அத்தனை பெரிய கத்தி, அது நிச்சயமாய் சுந்தர் கொண்டு வந்ததாகத்தான் இருக்கும், அது யாருக்காக இருக்கக் கூடும்? என யோசிக்கையில் தன்னுடைய மகள் ரிஷாவைத் தவிர அவன் ஆத்திரம் கொள்ளும் யாரும் அவருக்கு நினைவுக்கு வரவில்லை.
அடப்பாவி, அந்த பச்சப்புள்ளையை அன்றைக்குத்தான் அடிச்ச, இன்றைக்கு கொல்லவே துணிஞ்சிட்டியா? தகப்பனாய் அவர் இரத்தம் கொதித்தது.
பாம்பிற்கு எத்தனை தான் பால் ஊற்றினாலும், தன் விஷப்பல்லை காட்டாமலிராது.
அதன் சுபாவத்தின் படி கொத்தாமல் இராது… எனும் உண்மையை அவர் புரிந்துக் கொண்டார்.
முதன் முறையாக சுந்தர் மீது அவருக்கு அடங்காத கோபம் எழுந்தது. அவன் சரியாகி வரட்டும், மறுபடி ஊருக்கு அனுப்பி வைத்து விடுகிறேன், என சுந்தரைக் குறித்து எண்ணினாரே தவிர தானும் தன் குடும்பமும் தான் இன்றைய நாளுக்குப் பின்னர் ஊர் ஊராக அலையப் போவதை அவர் உணரவில்லை.
முன்தினம் செல்விக்கு காலில் ஏதோ லேசாக அடிப்பட்டிருந்தது. இப்போதெல்லாம் மனைவி துணை இல்லாமல் ரிஷா எங்குமே செல்ல சண்முகம் அனுமதிப்பல்லை என்பதால் ரிஷாவை அன்று ட்யூஷனுக்கு போக வேண்டாமென சண்முகம் தடுத்திருந்தார். அது மிகவும் நல்லதாகப் போயிற்று இல்லை என்றால் அவர் இந்நேரம் தன்னுடைய அருமை மகளை இழந்திருப்பார் அல்லவா? கற்பனை செய்தவர் உடல் ஒருமுறை அச்சத்தில் சிலிர்த்து, குலுங்கி அடங்கியது.
இவ்வாறு பலவிதமாய் யோசித்துக்கொண்டு மருத்துவமனையை அவர் அடைந்த பொழுது, சுந்தர் ஏற்கனவே இறந்து விட்டதாய் சொல்லி இருந்தனர்.
அவர் கண்முன் அரங்கநாதனும் சந்திரனும் தன் தம்பியின் இறப்புச் செய்தியைக் கேட்டு, அழுகையில் திக்கு தெரியாதவர்களாய் நின்றதைக் கண்டார். முதலில் அவர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி தேற்றி, உள்ளேச் சுந்தரின் பிணத்தைப் பார்க்க சென்றவருக்கு அவன் முகமே முதலில் அடையாளம் தெரியவில்லை.
முற்றிலும் தோற்றத்தை மாற்றி இருந்த அவன் முடி வெட்டும், வித்தியாசமாக அணிந்திருந்த சட்டையும், அந்த சட்டை அதில் என்ன ரத்தக் கறை? அதை திறந்து எடுத்துப் பார்த்த போது, தன் நெஞ்சில் அவன் ‘ரிஷா’ வென எழுதியிருந்த மகளின் பெயர் கண்டு அந்த தகப்பன் ஆடிப் போனார். இது சின்னப் பிரச்சனை அல்ல… அவர் மனதில் எச்சரிக்கை மணி அடித்தது.


Leave a Reply