
என்ன அதிசயம்!
எந்தன் உயிருக்குள்
உந்தன் பார்வைகள்
நீர் வார்த்ததுமே…
எந்தன் மன வெம்மைகள்
மாயமாகினவே.
என்ன அதிசயம்!
எந்தன் கனவுக்குள்
உந்தன் கனிவுகள்
காட்சியானதும்…
எந்தன் மன வெறுமைகள்
நிறைந்து தளும்பினவே.
என்ன அதிசயம்!
எந்தன் வாழ்க்கைக்குள்
உந்தன் வரவுகள்
அடியெடுத்து வைத்ததுமே…
எந்தன் வெற்றிகள்
வசப்பட்டனவே.
வாழ்வும் நீ
“வளி”யுமானவளே.
அந்த அறையை கனத்த மௌனம் சூழ்ந்திருந்தது. இன்று மட்டுமல்ல கடந்த ஒரு வாரமாகவே அந்த அறை அப்படித்தான் இருக்கின்றது. முழித்திருக்கும் தருணங்களில் எல்லாம் ஏதாகினும் ஜதியை முணுமுணுக்கின்றவளது அதரமும் கூட அமைதியை அணிந்துக் கொண்டதன் காரணம் என்னவென்றே புரியவில்லை.
“யாமினி” அவனது முதல் அழைப்பில் திரும்பிப் பார்த்தவளுக்கு அவனை என்னவென்று அழைக்க என்றும் கூடத் தெரியவில்லை. அத்தானா? மாமாவா? மச்சானா? மகேந்திரனா? அவனை என்னவென்று அழைப்பதாம்?
“ம்ம் சொல்லுங்க?”
“நான் இரண்டு நாளில் மும்பை போகணும்.”
“ம்ம்…”
“நீ என்ன நினைக்கிற?”
‘தான் என்ன நினைப்பதாம்? சாகும் முன்பாக இவன் கையில் தன்னை ஒப்படைத்துச் சென்ற அம்மாவின் அன்னையான அவளது பாட்டி எதையும் சொல்லிக் கொடுத்துப் போகவில்லையே?’
“நீங்க சொல்லுங்க”
“மும்பைல இருக்கிறேன் தான் ஆனா நான் ஒன்னும் பெரிய பணக்காரன் எல்லாம் இல்லை. பார்க்கிறது சின்ன கம்பெனியில் ஒரு வேலைதான். எட்டுக்கு எட்டு அறையில் தான் நாங்க இருக்கிறதே. நாங்கன்னா நான் என்னோட மற்ற இரண்டு நண்பர்கள். வாடகையை நாங்க பகிர்ந்துப்போம். இனி இப்ப கல்யாணத்துக்கு அப்புறம் தனியா ஒரு அறையை நான் வாடகைக்கு பார்க்கணும்.”
‘இனி தனி வீடு பிடித்து இருக்க வேண்டும். ‘வாடகை தனியாக கொடுக்க வேண்டுமென வருந்துகின்றானோ?’ யாமினிக்கு சிரிக்கவா? அழவா? வென்று இருந்தது.
“அது… அது இன்னொரு விஷயம் என்னன்னா…. வீடு இங்க இருக்கிறது போலவெல்லாம் வசதியா இருக்காது. இந்த தேக்கு மரத்தால இழைச்ச வீடு, இப்படி அழகான ஊஞ்சல் அதெல்லாம் விடு… இப்படி வீட்டுக்கு உள்ளேயே டாய்லெட் வசதி எல்லாம் கூட கிடையாது. என் கிட்ட முன் பின் கேட்காமலேயே என் அம்மாப்பா பாட்டியம்மா நிலைமையை பார்த்து கல்யாணத்துக்கு சரின்னு சொல்ல வச்சுட்டாங்க.”
‘இதற்காகத்தான் இத்தனை தயக்கமா?’ தன்னிடம் அவன் சகஜமாக பேசாத காரணத்தை அறிந்த பின்னே யாமினிக்கு சட்டென்று இலகு உணர்வு.
“என்ன மும்பைனா பயமா இருக்கா? மும்பையிலயும் நம்ம ஊர் மக்கள் நிறைய இருப்பாங்க. நல்ல ஊர்தான் ஆனால், இந்த அளவுக்கு வசதிலாம் என்னால செஞ்சு கொடுக்க முடியும்னு தெரியலை. பரத நாட்டியம் எல்லாம் கத்துக்கிட்டு இருக்க… அதையெல்லாம் அங்க வந்து வீணாப் போகுமேன்னு கூட கஷ்டமா இருக்கு.”
‘தன்னை இந்த மாளிகையின் உரிமையான பெண்ணாக எண்ணி மருகுகின்றான் போலும்? தன்னைக் குறித்து எதுவுமே தெரியாதோ? சரி மெதுவாக தெரிந்துக் கொள்ளட்டுமே? வாழ்க்கையில் எல்லாமே உடனே தெரிந்துக் கொண்டால் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகின்றது?’ முறுவலித்தவள் பேசும் முன்பாக, தனது அடுத்த கவலையை வெளிப்படுத்தி இருந்தான்.
“நான் பண்ணிரெண்டாம் வகுப்பு பாஸீ… இல்ல சாரி ஃபெயிலு” தடுமாறினான் “நீ?” கேட்டவனிடம்,
“நான்… நான் க்ராஜீவேஷன் முடிச்சிருக்கேன்.”
“ம்ம் யாமினி இன்னொரு விஷயமும் சொல்லணும். நான் இப்பதான் இரண்டாவது தங்கச்சி கல்யாணத்தை முடிச்சிருக்கேன், நிறைய கடன் இருக்கு. நான் இரண்டு வருசம் கழிச்சு கல்யாணம் செய்துக் கொள்ளுறதாதான் இருந்தேன். ஆனால், அம்மா தான்…” குறுகிப் போய் அமர்ந்திருந்தான்.
திருமணம் முடிந்து அடுத்து பாட்டியின் ஈமக் காரியத்தின் அன்று வந்துச் சென்ற இவனது உறவினர்களுள் யார் யார் தங்கைகள், தங்கைக் கணவர்கள் என நினைவூட்ட முயன்றாள் முடியவில்லை.
“…”
“உனக்கு விருப்பமில்லைனா வேணும்னா…” பிரிவைப் பற்றி அவன் பேசும் முன்னரே யாமினி அவனிடம்,
“நான் உங்க கூட மும்பை வரேங்க.” என்றிருந்தாள்.
பல நாட்களாக அவளது மனதை அரித்துக் கொண்டிருந்த பல கரையான்களை மகேந்திரன் தனது நேர்மை எனும் பூச்சிக் கொல்லிகள் கொண்டு கொன்று இருந்தான்.
திருநெல்வேலியை சேர்ந்த மகேந்திரன் தனது உறவினளான கேரளாவின் அரண்மனைக் கிளி ஒன்றை மணம் செய்து மும்பைக்கு பயணித்துக் கொண்டு இருந்தான். அவனது பெற்றோர் அவர்களுக்கு விடைக் கொடுத்து நெல்லையில் தங்கள் ஊருக்குத் திரும்பினர்.
அந்த பங்களாவை அடைத்துக் கொண்டிருந்த ஒரு முதிய உயிர் மேலுலகுக்கும், இன்னொரு உயிர் மும்பைக்கும் பயணித்ததில் அந்த உரிமையாளர்களுக்கு பற்பல
வருடங்கள் கழித்து வெகுவான ஆசுவாசம் எழுந்திருந்தது.
யாமினியின் திருமணச் சீர்களில் கொஞ்சம் மும்பைக்கும் மற்றவை நெல்லைக்கும் பார்சலாகின. அவள் அந்த அரண்மனைக்கு திரும்பி வந்து விடக் கூடாதெனும் முனைப்பில் அத்தனையும் மூவர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் மூலமாக வழித்தெடுத்து இரு பக்கமும் அனுப்பி வைக்கப் பட்டன.
நிஜமாகவே அவளது உரிமைகளெல்லாம் அவளது பாட்டியில் இறப்போடு முடிந்து விட்டனதான். அவளது பெற்றவர்கள் ஏற்கெனவே சொத்துக்கள் எல்லாம் பிரித்து வாங்கி, செலவழித்து முடித்து விட்டிருந்ததோடு தாங்களும் உலகத்தினின்று விடைப் பெற்றிருந்தனர்.
Leave a Reply