ஓரிரு மாதங்கள் கழித்து மறுபடி சுகந்தி தன் கணவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து இருந்த போது கிழிந்த நாராய் ஜெனரல் வார்டில் கிடந்த செல்வியை கண்டவருக்கு என்னவென்று சொல்ல முடியாததொரு உணர்வெழுந்தது.
செல்வியின் அருகில் அமர்ந்து வெகு சிரத்தையாக ஆரஞ்சுப்பழத்தின் தோலை நீக்கி அவளுக்கு சுளையை ஊட்டிக் கொண்டு இருந்த ஆஜானுபாகு உருவமான அந்த ராஜன் பக்கத்து பெட்டில் இருந்த யாரிடமோ,
“புள்ளை வேணாம்னு அவளே கலைச்சுக்கிட்டா, அஞ்சாவது மாசம்லாம் குழந்தையை கலைக்கக் கூடாது தாய்க்கே ஆபத்தாகிடும்னு சொல்லுறாங்க. இவ கொஞ்சம் யோசிச்சிருக்கலாம், சரி என்னச் சொல்ல?” என வெகு கனிவாய், நாலும் தெரிந்த நல்லவனாக விபரமாய் வினயமாக பேசிக் கொண்டு இருந்தான்.
ஓரிரண்டு வாரங்கள் கடந்திருந்தன.
இம்முறை சுவற்றின் அப்பக்கம் அந்த கொய்யா மரத்தின் அருகில் இருந்த திண்டில் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் அமர்ந்திருந்தவளை கனிவாய் வருடியது சுகந்தியின் பார்வை.
“எப்படி இருக்கம்மா? உடம்புக்கு பரவாயில்லையா?”
அதுவரை தனக்கு நேர்ந்தது என்னவென்று யாராவது கேட்க மாட்டார்களாவென காத்திருந்தாள் போலும்
“நான் புள்ளையை கலைக்கலை மாமி, அன்னிக்கு என்னை பிடிச்சு ஆட்டு உரலில தள்ளி விட்டுட்டாங்க வயித்தில அடிப்பட்டுருச்சு”பொலபொலெவனெ பொழிந்தது அவளது கண்ணீர். அவளும் சுகந்தியை மருத்துவமனையில் கண்டிருந்தாளே?
“மரியா மகன் அவளைப் போலவே நல்லப் பையனா இருப்பான்னு நினைச்சுட்டேன்மா, இப்படி இருப்பான்னு நினைக்கலை.” இவரது குரலில் ஆழ்ந்த வருத்தம்.
“ நல்லவங்க தான் மாமி, ஆனா அந்த குடி இருக்கே. குடி, குடிச்சுட்டா போதும் என்ன சைத்தான் வரும்னே சொல்ல தெரியலை மாமி. அப்படியே தலைகீழா மாறிடுறாங்க.”
“…”
“என்னையை கேட்டா குடிங்கிறது ஒருவரோட தனிப்பட்ட பழக்கம் மட்டுமில்ல மாமி, குடும்பத்துக்கே கொள்ளி வைக்கிற கொலைபாதகம். குடிக்கிறவங்க குடும்பம் இருக்கே அவங்க எல்லாம் நல்ல நாள் பெரு நாளுக்கு சொந்தக்காரங்க கல்யாணத்துக்குன்னு எங்கயும் ஒரு இடம் போக முடியாது அங்கயும் வந்து நம்ம மானத்தை வாங்குவாங்க. அவங்க வீட்டில இருக்கிறவங்களை குடும்பத்தில ஒருத்தனும் மதிக்க மாட்டான்.”


Leave a Reply