“நன்றிப்பா” அப்பாவை கட்டிக் கொண்டான்.
“த்ச்சு எங்கேயாச்சும் அப்பனுக்கு புள்ள நன்றி சொல்லுமா? எங்க போனாலும் இந்த அப்பனை மறக்காம இருந்தா போதும்”
அவர் சொன்ன விதத்தில் மனதிற்கு கஷ்டமாக இருக்க “என்னப்பா? உங்களை கஷ்டப்படுத்தி இருந்தா சாரிப்பா” என்றான்.
ஒருவாறாக தகப்பனுக்கும் மகனுக்குமான உறவு சகஜமாகி இருக்க, டெல்லி சென்றவன் கணேசன் குடும்பத்தை சந்தித்து ஒரு நாள் முழுக்க அங்கேயே செலவழித்தான்.
சம்பூர்ணா வெகுவாக மகிழ்ந்தாள், சாயங்கால நேரம் சாட் ஐட்டம்கள் தின்ன இவர்கள் புறப்பட்ட போது பிரசன்னா ஆனந்தின் தோள்களில் தொற்றிக் கொண்டான்.
ஊர் சுற்றி விட்டு திரும்ப வந்தவர்கள் ஆனந்துக்கு விடை கொடுத்தனர். கணேசன் ஆனந்திற்கு ஏதேனும் உதவி வேணுமா எனக் கேட்க அவனோ தந்தை பணம் தந்ததைச் சொல்லி இதமாக மறுத்து விட்டிருந்தான்.
மிலானுக்கு வேலையாக பயணமானவன் அங்கே மிகப் பலவும் கற்றுக் கொண்டான். தனது இலக்கை அடைந்து விடலாம் எனும் உற்சாகம் அவனை தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. ஓரிரு தொழில் முறை நட்புக்கள், மாடல்கள் என பழக்கமாக அங்கே நிகழும் ஃபேஷன் ஷோக்களை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.
அப்போது பிரபலமாக இருந்த மாடல் லிண்டாவின் பார்வை இவனை நோக்கி விழுந்தது இவன் அதிர்ஷ்டமே. அவனுக்கு பல்வேறு வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தாள். அவளது வழிகாட்டுதலில் ஜெட் வேகத்தை பிடிக்கும் நிலையில் இருந்தான் அவன்.
வருடங்கள் இரண்டை கடந்து விட்டிருக்க, இன்னும் பாப்புவும் பிரசன்னாவும் பேசும் தருணங்கள் அவனுக்கு மிகவும் பிடித்தமானவைகள் தான்.
தனக்கென அலைபேசி என ஒன்று இல்லாதிருக்க, தான் பன்னிரெண்டாவது முடித்து கல்லூரி செல்லுகையில் அப்பா அவளுக்கு முதல்முறையாக அலைபேசியை வாங்கி கொடுத்திருந்தார். நேரம் காலம் பாராமல் முதன் முதல் வீடியோ காலில் அவள் தனது ஆனந்த் அத்தானுக்கு அழைக்க, அதன் பின் நிகழ்ந்தவைகளில் அந்த முதல் வீடியோ கால்தான் அவளது வாழ்வின் கடைசி வீடியோ காலாகவும் முடிந்தது.
அதன் பின்னர் பாப்புவுக்கும் ஆனந்துக்கும் இடையேயான நட்பை என்ன தேடினாலும் காண முடியவில்லை.
அவளுடனான தனது நட்பை எப்படியாவது புதுப்பித்து விடும் நோக்கில் ஆனந்தும், எல்லா விதத்திலும் அவனை தவிர்க்கும் நோக்கில் சம்பூர்ணாவும் என அடுத்து என்னாகுமோ?
தொடரும்


Leave a Reply