அவர்கள் வருடத்திற்கு அல்லது இரு வருடங்களுக்கு ஒரு முறை ஊருக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். கிராமத்திற்கு செல்லுகையில் இட மாற்றம் காரணமாக பிரசன்னா ஊரில் இருக்க சிடுசிடுத்துக் கொண்டு வருவான் எனினும் சம்பூர்ணாவிற்கு ஊரில் இருக்கின்ற நாட்கள் மிகப் பிடிக்கும்.
ஊர் செல்லும் போதெல்லாம் முத்துராஜ் மாமாவிடம் அவள் தனது ஆனந்த் அத்தானைக் குறித்து விசாரித்து அறிந்துக் கொள்வது வழக்கம். அவர்கள் செல்கையில் எல்லாம் அவன் அங்கு இருந்தது இல்லை.எப்போதாவது ஒரு முறை அவன் வந்து செல்வான் என முத்துராஜ் ஆதங்கம் தெரிவிப்பார். இவர்கள் ஊருக்கு செல்லுகையில் ஆனந்துடன் இவர்கள் அலைபேசியில் பேசிக் கொள்வர்.
அப்போது அலைபேசி சகஜமாக புழங்கினாலும், கணேசன் சம்பூர்ணாவிற்கென தனியாக அலைபேசி வாங்கி கொடுத்திருக்கவில்லை. அப்போது அதற்கான தேவையும் இல்லை எனலாம். சம்பூர்ணா டிவியில் படங்கள் பார்ப்பது, சீரியல்கள் பார்ப்பதென தனது மிச்ச சொச்ச நேரத்தை தள்ளுவாள். அது போக தம்பி பிரசன்னாவுடன் இருக்கையில் அவளுக்கு நேரப் போக்கே தேவையில்லை.
அவனது ஹோம் வொர்க் செய்ய வைக்கும் முன்பாக இவளுக்கு நாக்கு தள்ளிவிடும். நாட்கள் கடக்க தங்களது வீட்டில் தொலைபேசி வந்த பின்னர் அதில் இருந்து ஆனந்த அத்தானிற்கு அவள் அழைத்து பேசுவதும் உண்டு.
இவள் அழைக்கும் போதெல்லாம் அவன் அகமகிழ்ந்து போவான்.இவளை பெரிய மனுஷியாக எண்ணி தனது வேலையில் இருக்கின்ற பிரச்சனைகளை பகிர்ந்துக் கொள்வான். அவளும் தான் அவனிடம் அத்தனையையும் கொட்டுவாள். அவளுக்கும் அவளது பதின் வயது சிக்கல்களையும், கேள்விகளையும் கேட்டு தெளிய அவன் உதவியாக இருந்தான்.
இருவருக்குள்ளும் சற்றும் முகமூடி இல்லாத ஒரு நட்புணர்வு இருந்தது. சகஜமாக எதை வேண்டுமானாலும் பேசிக் கொள்ளும் சுதந்திரம் இருந்தது. இவர்கள் பேசுகையில் பிரசன்னாவும் அவ்வப்போது நடுவில் அழைப்பை வாங்கி பேசுவான்.
இரு குடும்பமுமே தாய் எனும் அரவணைப்பை இழந்திருக்க அந்த இழப்பினால் ஏற்பட்டிருக்கும் நிரப்ப முடியாத பெரும் வெற்றிடம். அதனால் விளைந்த மனதின் தனிமை இப்படியாக அந்த மனங்கள் தங்களது எண்ணவோட்டத்திற்கு நெருக்கமான நபரோடு தங்களது உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள முனைவது மிக இயல்பான செயல் தானே?


Leave a Reply