2.”வளி”யவள்_சிறுகதை_ஜான்சி

அந்த பெற்றவர்கள் மீதம் வைத்தவைகளும், பாட்டி இவளுக்காக சேர்த்தவைகளும் மட்டும் தான் இப்போது இவளுடைய சீர்களாக இருந்தன. இந்த எளியவளின் பொருட்கள் அவளது மாமா குடும்பத்தினர் தப்பு தப்பு மாளிகையினருக்கு எதற்கு? அதனாலேயே அவர்கள் அத்தனை பொருட்களையும் செலவு பாராமல் அனுப்பி வைத்து விட்டிருந்தனர்.

யாமினிக்கு அந்த இரயில் பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. மும்பையை நோக்கி முப்பத்தி சொச்ச மணி நேர இரயில் பயணம். சுடச் சுட இரயில்வே காண்டீனில் இருந்து வரும் கட்லெட், பஜ்ஜி என அவள் எதையும் வாய்விட்டு கேட்கும் முன்பே அவள் முகம் பார்த்தே அவன் சலிக்காமல் வாங்கிக் கொடுத்தான். ஐஸ்கிரீம், கூல் ட்ரிங்க் என்றும் கூட பயணம் சுற்றுலா போல அமர்க்களப்பட்டது.

பாட்டியின் வீட்டை விட்டு புறப்படுகையில் அந்த சமையல்காரம்மா அவளுக்காக பாசமாக கட்டித் தந்திருந்த வகை வகையான கட்டுச் சாதத்தை பரிமாறும் போது. அவனுடன் பகிர்ந்து உண்ணும் போது, தானாகவே அவர்களுக்குள்ளாக நட்புறவு ஆரம்பித்து இருந்தது. இருவரும் கொஞ்சம் கொஞ்சம் சகஜமாக பேசவும் ஆரம்பித்து இருந்தனர்.

பேச்சோடு பேச்சாக தான் மும்பையில் இருந்து ஊருக்கு வருவதே ஒரு விழா போல தனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் இந்த இரயில் பயணத்தில் சுடச் சுட வாங்கி உண்பதற்காகவே தனியாக காசு சேர்த்து வைத்திருப்பான் என்றெல்லாம் அவன் சொன்ன போது சாப்பாடு முதலாக தனது செலவுகளை எவ்வளவாக சுருக்கி வாழ்ந்து இருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டாள்.

இரயில் ஆந்திராவின் அந்த பெரிய பெரிய மலைச் சூழ்ந்த பாதைகளை கடந்து, மஹாராஷ்டிரா பார்டர் சோலாப்பூரை தாண்டி பயணித்துக் கொண்டு இருந்தது. 

மும்பைக்கு நான்கு மணி நேரம் முன்பாக வரும் ‘பூனா” ஸ்டேஷனை இரயில் கடந்த பின்னர் குகைகளை குடைந்து இரயில்வே ட்ராக்குகளை அமைத்திருக்கின்றனர். அந்த குகைகளூடே இரயில் கடக்கும் அந்த சில நிமிட அனுபவங்கள் அலாதியானவை.

குகைக்குள்ளே இரயில் பயணிக்கையில் எழும் சப்தம், அந்த மஞ்சள் நிற விளக்கின் ஒளி, குகையினூடாக பாய்ந்தோடும் மழை நீரின் சப்தங்கள். அப்பப்பா என்னவொரு அனுபவம்?

மகேந்திரன் அவற்றை எல்லாம் முன்பும் பலமுறைகள் உணர்ந்திருந்த போதும் இப்போதும் யாமினியுடன் அவற்றை இரசித்தவாறு வந்தான். மழை நேரமாதலால் அந்த இரயில் பாதைகளின் இருமருங்கும் நெடுக உயர்ந்த மலைகளும், பள்ளத்தாக்குகளும், அவற்றில் பாய்ந்தோடிக் கொண்டு இருக்கும் அருவிகளுமாக என அழகோ அழகாய் இருந்தன. இயற்கை அழகு மிக்க மஹாராஷ்டிரத்தை யாமினி கண்ணார தரிசித்துக் கொண்டு இருந்தாள். 

லோனாவாலா மற்றும் அங்குள்ள டைகர் லீப், பஜா கேவ்ஸ், கர்லா கேவ்ஸ், புஷி டேம், ட்யூக்ஸ் நோஸ், டிக்கோனா ஃபோர்ட், பவ்னா லேக், ரய்வுட் பார்க், லோஹாகட் ஃபோர்ட், வன்வன் டேம் பல்வேறு சுற்றுலாத் தலங்களும் அந்த இடத்தை சார்ந்தவைகள் தானே? லோனாவாலா சுற்றுலாப் பகுதி மும்பையில் இருந்து சில மணி நேர பயண தூரம் மட்டுமே என்பதால் மும்பை ஜனத் திரள் இங்கே அடிக்கடி இங்கே வந்துச் செல்வதுண்டு.

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் கொண்ட இரயில் பெட்டி என்பதெல்லாம் அங்கே பெயரளவிற்குத்தான். அதனை லோக்கல் ட்ரெயினை போல பாவித்து நிறைய மக்கள் கூட்டமாக ஏறி அமர்ந்திருந்தனர். அதனால் ஊரில் இருந்து வருகின்றவர்களை தத்தம் லக்கேஜீகளை பாதுகாப்பாக கவனித்துக் கொண்டு வருவதே பெரிய வேலையாக இருந்தது.

அப்போது “சிக்கி சிக்கி லோனாவாலா சிக்கி (chikki)” என அந்த இரயில் பெட்டிக்குள்ளாக விற்பனையாளர்கள் உலவ ஆரம்பித்தனர்.

இங்கே சிக்கி எனப்படுவது நம்மூர் கடலை மிட்டாய்கள் வகைகள்தான். அவைகளில் பல வகைகளில் இருக்கும். அவற்றில் நான்கு விதமான பாக்கெட்டுக்களை வாங்கி யாமினியிடம் கொடுத்து பத்திரப் படுத்தினான். அவளையும் உண்ணச் சொன்னவன் மும்பை சென்றதும் அக்கம் பக்கத்தவருக்கு கொஞ்சம் கொஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் சொல்லிக் கொண்டான்.

ஒரு வழியாக அவர்களது நீண்ட அந்தப் பயணம் முடிவுற அவர்கள் தாதர் ஸ்டேஷனில் இறங்கினர்.

“வாடா மகேன், வாங்க அண்ணி நல்லா இருக்கிறீங்களா?” இவர்களை எதிர்பார்த்து இருவர் நின்றிருக்க இவர்களது லக்கேஜை வாங்கிக் கொண்டனர்.

மாற்று நிலத்தில் தாய்மொழி கேட்டதில் இருந்த ஆசுவாசத்தில் யாமினி முகம் மலர புன்னகைத்தாள். எதைப் பேச? என்ன பேச? எனப் புரியாமல் தலையை ஆட்டி வைத்தாள்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *