“ஏதோ குடிபோதையில் புத்திக் கெட்டு செஞ்சுட்டான் போலிருக்கு… அந்த வீடியோவில் உங்க பொண்டாட்டியும் இருக்காப்ல, அதனால இந்த விஷயம் தெரிஞ்சா உங்களுக்கும் தான் மானக்கேடு. இதை வெளிய தெரியாம மறைச்சுடலாம் தம்பி” குமரேஷ் உறவினர் ஒருவர் நயமாக பேசுவதாக எண்ணி எதையோ பேச,
“எங்கே அந்த வீடியோவில் என் பொண்டாட்டி எங்கே இருக்கான்னு எனக்கு காண்பிங்களேன்?” இகழ்ச்சி முறுவலோடு பிரனீத் அவரிடம் கேட்டான். அதன் பின் தான் அந்தப் பெரியவர் மறுபடி காணொளியைப் பார்த்தார் போலும். அதில் குமரேஷின் முகம் மற்றும் குரல் மட்டுமே தெரியும் வண்ணம் அவன் படம் பிடித்திருந்தான்.
“அவன் ஆலிஸை கொஞ்ச நஞ்சமா படுத்தி வச்சிருக்கான். அவன் செஞ்சதுக்கு கொன்னு போடலாமான்னு தான் ஆத்திரம் வந்தது, ஆனால், யார் பேர் கெடும்? இப்ப ஆதாரம் இருந்தும் அவளை கூசாம இந்த பேச்சு பேசுற உங்களை மாதிரி வாய்கள் எல்லாம் அவளை கூறு கூறா பிரிச்சுப் போடாது? அதனாலத்தான் இத்தனை பொறுமையா இருக்கிறேன்.”
….பேச்சற்று அமைதியானர்.
“இதோ இந்தம்மாக்காக கேஸை வாபஸ் செய்யலாம்னு நினைச்சேன், ஆனால் நீங்க பேசுறது சரியா இல்லை”
என்றவன் ஆலிஸின் அறைக்குள் சென்று அவளுக்கு தேவையான உடையை தேடி எடுத்தான். கட்டிலில் அவளது பெற்றோரின் புகைப்படம் கண்டு அதனையும் எடுத்து வைத்தான். கைப்பை, மொபைல் ஃபோன், சார்ஜர் தேவையானவற்றை எடுத்து ஒரு பையில் போட்டவன் கதவைப் பூட்டி புறப்பட்டான்.
விறுவிறுவென்று அவன் கீழே இறங்கவும்,
“போலீஸ் ஒன்னும் செய்ய முடியாது, கேஸ் பலமா இருக்குன்னு சொல்லிட்டாங்க… நான் ஆலிஸ் பாப்பாவை பார்க்கணும் தம்பி” மஞ்சு பிரனீத்திடம் இறைஞ்சினாள்.
இடையில் பேச வந்த தன் உறவினரை தடுத்தாள். “நான் அந்த மனுசனை நம்பி இரண்டு புள்ளப் பெத்து வச்சிருக்கேன்… அதுங்களை வளர்த்துப் பொழைக்கணும், நீங்க எதையாவது பேசி என் வாழ்க்கையை கெடுத்துராதீங்க மாமா” கையெடுத்துக் கும்பிட்டாள்.
மஞ்சுவின் குரலில் நின்றவன் “ஆலிஸை அழைச்சுட்டு கொஞ்ச நேரத்தில் வரேன். போலீஸ் ஸ்டேஷன் வாங்க, நான் சொல்லுறதுக்கு கட்டுப் படுறதாக இருந்தால் மட்டும் பேசலாம்” என்றான்.
“சரி தம்பி” என கண்ணில் ஒளி சேர்ந்தவளாக தலையசைத்தாள் மஞ்சு தலைவிரிக் கோலமாக இருந்தவள் மறுபடி போலீஸ் ஸ்டேஷன் செல்ல புறப்பட்டாள். வாழ்க்கையில் தவறு செய்யாமலும் சிலர் தண்டிக்கப் படலாம் இந்த மஞ்சுவைப் போல…
பிரனீத் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றவன் ஹோட்டல் அறையை திறந்து உள்ளேச் செல்ல அப்போதுதான் எழுந்துக் கொண்டிருந்தாள் ஆலிஸ்.
கையில் ஃபோனும் இல்லாமல் அலுவலகம் செல்ல வழியும் புரியாமல் இருக்க, சிந்தித்தவாறு அமர்ந்திருந்தாள். இரவின் கலக்கம், பிரனீத்தின் உதவி அவர்களுக்குள்ளாக ஒரே நாளில் நெருங்கிய அந்த உணர்வு பந்தம் அவளுக்கு பகலில் சூரியனின் ஒளியில் சற்றுக் கூசியது. தன்னைக் குறித்து எதையும் நினைத்துக் கொள்வானோ? என்று எண்ணியவள் சங்கடமாக அமர்ந்திருக்க அவளிடம் அந்த பையை நீட்டினான்.
உள்ளாடை முதல்கொண்டு கொண்டு வந்தவன் முகம் பார்க்க வெட்கினாள். “துணி மாத்திட்டு வா வெளியில் போகணும்” அவளைக் கவர்ந்த அந்த மென்குரல் ஆனால் அதில் இருந்த ஆளுமை… தன்னைப் பார்த்தவளை Yen Nodthiya? (என்னப் பார்க்குற?) என்றான்.


Leave a Reply