சடாரெனெ தன் அலுவலகத்தின் உள்ளே வந்து அவன் ரிஷாவை விடுவிக்க முயல, அங்கிருந்த தடியன் தன் கை முஷ்டியை ஓங்கி அவன் தலை மீது இறக்கினான், அது அடியல்ல இடி போலல்லவா இருந்தது. ரிஷி நிலைக் குலைந்தான்.
தபதபவென அந்த குண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவர்களை சூழ்ந்த வண்ணமே ரிஷியின் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். ரிஷியின் கைகள் முறுக்கப் பட்டு ஒருவன் அவனை பின்னாலிருந்து பிடித்துக் கொண்டான். ரிஷியும், இந்தரும் ரிஷாவும் இப்போது அவர்கள் பிடியில்.
தப்பித்துச் செல்ல வழியின்றி சுற்றிலும் அந்த தடியன்கள் நிற்க ரிஷாவின் மனம் அந்த களேபரத்திலும் இது ஜீஹீவில் துரத்தியதும், பிரபாவை தேடிச் சென்ற போது பின்வந்து பில்டிங்க் செக்யூரிட்டியிடம் விசாரித்ததுமான கோஷ்டி இல்லை என புரிந்துக் கொண்டாள்.
அடுத்து என்னச் செய்வது எனப் புரியாமல் அவள் மூளை ஏகத்திற்கும் மந்தமாகி இருந்தது.
ரிஷாவை கைப் பிடித்து இழுத்தான் ஒருவன் அவளை வெளியே அழைத்துச் செல்ல மற்றவர்கள் வழி ஏற்படுத்திக் கொண்டு முன்னே நகர்ந்தார்கள்.
ரிஷியை பிடித்துக் கொண்டிருந்த தடியன் வேலை முடிந்ததென சற்றே அவன் பிடியை தளர்த்த வாயிலில் இழுபட்டுக் கொண்டிருந்த ரிஷா மீது பாய்ந்தான் ரிஷி.
அவளைத் தழுவிய ரிஷி புலம்பினான், “ரிஷா மை லவ் உன்னைப் பாராமல் நான் எப்படி இருப்பேனோ? ஐ லவ் யூ மை டார்லிங்க்…”, இன்னும் ஏதேதோ பிதற்ற, ஏற்கெனவே கைகள் பின்னால் கட்டுண்டு இருக்க, இன்னொருவன் தோளோடு சேர்த்து அவள் கையைப் பிடித்திருக்க தன் மீது பாய்ந்து அணைத்து தன் உடலை தழுவிய ரிஷியின் செயலில் அதிர்ந்தாள், தடுமாறி நின்றாள்.
அவளைப் பற்றிக் கொண்டிருந்தவர்கள் இருவரும் தன் ஒற்றைக் கையால் ரிஷாவை பிடித்த வண்ணமே மற்றொரு கையால் ரிஷியை பிடித்து தள்ளினர்.
ரிஷியை தவறவிட்டவனை முறைத்தனர், அவசரமாய் சில ஹிந்தி, மராட்டி கெட்டவார்த்தைகள் அவர்கள் வாயினின்று உற்பத்தியாகி சுற்றுப்புற சூழலை மாசுப்படுத்தி மறைந்தன.
ரிஷியை தவற விட்டவன் தனக்கு அது பெரிய அவமானம் எனும் மன நிலைக்கு வந்திருக்க மற்றவர்களால் தள்ளி விட்டதால் பின்பக்கமாய் விசையில் வந்தவனை பின்னாலிருந்து வேகமாய் உதைத்தான். அருகிலிருந்த மற்றொருவன் அவன் நெஞ்சில் தன் தன் கைகளை குவித்து தாக்கினான். வலியில் ம்ம்க்க் ஒலியெழுப்பியவாறு வயிற்றொடு மடங்கியவனாக கீழே விழுந்தான் ரிஷி.
இந்தரையும் முகத்தில் குத்தி மற்றொருவன் மூர்ச்சையாக்கினான், அதுவரை திமிறிக் கொண்டிருந்தவன் சரியவே அவனைப் பிடித்துக் கொண்டிருந்தவன் தள்ளி விட்டான். ரிசப்ஷன் இருக்கையில் விழுந்து உருண்டு கதவிற்கு பின்னால் கால்கள் மடங்கி சரிந்தான் இந்தர்.
தனது அலுவலகத்தின் வாசலில் சுருண்டுக் கிடந்த ரிஷியை அவர்கள் குப்பைப் போல உள்ளே இழுத்துத் தள்ளி, இருவரையும் டிடெக்டிவ் ஆபீஸீலேயே உள்ளே அடைத்துப் போட்டு அவர்களின் மொபைலை தேடி எடுத்துக் கொண்டு வெளியிலிருந்து பூட்டி க்ரில் கதவை சாத்தினர்.
ரிஷாவை ஒருவன் தோளோடு கைப்போட்டு பிடித்து இருந்தான். வெளியில் பார்க்க ரொம்ப நெருங்கிய நட்புப் போல தோன்றும் வகையில் அவளை நோக்கி சிரித்தவாறே, அப்படியே கீழ்த்தளம் வரை கொண்டு வந்தான்.
அவள் பேசாதவாறு, உதவிக்காக குரல் எழுப்பாதவாறு துப்பாக்கியின் குளிரான இரும்பு உலோகமுனை மற்றொருவனால் அவளது பின்னங்கழுத்தில் பதிக்க வைக்கப் பட்டு இருந்தது.


Leave a Reply