Epi 15_Thurathum Nizhalgal_Jansi

எப்பாடுபட்டாவது என் மகள் அவள் வாழ்க்கை, எதிர்காலம் அதை நான் காக்க வேண்டும் என தீர்மானம் எடுத்தார்.

வழக்கமாக சாவு கேசுகளில் போஸ்ட்மார்ட்டம் என ஆரம்பித்து அதன்பின் யாரால் விஷம் குடித்தது? என்ன பிரச்சனை? என போலீஸ் வரை செல்லும், இது போலவே ஆகி சுந்தரின் இறப்பு விஷயம் ஊருக்கே தெரிவதில் அவருக்கு விருப்பமில்லை. 

அதனால் அங்கு தனக்குத் தெரிந்த சிலரின் உதவியோடு, எல்லாவிடமும் அநாயாசமாய் பணத்தை வீசியெறிந்து, தற்கொலையை சாதாரண சாவாக மாற்றி, இறப்பு சான்றிதழ் வாங்கிக்கொண்டு அத்தனையிலும் அவன் அண்ணன்களின் கையொப்பத்தை பெற்று, அடுத்தடுத்து தன்னுடைய தீர்மானத்திற்கு ஏற்ப செயல்படத் தொடங்கினார்.

ஏனென்றால், அதை விடுத்தால் அப்போது அவருக்கு வேறு வாய்ப்பும் இல்லை. இப்போது செயல்படாவிட்டால் வாழ்நாள் முழுக்க தன் மகளுக்காக அவர் வருத்தப்பட வேண்டியது தான். 

எனவே, பிரேதத்தை வீட்டிற்கு கொண்டு வராமல் உடனே சாம்பலாக்க திட்டமிட்டார். மின் மயானத்திற்கு கொண்டு சென்று அவனுடைய அண்ணன்கள் என்ன நடக்கின்றது என உணரும் முன்பே, சுந்தரின் சடலத்தை சாம்பலாக்கி அவன் கையில் ஒப்படைத்து விட்டனர்.

சண்முகம் தன்னுடைய அக்கா பிள்ளைகளை தன்னுடைய பிள்ளைகள் போலவே நடத்தியவர், அவர்கள் பசியும், பட்டினியுமாய் கிராமத்திலிருந்து சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் பெரும்பான்மையான பங்கு வகித்தவர். ஆனால் தன்னுடைய எத்தனையோ பெருந்தன்மையான செயல்கள் கடந்தும், தன் மகளுக்கு ஒரு தீங்கு நிகழ்கையில் தகப்பனாக அவர் என்ன செய்யவேண்டுமோ அதையே செய்தார்.

சுந்தர் விஷம் குடித்து இறந்தது தன்னுடைய மகளுக்கு கெட்ட பெயர் வர வாய்ப்பு அளித்து விடும் என அஞ்சினார். தன் மகளை கொல்ல கத்தி எடுத்து வந்த அவனை அவரால் மன்னிக்க முடியவில்லை. 

தன்னுடைய குடும்பத்தில் ஒருவன் என்கின்ற வகையில் சுந்தரின் மரணத்தால் மனம் வலித்ததுதான், ஆனால், தன் வீட்டின் தலைவனாக தகப்பனாக தான்  சரியான முடிவு எடுத்து எடுத்து நடந்துகொண்டதாக அவருக்கு திருப்தியே.

Pages: 1 2 3 4 5 6 7 8 9


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!