேல்மாடிக்கு குடி வர பயப்படுவாங்களாம். நான் ஒண்டிக் கட்டை, ஒழுங்கா வாடகை தரேன்னு தான் என்னை மேல்மாடியிலயாவது இருக்க விட்டிருக்காங்களாமாம்” உதட்டை பிதுக்கினாள்.
“திமிரைப் பார்த்தியா?” கண்ணாடியில் அவளே பதில் பேச,
“விடு விடு இவர் கிட்ட சொந்த வீடு இருக்குன்னு தானே இந்த ஆட்டம் ஆடுறார். பாரு ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த சென்னையில…ம்ம் நோ நோ ஊர்ல வீடு கட்டுவேன். இங்க சென்னையிலதான் எனக்கு யாரு இருக்கா?
…ம்ம்ம் அப்புறம் ஊர்ல மட்டும் என்னவாம்? யார் இருக்காங்க உனக்கு? …………”
……..
“சரி இந்த டாபிக்க விடு அந்த பொறுக்கி ஃபேமிலி ஊர்லருந்து வர்ற வரைக்கும் தினமும் துவைக்காமல் வீக்கெண்ட் மட்டும் துணி துவைச்சு போடு. மத்த நாள் கதவை அடைச்சுட்டு உள்ளேயே இருந்துக்கோ. என்ன செய்யறது நம்ம வீட்டுலயே நமக்கு பாதுகாப்பில்ல?” கண்ணாடியிலிருந்த தன்னிடமிருந்து பதில் பெற்றவள்,
“இதைத்தான் செய்யப் போறேன்…. குட் ஐடியா”
“…… பின்னே எக்ஸ்பெர்ட் ஐடியாவாச்சே”
தனக்குத்தானே கண்ணாடி தொட்டு முத்தம் வைத்தவள், இல்லாத காலரை உயர்த்தினாள்.
“இப்ப இந்த டாபிக்கையும் விடு… அப்புறம் ஆஃபீஸ்ல அந்த பிரனீத்தை அப்படி உத்து உத்து பார்த்த நீ என்னவாம்?”
…..
“சட்டென்று கண்ணாடி விட்டு விலகி நின்றவள் தனக்கே பழிப்புக் காட்டி நகர்ந்தாள். மறுபடி கண்ணாடியில் தன்னைப் பார்த்து…..
“அவன் ரொம்ப அழகு இல்லியா?
“…. இல்லியே, நெட்ட கொக்கு மாதிரி இருந்தான், கன்னம் கூட இல்லை. உருவி விட்ட மாதிரி ஒல்லியா…. வளர்த்தியா…”
“ச்சே ச்சே உன் கிட்ட போய் கேட்டேனே நான் அழகுன்னு சொன்னது அவன் இயல்பை அலட்டலில்லாத அவன் அமைதியான குணம்…. நான் அப்படியே ஃப்ளாட் ஆகிட்டேன்ல”
……..
“நீ கேட்காட்டும் சொல்லுவேன்… ஒன்னுமே இல்லாம ஒவ்வொருத்தனுங்க எவ்வளவு சீன் போடுவானுங்க, ஆனா பிரனீத் பற்றி அறிமுகப்படுத்தினாங்க இல்லை……எவ்வளவு வேலை அனுபவம் தெரியுமா? எங்க ஆஃபீஸ்லயே அந்த குறிப்பிட்ட துறையில் அவர்தான் எக்ஸ்பர்ட், அத்தனை அத்தனை நுட்பமான அறிவு. இப்ப கூட பெங்களூர்ல அவரோட டீம் விட்டுட்டு இங்கே அவசர உதவிக்கு அழைச்சிருக்காங்க. மத்தவங்க எல்லோரும் எல்லாம் தெரிஞ்சது போல எத்தனை பேசினோம். ஆனா, அதுவரை சும்மா ஒரு வார்த்தை கூட வீணா உபயோகிக்கலை அந்த பிரனீத். I admire him (அவனைக் கண்டு நான் பிரமிக்கிறேன்)
“புது க்ரஷ் க்ரஷ் ஆகாமலிருக்க வாழ்த்துக்கள் மேடம்”
தன்னுடன் தானே கண்ணாடிப் பார்த்துப் பேசி, தன்னைத் தானே சமாதானப்படுத்தி விட்டு தூங்கினாள். இரவு தூக்கத்தில் சில முறைகள் புன்னகைக்கவும் செய்தாள். சரி அவளது கனவில் வந்தது யாராக இருக்கும்??
தொடரும்


Leave a Reply