உழைப்பின் அருமை புரிந்த தம்பதியர் வாழ்வில் முன்னேற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. சில மாதங்கள் கழிந்த பின்னர் சற்று வசதியான வீட்டில் குடியேறினர். ஆனால், அவர்களுக்குள்ளாக எதுவும் மாறி இருக்கவில்லை.
திருமணமான முதல் வருட கொண்டாட்டத்தை சமீபத்தில் சின்னதாக தங்களுக்குள்ளே வாழ்த்துகள் தெரிவித்து கொண்டாடி இருந்தார்கள்.
வேலையில், செலவில் பாதிப் பாதி என மனைவி பொருளாதார ரீதியாக அவனுக்கு உதவுவது அவனுக்கு பிடித்துத்தான் இருந்தது. கொஞ்சம் நிதானமாக மூச்சு விட்டாற் போல இருந்தது. ஆனால், மகேந்திரனின் அந்த நிதான மூச்சிலும் சில முட்கள் இருந்தன.
இருவரும் வாழ்வின் நெருக்கத்தில் வெறுமனே நண்பர்கள் போல இருப்பதே அன்றி கணவன் மனைவியாக இல்லாத போது அவளை வீட்டுச் செலவுகள் செய்ய அனுமதிப்பது அவனை நெருடியது.
அவனது தாழ்வு மனப்பான்மை அவளை நெருங்க அனுமதிப்பதாக இல்லை.நாங்கள் நண்பர்கள் மட்டும் தானா? ஒரு சில விளையாட்டுப் பேச்சுக்களும் சிரிப்புக்களும் மட்டும் போதுமானதா? அவன் மனதிற்குள்ளே தடுமாற்றங்கள் நிகழ ஆரம்பித்து இருந்தன.
மகேந்திரன் இப்போது பெரிய புத்தகக் கடையில் வேலைக்கு சேர்ந்திருந்தான். வேலையைப் போலவே சம்பளம் அதிகம்.பணி முடிந்து இவன் நொந்து நைந்து வருகையில் யாமினி மட்டும் இன்னுமாக பொலிந்து வருவாள்.
சமையலறையில் நிற்கும் போதே அவள் குரல் ஜதிகளை இசைக்கும்.
இரசித்து இரசித்து செய்யும் போது அது வேலையா என்ன? அது அவளது மனதை மலர்த்தும் வித்தையல்லவா? சிறு குழந்தைகளுக்கு அபிநயங்களை கற்பித்து அவர்கள் அதனை செய்வதை பார்க்கையில் கண்களில் தனிப்பட்ட பற்பல கனவுகள் விரியும். அதை பகிரப் போனால் கேட்கத்தான் எதிரில் ஆளிராது… ‘ம்ஹீம்… புது வேலையாம் …பிசியாம் ரொம்பத்தான்’
“மஹேன்… இன்னிக்கு எங்க நாட்டியாலயாவில் ஒரு ஜோக்… அந்த ஃப்ளர்ட் பத்தி சொன்னேன்ல…” இவள் ஆரம்பிக்கவும் அன்று அவன் அவளுக்கு முன்பாக சுருண்டு தூங்கி விட்டிருந்தான். நிஜமாகவே தூங்கி இருந்தானா?!
“மேரீட்னு சொல்லியும் கேட்க மாட்டேன்கிறானப்பா. நீங்க வந்து ஒரு நாள் பேசுங்க.”
என அவள் சொல்லிய அன்று தன் அலைபேசியில் வராத அழைப்பு வந்ததாக பாவித்து மகேந்திரன் வீட்டை விட்டு வெளியே சென்று இருந்தான்.
அவனுக்கு என்னவாகிற்று? என அவளால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.இப்படியே சில நாட்கள் கடந்திருந்தன…
அன்று வேலை நேரத்தில் மகேந்திரனின் அலைபேசி இசைத்தது. இந்த பரபரப்பான நேரத்தில் யாரழைத்தது?

Leave a Reply