2.”வளி”யவள்_சிறுகதை_ஜான்சி

ரிக்ஷாவில் சென்று அந்த நெருக்கடியான இடத்தில் இறங்கினர். இரவு எட்டரை ஆகி விட்டிருந்தது. யாமினியிடம் இருந்த கட்டுச் சோறெல்லாம் எப்போதோ முடிந்து விட்டிருந்தது. ‘இனி சமைக்க சாப்பிட எப்படி?’ என குடும்ப ஸ்த்ரீயாக சிந்தித்தாலும் தனது அண்ணபூரணனை ஏறிட்டுப் பார்த்தவள் ‘இவர் நம்மை பட்டினிலாம் போட மாட்டார்’ என எண்ணிக் கொண்டாள்.

சந்து, பொந்து எல்லாம் கடந்து இவர்கள் பயணம் ஒரு இடத்தில் வந்து முடிந்தது. அது பல வீடுகள் அடங்கிய ஒரு நீளமான பகுதி.

மற்ற வீடுகளில் இருந்த பற்பல மாநிலத்தை சார்ந்தவர்கள் தத்தம் வாசலில் நின்று புதுமணத் தம்பதிகளாகிய இவர்களை வேடிக்கை பார்க்க ஒரு அக்கா வந்து இவர்களுக்கு ஆரத்தி எடுத்தார். அந்த வீடு சின்னச் சின்ன அலங்காரத்துடன் இருந்தது. 

யாரோ அக்கறை எடுத்து வீட்டை சுத்தம் செய்து, அலங்கரித்து என அங்கே அத்தனையிலும் வெளிப்பட்டதென்னவோ அன்புதான்.

“வாம்மா வா” பெரியவர் ஒருவர் சொல்ல தனது வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள். அவரவர் ஊரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

“நேரமாகுதில்ல இங்க வாம்மா” பெரியவள் ஒருவள் அழைக்க அங்கே ஒரு ஸ்டவ்வில் பால் காய்ச்ச தயாராக இருந்தனர்.

“நம்ம அக்கா கை ரொம்ப ராசியாக்கும்” எனச் சொல்ல அந்த முதியவள் பாசமாக அவளை வழி நடத்தியதில் சின்னதாக பால்காய்ச்சி முடித்தனர். இவர்களுக்காக அவர்கள் வீட்டிலிருந்து உணவு வந்திருந்தது.

யார் எவர் எனத் தெரியாதவர்களெல்லாம் அவர்களுக்காக கூடி வரவேற்று இத்தனை செய்யவும் யாமினி நெகிழ்ச்சியாக உணர்ந்தாள். தெரியாத ஊரில் எத்தனை உறவுகளை சம்பாதித்து வைத்து இருக்கிறான் என கணவன் மீது மரியாதை எழுந்தது.

“தம்பி ரொம்ப பொறுப்பான பையன், அதிர்ந்தே பேசாது. கெட்டப் பழக்கம்னு ஒன்னும் கிடையாது” சரளா அக்கா வந்துச் சொல்லிச் செல்ல அந்த அக்காவிடம் மனதளவில் நெருங்கிப் போனாள்.

அந்த வீட்டின் பிரச்சனை என இருந்தது கழிவறைதான். டாய்லெட் ரூம் இல்லாதது அதற்காக வெளியே பொதுக் கழிப்பிடம் செல்ல வேண்டும் என்பதைக் கூட ஓரளவு சமாளிக்கலாம் என்றால் குளிக்க ஒதுங்க கூட மறைவில்லை. 

மொத்தமே ஒரு ஆள் நிற்குமளவிற்கு இடுப்பளவு ஒற்றைச் சுவர் மறைப்பு தான் “மோரி” என அழைக்கப் படும் அதில் தான் எல்லாம் செய்துக் கொள்ள வேண்டும்.

இதுவரையிலும் இல்லாத தயக்கம் இருவருக்குள்ளும் வந்து விட்டிருந்தது. அனைவரும் புறப்படவும், அவளுக்கு தனிமை கொடுத்து வெளியே சென்றான்.

திரும்ப வந்த போது அவள் உடை மாற்றி நைட்டியில் இருந்தாள்.

“ஏங்க?”

அட்டைப் பெட்டியை கட்டி இருந்த கயிறு அவள் கையில் இருந்தது.

“ம்ம்” இந்த கயிறை இப்படி குறுக்கா கட்டுனீங்கன்னா என் சேலையை மறைப்பா போட்டுக்குவேன்”, என்றதும் அவன் அந்த ஒற்றை அறையின் நடுவில் சுறுசுறுப்பாக கயிற்றை இழுத்துக் கட்டினான். அந்த கயிற்றின் மேல் யாமினி தனது அழுத்தமான சேலை ஒன்றை மறைப்பிற்கு தொங்க விட்டவள் ஆங்காங்கே ஊக்குகளைக் குத்தினாள். 

மோரிக்கு மறைப்பு போட்டாயிற்று இனி குளிக்கக் கொள்ள, அவசரத்திற்கு பயன்படுத்த தயங்க வேண்டாம். சரி ஒரு பிரச்சனை தீர்ந்தது அடுத்து உறக்கம் கண்களைச் சுழட்டுவதால் படுக்கை விரித்து தூங்க வேண்டும். 

இருவருக்கும் சேர்ந்து படுக்க என்னமோ போலிருக்க இருந்த கொஞ்ச இடத்திலும் தனித்தனியாக எதிரும் புதிருமாக விரித்து படுத்திருந்தனர்.

என்னதான் மின்விசிறியின் காற்று தாலாட்டினாலும் கூட, மகேந்திரனுக்கு மனப்புழுக்கம் அதிகமாக இருந்தது.

“சாரி” என்றான் அவன்.

“ஏன்? எதுக்கு?”

“ம்ம்…” அசௌகரியங்களை குறிப்பிட தயங்கினாலும் இவளுக்கு புரிந்தது.

“இந்த பிரச்சனைகள் எல்லாம் இருக்கும் என்றுச் சொல்லித்தானே அழைச்சுட்டு வந்தீங்க… அதனாலென்ன பார்த்துக்கலாம்.”

அலட்சியமாக சொன்னவளின் மாளிகை அவனது கண்முன்னே வந்தது.

Pages: 1 2 3 4 5 6 7 8 9


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *