அத்தியாயம் 4 _ துரத்தும் நிழல்கள்_ஜான்சி

ஓர் நவீன வெடிபொதி கீழ்வருபவற்றை கொண்டிருக்கும்:
1. எறியமாக, தோட்டா;
2.பொதியுறை, அனைத்து பொருட்களையும் ஒன்றாக பிணைத்து வைத்திருப்பது;
3.உந்துபொருள், உதாரணமாக வெடிமருந்துஅல்லது புகையற்ற மருந்து;
4. விளிம்பு, இதைபிடித்து தான் சுட்ட பொதியுறை, அறையில் இருந்து நீக்கப்படும்;
5. எரியூட்டி , உந்துபொருளை தீமூட்டும்.
தோட்டா என்பது Gun அதாவது சுடுகலனின் குழலில் இருந்து வெளியேறும் எறியமே ஆகும். ஆங்கிலத்தில், புல்லட் என்ற சொல், பிரெஞ்சு வார்த்தையான boulette-ல் (பொருள்: “சிறு பந்து“) இருந்து வந்தது. தோட்டாக்கள் வெவ்வேறு வகையான மூலபொருட்களால் செய்யப்படுபவை. தோட்டாக்கள், அதன் தேவைக்கேற்ப பல பாணியிலும், வடிவிலும் தயாரிக்கப்படுகிறது. தோட்டாக்கள் இயல்பாக எந்த வெடிபொருளையும் கொண்டிருக்காது, மோதலாலோ அல்லது துளைத்தோ தான் இலக்கை சேதமடையச் செய்யும்
தோட்டாவின் உந்துதல் பல வழிகளில் நிகழலாம்:
- வெடிமருந்தை மட்டுமே பிரயோகிப்பது (தீக்கல்லியக்க ஆயுதங்களை போல்)
- தட்டும் மூடி மற்றும் வெடிமருந்தை பிரயோகிப்பது
- வெடிபொதியை (தோட்டா,பொதியுறை, வெடிமருந்து, மற்றும் எரியூட்டி ஆகியவற்றின் ஒன்றிணைப்பு) பிரயோகிப்பது

ரிஷாவோடு மற்றவர்களையும் மும்பையில் உதிர்த்து விட்டிருந்தது இரயில். அந்த ப்ளாட்பாரத்தில் ஆட்கள் குறைந்து சுற்றும் முற்றும் யாரும் இல்லாத நிலை வந்து விட்டிருந்தது. சாயுங்காலம் 5 மணி அளவில் அங்கு வந்துச் சேர்ந்து, இன்னும் அரை மணி நேரம் ஆகியும் ரயில்வே ப்ளாட்பாரத்திலேயே, இருந்த இடத்திலேயே அசையாமல் உறைந்தவளாக அமர்ந்திருந்தாள் ரிஷா.
தான் வெகுவாக ஆசைப்பட்ட சுதந்திரம் தற்போது திகட்ட, திகட்ட அவளுக்கு கிடைத்திருக்கிறது. அக்கம், பக்கம் தன்னை கட்டுப் படுத்துவார் யாருமில்லை. இதைச் செய்யாதே , அதைச் செய்யாதே என நெருப்பைத் தேடி ஓடும் குழந்தையை அதட்டுவது போல அதட்டுவதற்கு அவளோடு ஆட்களே இல்லை. அப்படி இருந்து, கூட, இந்த சுதந்திரம் இனிமையாக இல்லாமல் இவ்வளவு கொடுமையாக இருப்பதை தான் எப்படிச் சொல்வது? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.
எதற்கு வந்திருக்கிறோம்? என்றே புரியாமல், வரவேற்க ஆளுமில்லாமல், அநாதரவாய் எப்படியோ கனவுகளின் நகரமாம் மும்பைக்கு வந்து விட்டாள்.
மும்பையை ஒரு வார்த்தையில் விளங்கச் செய்ய வேண்டுமானால் “பரபரப்பு” என்று எழுதி அதனடியில் கோடிட்டு ஒற்றை வார்த்தைச் சொல்லி முடித்து விடலாம். உலகமே உற்று நோக்கும் பாலிவுட்-ம் நட்சத்திரங்களும், கிரிக்கெட்டர்களும் இங்கே இருந்தாலும் நடுத்தர மக்கள்களின் கூடுதான் இந்நகரம்.
பெஸ்ட் பஸ், லோக்கல் ட்ரெயின் இவ்விரண்டும் மும்பையின் இரண்டு கண்கள். லட்சக்கணக்கான பயணிகள் தினமும் மும்பையின் இந்த ஓரமும், அந்த ஓரமும் பயணித்து, உழைத்து தங்கள் வருவாயோடு, இந்திய தேசத்தின் வருவாயையும் ஈட்டி, களைத்து வீட்டிற்கு வந்து தூங்கி, மறு நாள் அதே பரபரப்பில் எழுந்து புறப்பட்டு, நிமிஷ நேர வித்தியாசங்களில் லோக்கல் ட்ரெயின்களை மனப்பாடமாய் வைத்து, தொற்றிக் கொண்டு, பயணித்து இதுவே அவர்களின் அன்றாட வாழ்க்கை எனில்,
வருடம் ஒரு முறையாகிலும் வரும் மழைப் பேரிடர்களிலும் அரசாங்கத்தின் உதவியை எதிர்பாராமல், பலவித இன, மத மக்களும் தோழமையோடு ஒருவருக்கொருவர் உதவி செய்து, பஸ்களும், இரயிலும் துண்டிக்கப்பட்டாலும் அசராமல் பல மணி நேரங்கள் நடந்தே வீடு வந்து சேர்ந்து அடுத்த நாள் சலிக்காமல் மறுபடி அலுவலுக்கு பயணிக்கும் நெஞ்சுரம் கொண்டது மும்பை மாநகரம்.
கடல்வழி வரும் தீவிரவாதியோ, பல இடங்களில் அல்லது இரயில் பெட்டிகளில் குண்டுவெடிப்போ, எதுவும் எங்களை 24 மணி நேரத்திற்கு மேல் கட்டுப் படுத்தி வைக்க முடியாது என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு விறுவிறுவென அடுத்த வேலையை கவனிக்கும் எம் பணி அயராது பணிப்புரிவதே எனக் கூறும் மாநகரம்.
இந்த பரபரவென கடக்கும் மாநகரத்தில் நாட்கள் நொடி வேகத்தில் நகர…
ஒருவன் எப்போது 20 வயதிலிருந்து லிருந்து 40ற்கு வந்தான், 40 வயதிலிருந்து 60 ற்கும், 60 வயதிலிருந்து எப்போது டிக்கெட் வாங்குகிறான் என்றே கணிக்க முடியாது. மும்பை நகர வாழ்க்கையின் வேகம் அப்படி.


Leave a Reply