2.”வளி”யவள்_சிறுகதை_ஜான்சி

“யாமினி நாம எங்கேயாவது சுத்த போயிட்டு வரலாமா?” என இவன் கேட்டதும் மகிழ்ச்சியாக தலையசைத்தாள். மதிய உணவு உண்டு விட்டு லோக்கல் ட்ரெயின் மூலமாக தாதர் மார்க்கெட் சென்று ஒரு சில மணி நேரங்கள் சுற்றி வந்தனர்.

மல்லிகைப் பூக்கள் முதலான எல்லா பூக்கள் பஜாரும் தாதரில் உண்டு. விமானம் மூலமாக தென்னகத்திலிருந்து ஃப்ரெஷ் ஃப்ரெஷாக பூக்கள் இங்கு வரவழைக்கப் பட்டு விற்கப்படும். இப்பூக்களை பெரும்பாலும் பெரும் வியாபாரிகள், மற்றும் முழம் பூக்கள் கட்டி விற்கின்றவர்கள் வாங்கிச் செல்வர். அது தவிர்த்து வீட்டு உபயோகத்திற்கு பூக்கள் வாங்குவோரும் உண்டு.

பொதுவாக மும்பையில் எந்த இரயில்வே ஸ்டேசன் அடுத்துச் சென்றாலும் துணிமணிகள் முதலான எல்லா பொருட்களும் வகைவகையாக மிக மலிவான விலையில் கிடைக்கும். தாதரிலும் சாலையின் இருமருங்கும் துணி வாங்க மற்ற பொருட்கள் வாங்க எப்போதுமே கூட்டம் இருக்கும்.

யாமினிக்கு கால் கிலோ மல்லிப் பூவும், பூச்சரம் கட்ட நூற்கண்டும் வாங்கிக் கொடுத்ததும் அவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. இன்னும் கால் கிலோ பூக்களை சாமிக்கு கட்டவென அவனிடம் கேட்டு வாங்கிக் கொண்டவள். பின்கள், கிளிப்புகள் என அங்கு அவனுக்கு சிலச் சில செலவினங்களை வைக்க, அவன் முகம் சுளிக்காமல் வாங்கிக் கொடுத்தான்.

பானிப் பூரி, பேல் பூரி, தஹி பூரி என இருவரும் ஒவ்வொரு வகையாக ருசி பார்க்க, வயிறு நிறைந்துப் போயிற்று.

திரும்ப வந்தது முதலாக யாமினி மணிக்கணக்காக அமர்ந்து பூக்களை கட்டி முடித்து தனது தலைக்கு வைத்து, அக்கம் பக்கம் பெண்களுக்கும் மல்லிச் சரத்தை பகிர்ந்துக் கொடுத்தாள். சாமிக்கு வாங்கி பூக்களையும் கட்டி அப்படியே செய்தாள். பூக்கள் அளவில் அதிகமாக இருந்ததல்லவா? 

குளிர்சாதனப் பெட்டி வீட்டில் இல்லாத வகையில் பகிர்தல் சரியான தீர்வாக இருந்தது. வீடெல்லாம் நறுமணம் நிறைந்து இருக்க, அவள் மனதிற்கு நிறைவாக இருந்தது.

சமையல் முடித்து, உண்டு வந்து படுக்கை விரித்தனர். அவள் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.

“ஏங்க பொண்ணுங்க வேலைக்கு போகிறதைப் பற்றி உங்க அபிப்ராயம் என்ன?”

“லேடீஸ் சைக்காலஜி படி பொண்ணுங்க வேலைக்கு போகிறதை தடை செய்தால் பிற்போக்குத்தனமான ஆண் என்று நினைப்ப… நான் சரியா சொன்னேனா?”

அவள் பொய்யாய் அவனை முறைத்தவாறு, “பார்த்தீங்களா ஒரு வாரம் என் கூட இருந்ததும் மூளை ஓவர் டைம் வேலை செய்யுது.நான் உங்க கிட்ட சைக்காலஜி கேட்கலை, உங்க ஒபீனியன் தான் கேட்டேன் சொல்லுங்க.” எனவும் சிரித்தான்.

“அது அவரவர் விருப்பம் பொருத்தது, உனக்கு வேலைக்கு போகணும் என்றால் போ.”

“தப்பா நினைக்கலின்னா ஒரு விஷயம் கேட்கட்டுமா?”

“ம்ம்”

“நீங்க ஏற்கெனவே சொன்னதுதான், கடன்கள் இருக்குன்னு. இப்ப கூட இந்த செலவெல்லாம் அதாவது வீடு வாடகைக்கு எடுத்தது, அப்புறம் இந்த பொருட்கள் எல்லாம் கடன் வாங்கிதானே செய்றீங்க?”

தயக்கமில்லாமல் “ஆம்” என ஒப்புக் கொண்டான். 

“இந்த கடன்லாம் நமக்கு திருமணமானதனால்தானே?, இல்லைன்னா நீங்க நினைச்சது போலவே நிதானமா உங்க வாழ்க்கையை வாழ்ந்திருப்பீங்க.”

“அப்படியும் கூட சொல்ல முடியாது யாமினி நான் பின்பு எப்போது கல்யாணம் செய்திருந்தாலும் இதே தான் நிகழ்ந்திருக்கும். மத்திய தர மக்களின் வாழ்க்கை கடனோடு கடப்பதுதானே? இதற்கெல்லாம் உன்னை காரணமாக்காதேமா.” என்றான்.

“…..”

“உனக்கு நான் அத்தனை வசதிகளை தர முடியாதே எனும் தயக்கத்தில் தான் நான் முன்பு உன்னிடம் பேசியது. மற்றபடி உன்னால் எனக்கு எதுவும் சிரமமில்லைமா. திருமணம் எனும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது நான் எனில் நான்தான் வருமானத்தை உயர்த்த வழி பார்க்க வேண்டும். ஏற்கெனவே வேறு வேலை தேடிக் கொண்டு இருக்கின்றேன்.”

“……”

“நீ வேலைக்கு போவது உன்னுடைய விருப்பம்தான். எனக்காக என எண்ணி உன்னை நீயே சிரமப் படுத்திக் கொள்ளாதே யாமினி.”

“எனக்கு வேலைக்கு போக வேண்டும்.”

“ம்ம்… உனக்கு ஹிந்தி தெரியாது, ட்ரெயினில் எங்கேயும் போக வரத் தெரியாது. எப்படி சமாளிப்பாயாம்?”

“தெரியாதென்றால் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். இப்ப இணையத்தில எத்தனை கத்துக்கலாம். ஹிந்தி என்ன பெரிய விஷயமா? அது ஒரு மொழிதானே?” 

பாட்டி வாங்கிக் கொடுத்த மொபைலை என தன் குருவை அறிமுகப் படுத்தினாள். கடந்த ஒரு வாரத்தில் தான் கற்ற ஹிந்தி வார்த்தைகளை அவனிடம் பட்டியலிட்டாள். அவளது நோட்டுப் புத்தகம் ஏற்கெனவே நிறைந்து இருந்தது.

அவளது ஆர்வத்தையும், தெளிவையும் துணிவையும் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நேர்மறை எண்ணங்கள் தொற்றுமாமே? அவள் அருகில் இருப்பதாலேயே அவனுக்கும் நம்பிக்கை பெருகியது.

“எனக்கு நடனம் தெரியும், கணிணித் தெரியும் என்னோட தகுதிக்கு எங்கே எல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அங்கே எல்லாம் வேலைக்கு அப்ளை செய்து வைத்திருக்கிறேன்.” என அவனிடம் தன்னம்பிக்கையாகச் சொன்னாள்.

சில மாதங்களில் ஒரு நடனப்பள்ளியில் அவளுக்கு வேலையும் கிடைத்தது. அவளது பணியிடம் தூரமாக இருக்கவே இருவரும் காலை முதலே சேர்ந்து அனைத்து வேலைகள் செய்து புறப்படுவர். இரவு யார் முன்பாக வந்தாலும் சமையலை ஆரம்பித்து விடுவர். 

Pages: 1 2 3 4 5 6 7 8 9


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *