அவன் உயிரோடு இருந்தாலாவது எப்படியாவது அவனை பேசி சரி செய்து விடலாம் ஆனால் இப்போது இறந்துவிட்டான் என்ன செய்வது?
முறையாக சுந்தரின் இறுதி யாத்திரைக்கு ஏற்பாடு செய்தால் என்னவாகும்? அவர் மனதிற்குள்ளாக காட்சிகள் ஓடியது. அவன் நெஞ்சில் இருக்கும் அந்த அடையாளம், இதுவரை தெரியாத அனைவருக்கும் அவன் சாவின் காரணத்தை தெரிவித்து விடும் அல்லவா?
அவன் நெஞ்சில மாமா மகள் பேர் எழுதி இருக்கிறான்பா?
அப்படினா அவளால தான் அவன் இறந்திருக்கணும்.
ஒருவேளை காதலிச்சுட்டு ஏமாத்தி இருப்பாளோ?
இருக்கும் இருக்கும்…யார் கண்டா எந்த புத்துல எந்த பாம்போ?
யாரு ரொம்ப அமைதியா இருக்குமே அந்தப் பொண்ணா?
ஆமாம்கா, ஊமை ஊரைக் கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க?
ஒழுங்கா பிள்ளையயை வளர்க்கணும், இல்லைன்னா இப்படித்தான் எல்லோர் வாயிலயும் கிடந்து அரைப் படணும், பொட்டப் பிள்ளையா அடக்கமா இல்லாம இந்த பிள்ளை என்ன வேலை செஞ்சு வச்சிருக்கு பார்த்தியா?
இந்த வயசிலயே இந்தப் பிள்ளை இந்த விவரமா இருக்குதே, இதுவே வாலிப வயசானா என்னா வரத்து வருமோ?
அதான் என் மனசு ஆறவே இல்லை, இப்படி ஒருத்தனை கொன்னுட்டாளே? படுபாவி, அவ விளங்குவாளா? உருப்படுவாளா?
நிஜமாக இல்லாவிடினும், இப்படியெல்லாம் நிகழ்ந்து விட வாய்ப்புள்ளதே என தன் காதுக்குள் ஒலித்த ஊராரின் வசவுகளை குறித்து எண்ணவும் இயலாமல் காதுகளை பொத்திக் கொண்டார்.
இவனை முறையாக தகனம் செய்ய அனுமதித்தால் ஒரு பாவமும் அறியாத தன் மகளின் வாழ்வை அல்லவா அது பாதித்து விடும். தன் மகளின் தகப்பனாக அந்த சூழ் நிலையில் மிகவும் கலங்கினார்.
அவருக்கு இப்போது தன்னுடைய மகளின் மானத்தையும் வாழ்க்கையும் தவிர வேறு எதுவும் ஞாபகம் இல்லை. இத்தனையாக திட்டமிட்டு, தன் தோற்றத்தையே மாற்றி மகளை கொல்ல வந்தவன் இப்போதோ இறந்தும் அவள் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கிறான்.


Leave a Reply