“சுந்தர் ரிஷாவைக் கொல்ல வந்தானாம் அண்ணா, ஆனா அவ அகப்படலியாம்”,வெறித்தவாறு கூறியவன் தொடர்ந்தான்.
“அவ இன்னைக்கு அவன் கையில மாட்டாம போயிட்டாளே? இன்னிக்கு நம்ம தம்பி செத்த அதே நேரம் அவளும் செத்துப் போயிருந்தா மனசுக்கு கொஞ்சமாவது திருப்தியா இருந்திருக்கும்” வன்மமாய் சந்திரன் சொல்ல,
“அதுக்கென்னடா அவ இன்னிக்கு சாகலைன்னாலும், என்னிக்கும் அவளுக்கு நம்ம கையாலதான் சாவு.”
“நம்ம தம்பி ஆசைப்படுறதை செய்யறது தானே அண்ணன்களுக்கு அழகு என்ன சொல்லுற?, ஒரு நிமிஷத்துல நம்ம தம்பியை சாம்பலாக்கி தந்தானே அவ அப்பன். அது போல அந்த அவ அப்பன் கையில் அவளைக் கொன்னு சாம்பலாக்கிக் கொடுத்தா தான் என் ஆத்திரம் தீரும்…” உறுமினான் அரங்கநாதன்.
“அந்த பொட்டக் கழுதையை என் தம்பிக்கே கட்டி வச்சு பொலி போட்டுற வேண்டியதுதான்.”
“ஆமாடா, மாமா மாமான்னு உழைச்சதுக்கு நல்ல பரிசு கொடுத்திட்டான் இந்த மாமாப் பைய…” தன் தம்பியின் அஸ்தியை வெறித்தவாறு வெறித்தனமாய் பேசினான்.
“என் தம்பியோட ஆசையை தீர்த்து வைக்கிறதுதான் முதல் வேலை, எங்கே அந்த கத்தியை எடுத்து வச்சியா சந்திரா?”
“இல்லைன்னா அது அங்கேயே தான் இருந்துச்சு, நாம போயி எடுத்துக்கலாம்.”
“அதே கத்தியால அவளை அப்படியே குத்திக் குத்திக் கொன்னு, கண்டந்துண்டமா ஆக்கலை என் வெறி அடங்காதுடா…”
இன்னும் பல அவர்கள் பேசிக் கொண்டிருக்க அதைக் கேட்டுக் கொண்டிருந்த சண்முகம் கிடுகிடுவென நடுங்கினார்.
தான் தன் செயலுக்கு உரிய விளக்கம் கொடுத்தால் அவர்கள் புரிந்துக் கொள்வார்கள் என அவர் எண்ணி இருந்தார். ஆனால், அவர்களுக்கு அந்த கத்தி முதலாக விபரம் தெரிந்து இருக்கிறது என்பதே அவருக்கு அப்போதுதான் புரிந்தது.
சகோதர பாசம் இப்படியா கண்களை மறைக்கும்? தன்னுடைய செயல் அவர்களுடைய இத்தனை நாள் பணிவையும், பயத்தையும் விரட்டி கோபத்தையும், வன்மத்தையும் வெளிக்கொணர்ந்து இருக்கிறது என்று அப்போது தான் முழுமையாய் உணர்ந்தார்.
இவர்கள் வன்மத்தையும், வேகத்தையும் பார்த்த பொழுது எப்படியாவது தன் மகளை அவர்களிடமிருந்து பாதுகாத்து விட வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருந்தது. உடனே அவர்கள் கண்ணில் படாதவாறு அவசரமாய் பின்பக்கமாக வெளியேறினார்.


Leave a Reply