Epi 6_Thurathum Nizhalgal_Jansi

சி எஸ் டி க்கு சல்லிசான விலையில் ஷாப்பிங்களுக்காகவும் மக்கள் பெருமளவில் வருவதுண்டு. வித விதமான கடைத் தெருக்கள் இங்கு உள்ளன. சர்ச்கேட் பகுதியில் தான் 400 க்கும் மேற்பட்ட துணிக் கடைகள் கொண்ட ஃபேஷன் பாஜார் உள்ளது. சிஎஸ் டியிலிருந்து இங்குச் செல்ல 5 நிமிடங்கள் போதும்.

இவ்வளவும் சொல்லிவிட்டு டிப்ஸ் கொடுக்காவிட்டால் எப்படியாம்? இதோ பிடியுங்கள் என் டிப்ஸ். எந்த பொருளை வாங்க  எடுத்தாலும் முதலில் பாதி விலையில் கேட்க வேண்டும். ஒருவேளை பாதி விலையிலேயே பேரம் படியலாம் இல்லையென்றால் கூட ஐம்பது நூறாகலாம். எப்படி என் டிப்ஸ்? 

அந்தேரி மும்பையின் வெஸ்டர்ன் ரயில்வே ஸ்டேஷன்களுள் ஒன்று. எந்நேரமும் ஜன நெருக்கடியை இந்த பகுதியில் காணலாம். ஸ்டேஷனிலிருந்து இறங்கிய நேரம் முதலாய் ரிஷா தனக்கு இந்த பரிச்சயமில்லாத மண்ணில், சற்று முன்பு பழக்கமாகியிருந்த புது நண்பன்(!) ஈஸ்வர் மீது கண் பதித்தே வந்தாள்.

 இதுவரை இருவரும் பேசிக் கொண்டதில் அவன் ஆபத்தில்லாதவன் என்ற உணர்வு மட்டுமே தோன்றியிருந்தது, கூடுதலாக அவன் தமிழன் என்ற மகிழ்ச்சி இன்னொரு  பக்கம். அதனால் தான் தனக்கு ஒரு வேளை எதுவும் தேவைப்பட்டால் அவனிடம் உதவிக் கேட்கலாம் என்று எண்ணி அவனை தன் கண் பார்வையில் வைத்திருந்தாள்

ஸ்டேஷனிலிருந்து வெளியே வரவும் டாய்லெட் கண்ணில் படவே அங்கு சென்று வந்த பின்னரும், இந்தர் சற்றுத் தொலைவில் பஸ் ஸ்டாண்டில் நின்றுக் கொண்டிருந்ததைக் கண்டாள். “பரவாயில்லையே இங்கே தான் இருக்கிறான்என அவனைக் கண்டதும் சற்று நிம்மதி தோன்றியது.

மெது மெதுவாக தன் முன்னே இருந்த கூட்டத்தில் அசைந்து அசைந்து முன்னேறி வந்தவள் டாக்ஸி ஸ்டாண்ட் எங்கிருக்கின்றது எனதேடிக் கொண்டிருக்கையில் எதிர் புறத்திலிருந்து அந்த கரகரப்பான குரல் வந்தது.

“நீ நீ ரிஷா பாப்பா தானே?”

விதிர்விதிர்த்து நிமிர்ந்தாள் அவள். அவளை ரிஷா பாப்பா எனக் கூப்பிடுபவர்கள் மிகச் சிலரே. அந்தக் குரல் மனதில் பதிந்த ஒன்று. மனதில் பயமாகவும், நடுக்கமாகவும் பதிந்து விட்ட நபர் அல்லவா?

தான் 7 வருடமாக தாய் தகப்பனைப் பிரிந்து சிறைப் போன்ற தனிமை வாழ்வு வாழ்ந்ததற்கான காரணியின் குரல். ருத்ரபாண்டி அங்கிள்.

கிடுகிடுவென அவள் உடல் நடுங்கிற்று. அதுவரை ஈஸ்வரோடு வாயடித்துக் கொண்டிருந்த ரிஷா எங்கோ காணாமல் போய் விட்டாள். உள்ளுக்குள் நடுக்கம் பரவ, செயலறியாத ரிஷா வெளி வந்து விட்டாள்

எல்லா நேரத்திலும், எல்லா சூழ் நிலையையும் துணிந்து எதிர்கொள்ளும் திறன் அவளிடம் இல்லை. அவள் பெற்றோர் அவளை அடக்கி அடக்கி கூண்டுக்குள்ளாக வைத்து, அவளின் இயல்பைத் தொலைத்து விட்டனர். இப்போதோ தனியாக எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலையிலும் அவளால் சுயமாக முடிவெடுக்க இயலவில்லையே?!

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!