10 நிமிடம்
15 நிமிடம்
20 நிமிடம்
ரிஷா வரவே இல்லை. கத்தியை பிடிக்கவும் வலுவில்லாமல் அவனது கை நடுங்கத் தொடங்கிற்று. உடலின் கழிவுகள் உடலை விட்டு வெளியேற துடித்தன. கண்கள் கிறங்கி, உடலின் ஒவ்வொரு பகுதியும் இறுதி ஓய்வுக்கு துடித்தன.
*ஐயோ நான் வாழ வேண்டும்…”, எனும் ஆசை அப்போது தான் அவனுக்கு தோன்றியது.
எழுந்து தள்ளாடி தடுமாறி அண்ணன்கள் வீட்டிற்கு சென்றால் பூட்டி இருந்தது. அக்கா வீட்டிற்கு சென்றான், நிற்கவும் முடியாமல் கதவு திரையை பிடித்து தொங்கி நிற்க வீட்டை திறந்து போட்டவளாய் அவள் எங்கே சென்றாளோ?
தள்ளாடி, தடுமாறி அதே திண்டில் வந்து அமர்ந்தான். அதற்கு மேல் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சோர்ந்து சாய்ந்து விட்டான். அவனுக்கான வாழ்வின் வழிகள் அனைத்தும் ஒவ்வொன்றாய் அடைப்பட்டு விட்டன.
ஏதேச்சையாக சண்முகத்தின் வீட்டிலிருந்து வெளி வந்த அரங்கநாதனுக்கு தன் உடன் பிறப்பின் உயிர் துடிப்பு புரிந்ததோ? அவனை அடையாளம் கண்டு ஓடி வந்து, ஏதோ தவறாக நடந்து விட்டது என் புரிந்து, அவனை அள்ளிப் போட்டுக் கொண்டு, சந்திரனையும் அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் நோக்கி ரிக்ஷாவில் விரைய,
“எனக்கு வாழணும் அண்ணா…”
“ஆமாண்டா உனக்கு ஒன்னும் ஆகாது..பயப்படாதே…”
“எனக்கு ரிஷாவை கல்யாணம் பண்ணிக்கணும்னா…”
“உனக்குத்தான் அவ, கவலைப் படாதே சுந்தரு…”
மாறி மாறி அதையே புலம்பினான்.
“நீ பொழைச்சுப்பேடா…”, கண்ணீர் துளிகள் தெறித்தன.
“உனக்குத்தான் அவளை கட்டி வைப்போம்டா…” ஆண்கள் இருவரும் கதறினர்.
அவன் சட்டையில் இரத்தக் கறை பார்த்து திறக்க, அங்கே அவனின் நெஞ்சை துளைத்துக் கொண்டு அவளின் பெயர்.
தொடர்ந்த சுந்தரின் புலம்பல் சற்று நேரத்தில் நின்றுப் போக, ஹாஸ்பிடலில் தூக்கிக் கொண்டு ஓடோடிச் சென்றவர்களுக்கு கிடைத்த பதில்,
“ஏற்கெனவே இறந்து விட்டான்…” என்பதே
பல மாதங்களாக தேடியும் கிடைக்காத உடன் பிறப்பு கையில் கிடைத்தும் இழந்த நிலையில் அடுத்து என்ன செய்வது? பிணத்தை எங்கு கொண்டுச் செல்வது? முறையாக எல்லாம் செய்ய வெண்டுமே? ஊரிலிருந்து பெற்றோரை அழைத்து வரவேண்டுமே?
செயலற்றவர்களாய் நின்றவர்களை சண்முகம் அழைத்துச் சென்றார். அவர் காட்டிய இடத்திலெல்லாம் அவர்கள் கையொப்பம் இட்டார்கள். ஏனென்றால், அது வரை அவர்களுக்கு அதுதானே பழக்கம்.
பிரேதத்தை வண்டியிலிட்டு ஏற்றினர், வீட்டிற்கு செல்லத்தான் போல என எண்ணியவர்களாக அவர்களும் ஏறினர். மின்மயானத்திற்கு சென்ற அந்த வண்டியிலிருந்து சுந்தரின் உடல் இறக்கப்பட்டது.
சரியாக ஒரே ஒரு மணி நேரத்தில் தேகம் விரைத்தவர்களாக, கையில் ஒரு பிடி சாம்பலாக மாறிய சுந்தரை ஏந்தியவர்களாக, பிரம்மையில் நின்றுக் கொண்டிருந்தனர் சகோதரர்கள் இருவரும்.
தொடரும்


Leave a Reply