“அதுக்கப்புறம் எங்கே போனீங்கன்னு கண்டு பிடிக்க முடியலை…”
“அப்புறம் எப்படி?” வியப்பாய் நோக்கிய ரிஷியை
சண்முகம் என் கிட்டே சில நாட்களா, “அரங்கநாதனும், சந்திரனும் இப்போ எல்லாம் முன்னே மாதிரி இல்லைடா முன்னை விட மாறிட்டாங்க, என் கிட்டே முன் போல அன்பா பேசறாங்க அப்படிச் சொல்லிட்டு இருந்தான். இதையெல்லாம் நம்பிடாதேன்னு அவன் கிட்டே நானும் சொல்லி இருந்தேன். அவங்களோட திடீர் மாற்றம் எனக்கு கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது.”
“அதனால, உங்களை பின் தொடர எனக்கு வாய்ப்பில்லாத போதும், அவங்க போன்களை ட்ரேஸ் செய்ய ஆரம்பித்தேன். அது மூலமாதான் எனக்கு எல்லா தகவலும் கிடைச்சது.”
“ரிஷாவை அந்த பாழடைஞ்ச பங்களாவில் நாங்க கண்டு பிடிக்கிற நாளுக்கு முன் தினம் சாயந்திரம் தான் அவனுங்க மஹாராஷ்டிரா வந்திருக்கானுங்க. அவன் மஹாராஷ்டிரா வந்து, அந்த காட்டு வீட்டுக்கு ராத்திரியே வரவும், ஏற்கெனவே அவங்களை பின்பற்றிட்டு இருந்த நாங்களும் மொபைல் லொகேஷன் படி பின்பற்றி வர அவ்வளவு சிரமமா இல்லை. உடனே புறப்பட்டு வந்துட்டோம்.”
“உங்களுக்கு போலீஸ்லாம் அவ்வளவு பழக்கமா சார்?”
“ம்ம் என்னோட நெருங்கிய உறவினன் ஒருத்தன் போலீஸ் உயர் பதவியில் இருப்பதால் அது சாத்தியமாச்சு.”
பெருமூச்செறிந்தார் சண்முகம்… மகளின் கைப்பற்றி பல முத்தங்களிட்டார்.
“ரொம்ப நன்றிடா ருத்ரா, உன் உதவியை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்”, நண்பனை நோக்கி கை கூப்பினார்.
“ச்சே கையை கீழேப் போடு, அவ எனக்கும் மக மாதிரி தானேடா, இதுக்கெல்லாம் நன்றி சொல்லுவியா?”, கையை தட்டி விட்டார்.
சமையல் ஆகி விட்டதாய் வந்து சமையல்காரர் சொல்ல, விடைத் தெரியாத இன்னும் பல கேள்விகளோடு அனைவரும் ருசித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
கூச்சமாய் உணர்ந்த இந்தரையும், ரிஷியையும் பேச்சில் இழுத்தவாறு, சகஜமாக்கி சாப்பிட வைத்துக் கொண்டிருந்தாள் ரிஷா. விளையாட்டுப் பேச்சுக்கள் கலகலத்தன.
சாப்பிட்டு இனிப்புக்களோடு வந்து மறுபடி சோபாவில் அனைவரும் வந்து அமர,
அடுத்தது சண்முகம் தான் சொல்லணும், என்னாச்சு எப்படி அவங்க கிட்டே போய் மாட்டின? கேட்டார் கனகவேல். தன் நண்பர்கள் இருவரும் தனக்குத் தெரியாமல் ஒரு விஷயம் செய்திருக்கிறார்களே என்று எண்ணினாலும், அதற்கும் ஏதாவது காரணம் இருக்கும் என உணர்ந்ததால் அவர் பெரிது படுத்தவில்லை.
அனைவரும் அவர்கள் மேல் கவனம் பதித்தனர். ஏற்கெனவே பலமுறை கேட்டு வருந்தி இருந்தாலும், கண்ணில் சேர்ந்த கண்ணீரை இமைகள் தட்டி தடுத்தவளாக மறுபடி கேட்க தயாரானாள் ரிஷா.
அன்னிக்கு அரங்கநாதன் ரொம்ப வருந்தி வருந்தி சாப்பிட அழைக்க வந்தான், “உங்க கம்பெனி ஆர்டர்லாம் பறிச்சது எல்லாம் ரொம்ப தப்புதான். நாங்க செஞ்சது துரோகம், எங்களை மன்னிச்சுடுங்கன்னு” கதறினான். ‘என்னடா இது நாம வளர்த்தப் பையன் இவ்வளவு கெஞ்சியும் எப்படி கல்லு போல இருக்கிறதுன்னு தோணுச்சு.’
“சரி சாப்பிட வர்றோம்னு சொல்லி வீட்டை எல்லாம் பூட்டிவிட்டு புறப்பட்டோம். போகும் போது உன் கிட்ட சொல்லக் கூட எனக்கு தோணலை பாரு…” என ருத்ரபாண்டியனை நோக்கி சொன்னவர் தொடர்ந்தார்,
“அங்கே போய் சாப்பிட்டதுதான் தெரியும், அதற்கப்புறம் ஒரு இருட்டறையில தான் விழிச்சோம். எங்களை சேர்ல உட்கார வைச்சு, எங்களோட கை எல்லாம் கட்டிப் போட்டிருந்தான்.”
“ரொம்ப சாமார்த்தியமா நடந்துக்கிறதா நினைச்சியோ? அவ இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சாச்சு, உன் மகளை கொன்னுட்டுத்தான் உன் கிட்ட மறுபடி பேச்சு’ ன்னு வந்து உறுமினான். அப்புறம் தான் அவனுங்க ரெண்டு பேர் கூட, அவங்க பொண்டாட்டிகளும் ஏன் மைதிலியும் கூட கூட்டுன்னு புரிஞ்சது” அதுக்கப்புறம் என்ன? போலீஸ் வந்து எங்களை மீட்டாங்க…
துக்கத்தில் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டார்.


Leave a Reply