“என் லீவு நேத்தே முடிஞ்சிருச்சு யாமினி, அரை நாளாச்சும் நான் இன்றைக்கு வேலைக்குப் போயே ஆகணும்” எனச் சொன்னவன் அவசர அவசரமாக வேலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.
இரவு யாமினி சரளா அக்கா உதவியுடன் மார்க்கெட் சென்று வந்திருந்தாள். அன்று தங்கள் வீட்டில் முதன் முறையாக சமைத்திருந்தாள். வேலையில் இருந்து லோக்கல் ட்ரெயினில் பயணித்து வந்த மகேந்திரன் கூட்ட நெருக்கடியில் நைந்தவனாக திரும்பி வந்து இருந்தான்.
இரவு அவன் தனது பெற்றோருடன் அவன் பேசுகையில் அவளும் அவர்களோடு பேசினாள். இப்படி இருவரும் தினமும் அவர்களுடன் பேசுவது வழக்கமானது.
அவனது தாய் அவளுடன் பேசும் போதெல்லாம் அவளுக்கு தாங்கள் வாழ்வளித்த வள்ளல்கள் என்பது போலவும், ஊர் உலகத்தில் இல்லாத மகனை தான் அவளுக்கு விட்டுக் கொடுத்தது போலவும் நொடித்துக் கொண்டே பேசவும், இதனை விட ஆயிரம் மடங்கு பேச்சுக்களை கடந்து வந்திருந்தவளது எருமை மாட்டுத் தோலுக்கு அது பெரிதளவில் உரைக்கவில்லை.
“அவர்களது மகனின் பணத்தை வீண் செலவு செய்யக் கூடாது. பணத்தை எப்படி சேமிக்க வேண்டும்.” என தாய் மனைவிக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருக்கையில் மகேந்திரன் சங்கடமாக அமர்ந்திருப்பான்.
“என் மகன் உழைக்கிறதில மிச்சம் வைக்கிறது போல சிக்கனமா வாழப் பழகு. இப்பவே சிக்கனமா இருந்தாதான் அங்க சொந்தமா வீடெல்லாம் வாங்கலாம்”
‘என்னது? சொந்தமா இங்க வீடா?’ சின்ன குடிசை வாங்கணும்னா கூட இருபதில் இருந்து இருபத்தியைந்து லட்சம் வேணுமே?’ மகேந்திரன் மனதிற்குள்ளாக புலம்பிக் கொண்டான். ஆம் மனதிற்குள்ளாகத்தான்.
அவனது படிப்பிற்கு கிடைத்த க்ளெர்க் வேலையில் அவனுக்கு கிடைக்கும் சம்பளம் 15000 மற்றும் சில படிகள். அதில் ஐந்தாயிரம் வீட்டு வாடகைக்கு அதனோடு கூட மற்றொரு ஆயிரம் தண்ணீர் பில் மற்றும் எலெக்ட்ரிசிடி பில்லிற்கு. அது போக ஊருக்கு அனுப்புவது மற்றும் தங்கைகள் திருமணத்திற்கென வாங்கி இருக்கும் லோன் இன்ஸ்டால்மெண்ட்கள் எல்லாம் கழிந்து அவனிடம் எப்போதுமே வீட்டுச் செலவிற்கென சொற்ப பணமே இருக்கும்.
காலை, மதிய உணவை பத்திருபது ரூபாய்களில் வடாபாவ், மிசல்பாவ் எனத் தின்று கழித்துக் கொண்டு இருந்தவனுக்கு அவன் பெற்றோர்கள் தங்கள் உறவினரான பாட்டியின் இறுதி விருப்பம் என திருமணம் செய்து வைத்து விட்டதோடு நில்லாமல், அந்தப் பெண்ணை அவர்கள் அதட்டுவதை கேட்க என்னவென்றுச் சொல்ல?
அவ்வப்போது அவனது தங்கைகளும் யாமினியிடம் பேசுவர். அவள் தேவைக்கு அதிகமாக எதையும் பேசுகின்றவள் இல்லை என்பதால் மதினி நாத்தனார்கள் உறவுகள் இதுவரை சுமூகமாக சென்றுக் கொண்டு இருந்தன.
இவனின் பெற்றோருக்கு மகனின் வருமானம் என்னவென்று தெரியாது, தாங்கள் செலவினங்களை இவன் தலையில் சுமத்துவது எல்லாம் புரியாது. ஆனால், சில நாட்கள் முன்பு மகனுடன் திருமணமான பெண்ணிடம் இப்படியெல்லாம் அதிகாரமாக பேச மட்டும் தெரியும்.
மாமியார் ஆனதுமே இப்படி புத்தி மாறி விடுமோ? அதிசயமான அதிசயம் தான் என மனதில் எண்ணிக் கொண்டாலும் வெளிப்படையாக இதனை சொல்ல முடியாது.
சொன்னால் என்னவாகும்? கல்யாணமாகி நாலு நாளில் அவ முந்தானையில் முடிஞ்சுக்கிட்டா என ஊரெல்லாம் ஒப்பாரி வைப்பதற்கா?
முந்தானையில் முடிவது எனும் எண்ணம் வந்ததும் மனைவியை எட்டிப் பார்த்தான். சின்னச் சின்ன விஷயங்களுக்கும் சிணுங்கி, அழுது ஊரைக் கூட்டும் பெண்ணைக் கூட ஒரு விதத்தில் ஆண் எளிதில் அணுகி விடுவான். அறிவார்த்தமான பெண்ணை அணுகுவது ஆணை பொறுத்த வரையில் மிகவும் சிரமம்.
அன்போ, அரவணைப்போ எதையேனும் ஆசிக்கின்றவளை இழுத்து அணைத்துக் கொள்ளலாம். ஆனால், எல்லாவற்றையும் தீர்க்கமாக அறிகின்றவளுக்கு அவனென்ன அணைத்து ஆறுதல் சொல்வது? கலங்காமல் நிமிர்ந்து நிற்கின்றவளை எங்கே சென்று அரவணைப்பது?
யாமினி தன்னை விட வயதில் சிறியவள் என்றாலும் அத்தனை அழுத்தமான பெண். படிப்பும், தெளிவும் என நிமிர்வாக இருக்கின்றவளை தாலி கட்டியாகி விட்டது எனும் ஒரு காரணத்தால் எல்லாம் மிக எளிதாக அவனால் அணுகி விட முடியவில்லை.
ஒன்றாகத்தான் இருவரும் இருக்கின்றனர்.ஆனால், கணவன் மனைவியாக எனச் சொல்லும் படியாக அவர்களுக்கிடையே இன்னும் எந்த பிணைப்பும் ஏற்படவில்லை. இவனுக்கு ஒரு பக்கம் தாழ்வு மனப்பான்மையும் மற்றொரு பக்கம் பொருளாதாரச் சிக்கல்களும் இருக்கின்றனவே? இவர்கள் இணைந்து எத்தனை தூரம் பயணிப்பர் என்பதே காலம் மட்டுமே கணிக்க இயலும்.
இப்படியே கணவன் மனைவி என இவர்களின் இந்த புதிய உறவும், பற்பல குழப்பங்களுமாக என ஓட்ட ஓட்டமாக அந்த வாரம் கழிந்து முடிந்திருந்தது. ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் வரை தூங்கி எழுந்தான். அவனுக்கு தனது நோட்டு புத்தகத்தில் எதையோ எழுதிக் கொண்டு இருந்தவள் கண்ணில் விழுந்தாள்.

Leave a Reply